Tuesday, June 28, 2011

ஆக்கம் பெறுமா 'ஹாக்கி'

நமது நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது வரையில் நமக்குத்தெரியும். ஆனால் இவ்விளையாட்டுக்கு அரசுகள் தரும் ஊக்கம் (?), ஸ்பான்ஸர்கள் தரும் ஆதரவு(?), ரசிகர்கள் அளிக்கும் உற்சாகம் (?) இவற்றைக் காணும்போது நான் சொன்ன முதல் வரியை நம்புவது கடினம். அரபு நாடுகளின் தேசிய விளையாட்டான கால்பந்துதான் அந்நாடுகளின் ரசிகர்கள் மனதிலும், அரசின் ஊக்குவிப்பிலும் முதலிடத்தில் உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பாஸ்கட் பாலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பேஸ்பாலும் அப்படியே. ஏன் எல்லா நாடுகளிலும் தேசிய விளையாட்டுக்கே முதலிடம். 

ஆனால், நமது இந்திய ரசிகர்களின் மனதில் முதலிடம் பெறுவது கிரிக்கெட் என்பது 200 சதவீதம் உண்மையென்பதில் ஐயமில்லை. இரண்டாம் இடம் கால்பந்து, மூன்றாவது இடம் டென்னிஸ், பின்னர் கபடி, குத்துச்சண்டை...... உண்மையில் நமது தேசிய விளையாட்டான ஹாக்கி எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத புதிர். எப்படி இந்த அவல நிலை உருவானது?. ஒரு காலத்தில் ஹாக்கியில் கொடிகட்டிப்பறந்த நமது பாரம்பரியம் என்னவாயிற்று?. ஒருகாலத்தில் நமது ஹாக்கி வீரரான பியான்சந்த் போன்றவர்களைப் பார்த்து, உலக ஹாக்கி அணி வீரர்கள் நடுங்கிய காலம் ஏன் மலையேறிப்போனது?.  

பியான்சந்திடம் பந்து கிடைத்துவிட்டால் அது நிச்சயம் கோல்தான் என்று ரசிகர்கள் முடிவு செய்யும் வண்ணம், தன் வளைந்த மட்டையால் பந்தை சுழற்றி சுழற்றிக் கொண்டுபோய் எதிரணி கோல்கீப்பரை கிலியடையவைப்பதன் மூலம், 'இவர் கையில் இருப்பது மட்டையா அல்லது மந்திரக்கோலா' என்று ரசிகர்களை வியப்படைய வைத்த காலம் எல்லாம் போய், இப்போது பாஸிங் என்பதே அரிதாகிப்போன நிலையில், இப்போது வீரர்களிடம் பந்து கிடைத்தால் Hit & Run என்ற முறையில், (அடித்து விட்டு பந்தின் பின்னால் ஓடுவது) என்பது என்ன வகையான பயிற்சிமுறை?. 'தாக்குதல் ஆட்டம்' ஆடுவதற்குப்பதில் 'தடுப்பாட்டம்' ஆடினால் போதும், அதாவது தான் கோல் போடுவதைவிட, எதிரணி கோல் போடாமல் தடுப்பதுதான் ஆட்டம் என்பது போல பயிற்சிமுறைகள் கீழிறங்கிய பின்னும், நமது வீரர்கள் நன்றாகவே ஆடுகிறார்கள் என்பது ஆறுதல் என்றால், அவர்களுக்குப் போதுமான ஊக்கம் அளிக்கப்படுவதில்லை என்பது நிச்சயம் வேதனையே.

போதுமான ஊக்கம், உற்சாகம், ஆதரவு இவற்றைத்தராமல் சும்மா போய் மெடலை அள்ளிக் கொண்டுவா என்று நிர்ப்பந்தப்படுத்தினால் அவர்களும் என்ன செய்வார்கள்?. சென்ற முறை உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 'சூப்பர் எட்டுக்குள்' கூட நுழைய முடியாமல் திரும்பிய இந்திய அணியை, ரசிகர்களும், ஸ்பான்ஸர்களும் கைவிட்டு விட்டார்களா?. தொடர்ந்து ஊக்கம் தந்து இம்முறை கோப்பையை வெல்ல வைக்கவில்லையா?. ஆனால் ஹாக்கியில் இந்தியா தோற்றால் போச்சு, ஆயிரத்தெட்டு குறை சொல்லி சவக்குழியில் தள்ள தயாராக இருக்கிறார்கள்.

அவர்கள் சொல்லும் குறையென்ன?. 'இவங்க என்னப்பா, ஒரு மேட்ச் முடிந்து வந்து மட்டையை (ஸ்டிக்) கீழே வைத்தால், அடுத்த மேட்சுக்குத்தான் கையில் எடுக்கிறாங்க' என்பதுதானே. வாதத்துக்கு அது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், அவர்களை ஊக்கப்படுத்தாதது யார் குற்றம்?. எத்தனை இடங்களில்தான் அவர்கள் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானங்களில் ஆடிக்கொண்டிருப்பார்கள்?. தங்கள் கண்முன்னே மாவட்ட அளவிலான கிரிக்கெட்டுக்குக்கூட ரசிகர்கள் கூட்டம் திரளும்போது, ஹாக்கிக்கு தேசிய அளவிலான போட்டிகளில்கூட காலரிகள் காலியாக இருப்பதைப் பார்த்து ஹாக்கி வீரர்கள் விரக்தி அடைவது இயற்கைதானே.

கிரிக்கெட் வீரர்களில் பட்டோடி நவாப் மன்ஸூரலிகானில் துவங்கி சுரேஷ் ரெய்னா வரையில் குறைந்தது நூறு கிரிக்கெட் வீரர்களின் பெயரை மூச்சுவிடாமல் சொல்லத்தெரிந்திருக்கும் நமது இளைஞர்களுக்கு நமது ஆக்கி வீரர்கள் எத்தனை பேரை சொல்லத்தெரியும்?. (அன்றைக்கு ஒரு மேட்சில் ரசிகர்கள் கேலரி பக்கம் கேமரா திரும்பியபோது அங்கிருந்த ஒரு மாணவி ஒரு அட்டையில் ‘Hi Raina, Marry me என்று எழுதி, அதைக் கேமராவுக்கு காட்டியபோது ஆச்சரியம் அடைந்தேன்). டென்னிஸில்கூட லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா என்று உள்நாட்டவர் மட்டுமல்லாது ரோஜர்பெடரர், ரபேல் நடால், வீனஸ் வில்லியம்ஸ், மரிய ஷரபோவா என்று சர்வதேச நட்சத்திரங்களைக் கூட அனாயாசமாகச் சொல்கின்றனர். ஆனால் ஹாக்கி வீரர்களை யாருக்குமே தெரியவில்லை.

ஒருகாலத்தில் ஒலிம்பிக் பதக்கத்துக்கு ஹாக்கியையே நம்பியிருந்த நமது நாடு, தற்போது துப்பாக்கி சுடும் வீரர்களாலும், குத்துச்சண்டை வீரர்களாலும் ஒருசில பதக்கங்களைப்பெற்று அதன்மூலம் கௌரவம் காப்பாற்றப்பட்டு வருகிறது.  

பாஸ்கரன் தலைமையில் ஒலிம்பிக்கில் தங்கத்தையும், தன்ராஜ்பிள்ளை தலைமையில் ஆசிய கோப்பையையும் வென்ற பிறகு நமது ஹாக்கி சொல்லிக்கொள்ளும்படியான இடத்தைத் தக்க வைக்கவில்லை. ஒருமுறை 'ஹாங்காங்கில் நடந்த போட்டியில் மலேசியாவை இந்திய அணி தோற்கடித்தது' என்ற செய்திக்கு கமெண்ட் எழுதிய ஒருவர் 'இப்படி ஆங்காங்கே கிடைக்கின்ற சில வெற்றிகளின் மூலம்தான் இந்திய அணியின் மானம் காப்பாற்றப்படுகிறது' என்று கிண்டலடித்திருந்தார். கிரிக்கெட்டில் எவ்வளவு மோசமாகத் தோற்றபோதிலும் (தொடர் வெற்றிகள் எல்லாம் சமீப காலமாகத்தான்) ஆறுதல் அளித்து ஆதரவு தரத் தயாராக இருக்கும் நமது ரசிகர்கள், மற்ற விளையாட்டுக்கு, குறிப்பாக தேசிய விளையாட்டான ஆக்கிக்கு ஆதரவு அளிக்கத் தயங்குவது... ஸாரி... ஆதரவு அளிக்க மறுப்பது ஏனென்று தெரியவில்லை.

'ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா' என்று கவிஞர் வாலி பாடல் எழுதினார். அந்த வரிகள் விளையாட்டுக்கும் பொருந்தும். மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்ற ககன் அஜீத்சிங், மற்றும் தீபக் தாகூர், அர்ஜுன் ஹாலப்பா போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தும் நமது ஹாக்கி அணி சோர்வுற்றிருப்பது போதிய ஊக்கமும், ஆதரவும் அளிக்கப்படாமையினால்தான்.

இன்னொரு விளையாட்டை குறை சொலவதாக நினைக்க வேண்டாம். மற்ற் வீரர்கள் மைதானம் முழுக்க தேமேயென்று நின்றிருக்க, ஒவ்வொரு பந்தும் வீசும் முன் பெரிய ஆலோசனைகள் செய்த பின் வீச, அவர்கள் ஆலோசனை முடியும்வரை பேட்ஸ்மேன் மட்டையால் தரையைக் கொத்திக் கொண்டிருக்கும்படியான ஒரு விளையாட்டுக்கு இவ்வளவு ஆதரவு தரும் ரசிகர்களும், ஸ்பான்ஸர்களும், வாரியங்களும்... ஒரே நேரத்தில் அனைத்து வீரர்களும் சுறுசுறுப்பாக விளையாடும் ஹாக்கி விளையாட்டுக்கு ஆதரவு தந்து ஊக்கப்படுத்தலாமே.

நடக்குமென்று நம்புவோமா...?.  

காஷ்மீரில் 'தேன் நிலவு'

அன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் 'தேன் நிலவு' படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதரும் அவரது சித்ராலயா யூனிட்டாரும் எவ்வளவு சிரமங்களை மேற்கொண்டனர் என்பதை முன்னொருமுறை 'பொம்மை' சினிமா மாத இதழில் தெரிவித்திருந்தார். அந்தப்பகுதி இங்கே...

ஸ்ரீதர் சொல்கிறார்:

"தேன் நிலவு படத்தை காஷ்மீரில் ஐம்பத்திரண்டு நாடகள் ஷூட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதியல்லாம் அப்போது கிடையாது. அதிலும் நாங்கள் இருந்த இடம் ஸ்ரீநகரில் இருந்து வெகு தொலைவில் ஒரு கிராமத்துக்கு அருகில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரேயொரு சினிமா தியேட்டர்தான் உண்டு. காஷ்மீரில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை சென்னைக்குப் போய் போட்டுப்பார்த்து சரியாக வரவில்லை யென்றால் மீண்டும் ஷூட் பண்ணுவது எல்லாம் முடியாத காரியம். அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும்போதே, எடுத்தவற்றையெல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விருமிபினோம்.சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக்கொள்ளலாமே என்பதனால்.

காஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷூட்டிங்  எடுத்தவற்றை போட்டுப்பார்க்க ஃபிலிம் ரோலகளை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும்.

அப்போதெல்லாம் ஸ்ரீநகரில் இருந்து வாரம் இரண்டுமுறை மட்டும் 'டக்கோட்டா' விமானம் டெல்லிக்குப்போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன மற்றும் ஒருவரை, நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச்சுருள்களோடு அனுப்பி வைப்போம். அவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னைசென்று, அங்கு விஜயா லேபட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டெல்லி வழியாக ஸ்ரீநகர் வருவார்கள்.

அவ்வாறு சென்னையிலிருந்து பிரிண்ட் போட்டு, கொண்டுவரப்பட்ட அந்த படப்பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப்போய் அவர்களிடம் அனுமதி பெற்று, அங்கு வழக்கமான இரவுக்காட்சி முடிந்தபிறகு, இரவு ஒரு மணிக்கு மேல் அங்குள்ள புரொஜக்டரில் திரையிட்டு நான், கோபு, ஜெமினி, வைஜயந்தி (மாலா), நம்பியார், வின்சென்ட், பி.என்சுந்தரம் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம். மனதுக்கு திருப்தியாக இருக்கும். திருப்தியில்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம். இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து, படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம்.

உண்மையில் 'தேன் நிலவு' படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்புக்காக நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து, அந்த தியேட்டர் இருக்கும் கிராமம் வரையில் காரிலேயே செல்லும் அளவுக்கு ஒழுங்கான பாதை கிடையாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும். அப்படிப்போகும்போது,  திரு M.N.நம்பியார், தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்ட்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது".

 இவ்வாறு ஸ்ரீதர் சொல்லியிருந்தார்..

எந்த வித வசதியும் இல்லாத அந்த நாட்களில் நல்ல படங்களை நமக்கு தர வேண்டும் என்று அவர்கள் பட்ட கஷ்ட்டங்களை அப்படங்களை உருவாக்கியவர்கள் வாயிலாகக் கேட்கும்போது உண்மையில் மலைப்பு ஏற்படுகிறது.

இதே போல பெரிய கேமராமேனாக இருந்து பிற்காலத்தில் கௌபாய் டைப் படங்களின் இயக்குனராக மாறிய எம்.கர்ணன், தான் கேமராமேனாக இருந்தபோது நிகழ்ந்த அனுபவங்களை ஒருமுறை சொல்லியிருந்தார். அவர் சொன்னது.....

'நான் மாடர்ன் தியேட்டர்ஸில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியபோது, அப்போது ட்ராலி வசதிகள் எல்லாம் கிடையாது. கேமராவை ஒரு இடத்தில் வைத்துவிட்டு கதாபாத்திரங்களை எதிரில் நிற்க வைத்து நடிக்க வைப்போம். முடிந்ததும் கேமராவை வேறு இடத்துக்கு மாற்றுவோம். ஆனால் நடிகர்கள் நடிக்கும்போது கேமராவும் அங்குமிங்கும் மூவ் ஆனால் நன்றாயிருக்குமே என்று நானும் இயக்குனர் திரு டி.ஆர் சுந்தரமும் யோசித்தோம். அதன்படி, நான் கேமராவை கையில் வைத்துக்கொண்டு காரின் முன்புற பேனட்டில் உட்கார்ந்துகொள்ள, இயக்குனர் காரை ஸ்டார்ட் செய்து மெல்ல முன்னோக்கிப்போவதும், பின்னர் ரிவர்ஸில் எடுப்பதுமாக ஓட்டிக்கொண்டிருப்பார். அதுபோல இன்னொரு ஷாட்டில் கதாபாத்திரங்களை திறந்தவெளியில் நடிக்க வைத்துவிட்டு, அதேபோல் நான் கேமராவுடன் பேனட்டில் அமர்ந்துகொள்ள, அவர் நடிகர், நடிகையரைச்சுற்றி வட்ட வடிவத்தில் காரை மெதுவாக ஓட்டிக்கொண்டிருப்பார். படம் முடிந்து திரையிடப்பட்டபோது, இத்தகைய மூவ்மெண்ட் காட்சிகள் அப்போது திரைத்துரையினர், பத்திரிக்கைகள், ரசிகர்கள் என அனைவராலும் பாராட்டப்பட்டன"

இவ்வாறு எம்.கர்ணன் தெரிவித்திருந்தார். தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் அவை சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அப்போது அது சாதனைதானே.

Monday, June 27, 2011

சிவாஜி பற்றி ஸ்ரீதர்

எனது பதிவுகளைப் படித்து, தங்களது மேலான பின்னூட்டங்களையும், பதிவுகள் சம்மந்தமான கூடுதல் விவரங்களையும் பதித்து வரும் அனைத்து நல் இதயங்களுக்கும் என் நன்றி.

(முன்பு இதே தளத்தில் பதிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களுக்காக நீக்கப்பட்டிருந்த இப்பதிவு மீண்டும் இடம் பெறுகிறது. ஏற்கெனவே படித்தவர்களுக்கு பழையது, படிக்காதோருக்கு புதியது)

தமிழ் சினிமா இதழ்களில் முதன்மை வாய்ந்த 'பொம்மை' மாத இதழில் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் முன்னொருமுறை தன் மனம் திறந்த கருத்துக்களைக் கூறியிருந்தார். அவற்றுள் நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப்பற்றி தெரிவித்திருந்த கருத்துக்கள் ம்னதைக் கவர்ந்ததால், அப்பகுதி மட்டும் இங்கு இடம் பெறுகிறது. அதே கட்டுரையில் இயக்குனர் ஸ்ரீதர் தனது 'தேன் நிலவு' திரைப்படத்தை காஷ்மீரில் படமாக்க பட்ட கஷ்ட்டங்கள் பற்றிக்கூறியிருந்தது அடுத்த பதிவாக இடம் பெறுகிறது.

எனக்கும் தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தபோது அதில் சிவாஜி கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் அப்போது (1963) அவர் 'கர்ணன்' படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்தார். ஆனாலும் தன் குடும்பத்தினர் அனைவரையும் கலந்துகொள்ளச்செய்தார். திருமணச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் இருந்து ட்ரங்கால், சிவாஜி பேசுகிறார் என்றார்கள். உடனே போனை வாங்கிப்பேசினேன். மறுமுனையில் சிவாஜி எனக்கு மனதார வாழ்த்துச்சொன்னார். அத்துடன் 'நம்ம வீட்டிலிருந்து எல்லோரையும் வரச்சொல்லியிருந்தேனே, வந்திருக்காங்களா?' என்றுகேட்டார். சற்று முன்னர்தான் வி.சி.ஷண்முகம் எனக்கு கைகுலுக்கி வாழ்த்துச் சொல்லியிருந்தது நினைவுக்கு வர, 'ஆமாண்ணே, வந்திருக்காங்க' என்றேன். 'உன் கல்யாணத்தில் கலந்துகொள்ள கமலாவுக்கும் ரொம்ப ஆசை. ஆனா நான் இங்கே அழைச்சிக்கிட்டு வந்திட்டேனே' என்றார். சில நாள் கழித்து அவர் ஜெய்ப்பூரில் இருந்து திரும்பி வந்ததும், அவரது இல்லத்தில் எங்கள் இருவரையும் அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். புறப்படும்போது கமலா அம்மா ஒரு தங்கச்சங்கிலியை என் மனைவிக்கு அணிவித்தபோது, சிவாஜி 'இதோ பாரும்மா, இதுவும் உனக்கு ஒரு மாமியார் வீடுதான். நீ எப்போ வேணும்னாலும் வரலாம் போகலாம்' என்றவர் என்னைப்பார்த்து, 'இதோ பாரு, இதுவரைக்கும் சதா ஸ்டுடியோ விலேயும் சித்ராலயா ஆஃபீஸ்லேயும் பழியா கிடப்பே. இனிமேலாவது ராத்திரியில் நேரத்கோடு வீட்டுக்கு வந்துசேர். அதுமட்டுமில்லே, காலேஜில படிச்சிக்கிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே. அதுக்காக அந்தப்பொண்ணோட படிப்பை நிறுத்திடாதே. தொடர்ந்து படிக்கட்டும்' என்று அட்வைஸ் பண்ணினார். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நல்லா படிக்கணும்ங்கிறது அவர் எண்ணம். அந்த நேரத்தில் அவரோடு விடிவெள்ளி படம் பண்ணியபிறகு படம் எதுவும் பண்ணவில்லை. மற்றவர்களோடுதான் படம் பண்ணிக்கொண்டிருந்தேன்.

('காதலிக்க நேரமில்லை... காதலிப்பார் யாருமில்லை....')

'
காதலிக்க நேரமில்லை' படம் பார்த்துவிட்டு சிவாஜி உடனே போன் செய்து பாராட்டினார். 'உன் பேரைச் சொன்னாலே 'அழுமூஞ்சி டைரக்டர்' என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிறமாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே. எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்' என்றார். 'அண்ணே, 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்' என்றேன். ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை. இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப்பற்றிக் கேட்பார். 'அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டுபேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்' என்றேன். சொன்ன மாதிரியே அந்தக்கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர். 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற அந்தக்கதைதான் 'ஊட்டி வரை உறவு' என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.  

('பூமாலையில்... ஓர் மல்லிகை...')
சில பல காரணங்களால் நான் அவரை வைத்து தயாரித்து இயக்கி வந்த ஹீரோ 72' படம் வெளியாவது தள்ளிப் போய்க்கொண்டிருந்தபோதிலும், (பின்னாளில் இப்படம் 'வைர நெஞ்சம்' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியானது) எங்களுக்கிடையில் இருந்த நட்பில் விரிசல் விழுந்ததில்லை. 'உரிமைக்குரல்' பட பூஜைக்காக சிவாஜியை சென்று அழைத்தேன். 'பூஜையை சத்யா ஸ்டுடியோவில் வச்சிருக்கே. அண்ணன் (MGR) ஸ்டுடியோ ஆரம்பிச்சு இதுவரைக்கும் ஒருநாள் கூட என்னை அங்கே கூப்பிட்டதில்லை. அப்படியிருக்க இப்போ நான் எப்படி வரமுடியும் சொல்லு. ஆனா, வராவிட்டாலும் என்னுடைய வாழ்த்துக்கள் உனக்கு நிச்சயம் உண்டு' என்று வாழ்த்தினார்.

இவ்வாறு இயக்குனர் ஸ்ரீதர் கூறியிருந்தார். (என்ன காரணத்தாலோ நடிகர்திலகத்தை வைத்து அவர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண் படங்களைப்பற்றி எதுவும் கூறவில்லை. சொல்ல மறந்துவிட்டாரா அல்லது வேண்டுமென்றே தவிர்த்து விட்டாரா என்பது தெரியவில்லை).

Sunday, June 5, 2011

பட்டுக்கோட்டை பிரபாகர்

சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், என் சொந்த ஊரைப்பற்றிக் கேள்விப்படும் தோழிகள் பெரும்பாலோர் தவறாமல் கேட்பது, 'உங்க ஊர் பக்கத்துலதானே பட்டுக்கோட்டை பிரபாகர் இருக்கார். அவரை சந்திச்சிருக்கியா? பேசியிருக்கியா?' என்ற கேள்வியைத்தான். சந்தித்ததில்லை என்று மொட்டையாகச்சொல்லி அவர்களின் கிண்டலுக்கு ஆளாவதை விட, மடக்குவோம் என்ற நினைப்பில், 'ஏண்டி, நீங்கள்ளம் சென்னையில்தானே இருக்கீங்க?. சென்னையிலுள்ள ஏராளமான எழுத்தாளர்களில் எத்தனை பேரை நீங்க சந்திச்சிருக்கீங்க?' என்று பதில் கேள்வி கேட்டு தப்பிப்பதுண்டு.

இருந்தாலும் திரு. பிரபாகரின் எழுத்துக்களை தொடர்ந்து படித்துவந்தபோது எனக்கே ஒரு ஆசை தோன்றியது. இவ்வளவு சுவாரஸ்யமான எழுத்தாளராக இருக்காரே. அடுத்தமுறை ஊருக்குப்போகும்போது அவரை சந்திக்க முயற்சித்தால் என்ன என்ற ஆவல் ஏற்பட்டது. ஆனால் அந்த ஆவல் உடனே நிறைவேறவில்லை. இடையில் பலமுறை ஊர் சென்று வந்தபோதும் இந்த விருப்பம் மட்டும் கைகூடவில்லை. அவருடைய எழுத்துக்களைப் படிப்பது மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. கல்லூரி முடிந்தது, வேலை கிடைத்தது, திருமணமும் ஆனது. வாழ்க்கை வேறுபக்கம் பயணிக்கத்துவங்கியதும் பட்டுக்கோட்டையாரை சந்திக்கும் ஆவல் இதயத்தின் ஒரு மூலையில் கிடத்தப்பட்டது. ஒருநாள் என் கணவர் பிரகாஷ் சொன்னார், 'சாரூ சேதி தெரியுமா?. உன் அபிமான எழுத்தாளர் பிரபாகரை இன்னைக்கு எதிர்பாராமல் சந்திச்சேன். சென்னை வந்தவர் இன்னைக்கே ஊர் திரும்புவதாகச்சொன்னார். இன்னும் ஒருநாள் இருந்திருந்தால் உன்னையும் அழைச்சிக்கிட்டுப் போயிருப்பேன்' என்றார்.

அவ்வளவுதான், பிரபாகரைசந்திக்கும் எண்ணம் மீண்டும் மனதின் பிரதான இடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டது. அதற்கேற்றாற்போல அடுத்த மாதம் என் உறவினர் இல்லத் திருமணத்துக்கு ஊர் செல்ல வேண்டியிருந்தது. துரதிஷ்டவசமாக பிரகாஷ் வர முடியவில்லை. நாம் மட்டும் சென்றேன். என் அண்ணனின் நண்பரான கொழும்பு ஸ்டோர் பஷீர் அவர்களிடம் சொல்லி போனில் அப்பாயிண்மென்ட் வாங்கினேன். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு தலையாரித்தெருவில் உள்ள அவருடைய வீட்டுக்குச் சென்றேன். வாசலிலேயே ஒரு பெர்ப்யூம் கடை வைத்து வேறொருவர் அதைக்கவனித்து வருகிறார்.

என்னைவிட இளைய வயதுடைய பெண் வந்து, 'நீங்கதான் சாரதாவா?. அண்ணன் இருக்கிறார் வாங்க என்று என்று அழைத்துச்சென்றார். கூடத்தில் பிரம்பு சோபாக்களில் ஒன்றில் அமர்ந்திருந்த பட்டுக்கோட்டை பிரபாகர் சற்று எழுந்து கைகூப்பினார். நானும் பதிலுரைத்ததோடு, அப்போது அவர் ஏதோ ஒரு விருது வாங்கியிருந்ததற்கு வாழ்த்துச் சொன்னேன். எதிர் சோபாவில் உட்காரச் சொன்னவர்அவரே பேச்சை ஆரம்பித்தார்.

'வழக்கமாக வர்ரவங்க சும்மா காலின் பெல்லை அடிச்சுட்டு உள்ளே வருவாங்க. நீங்க போனில் அப்பாயின்மெண்டெல்லாம் கேட்டு ஒரு வி.ஐ.பி. சூழ்நிலை கிரியேட் பண்ணிட்டீங்க. ரொம்ப நன்றி' என்றார். 'என்ன சார் நீங்க, இவ்வளவு எழுதிட்டு இன்னும் அடக்கமாக இருக்கீங்க. சென்னையில் பாருங்க. நாலு சிறுகதை எழுதி பிரசுரம் ஆனதும் ரொம்ப பிஸிம்பாங்க' என்றேன். பதிலுக்கு 'ஐயோ, அந்த பந்தாவெல்லாம் எனக்கு வேண்டாம்' என்று கூச்சமானார்.

என் கல்லூரி நாட்களில் இருந்து அவருடைய எழுத்துக்கள் மீது இருந்த ஈர்ப்பு, தோழிகளின் விசாரணை, சந்திக்க விரும்பிய ஆவல், காலப்போக்கில் இல்லற வாழ்வில் திரும்பியதும் அவரது சந்திப்பு இரண்டாம் பட்சமாகப் போனது எல்லாவற்றையும் சொன்னேன். ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தார். அவரைப்பற்றிய விசாரிப்புகளுக்கும் வெளிப்படையாக பதில் சொன்னார். ஒருமாதம் முன்பு சென்னையில் என் கணவர் சந்தித்ததைச் சொன்னேன். அதற்கு அவர், 'சென்னையில் என்னை பலபேர் சந்திச்சாங்க, உங்க வீட்டுக்காரர் யாருன்னு சரியாக நினைவில்லை ஸாரி, இப்போ சாரும் கூட வந்திருக்கலாமே' என்றார். அவருக்கு அலுவலகத்தில் லீவு கிடைக்கவில்லை என்று சொன்னதும் சற்று யோசித்தவர், ', அப்படீன்னா அந்த இன்கம் டாக்ஸ் பார்ட்டியா?' என்று கேட்க நான் குதூகலத்துடன் அவரேதான் என்றேன்.

பல்வேறு விஷயங்களையும் ரொம்ப சுவாரஸ்யமாகப்பேசினார். இடையிடையே நான் சம்பிரதாயத்துக்காக 'ஸாரி சார், உங்க நேரத்தை ரொம்ப எடுத்துக்கிறேனோ' என்று கேடுக்கொண்டேன். 'நோ, நோ அப்படியெல்லாம் இல்லை'ன்னு சொல்வார்னு தெரியும். அப்படியேதான் சொன்னார். ஒரு நடுத்தர வயது பெண்மணி இருவருக்கும் தட்டுக்களில் சூடான மசால்வடை கொண்டு வந்து வைத்தார். என்னை சாப்பிடச்சொல்லி விட்டு தானும் சாப்பிட்டுக்கொண்டே பேசினார் பிரபாகர்.

'ஒரு கதைக்கான கருவை எங்கிருந்து எடுக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'கதைக்கரு என்பது எங்கிருந்தும் எடுப்பது அல்ல. நம்மைச்சுற்றி நடப்பவற்றை கூர்ந்து கவனித்தாலே போதும். அதற்கு கைகால் வைத்து கதையாக்கி விடலாம். இப்போது நாம் இருவரும் பேசிக் கொண்டிருப்பதையே நான் ஒரு கதையாக்கி விடுவேன். அப்படி ஒரு கதை பண்ணி அது பிரசுரமானால் போன் பண்றேன். படிச்சுப்பாருங்க' என்றவர் மேலும் தொடர்ந்தார்...

'உதாரணமாக, இங்கிருந்து த்ஞ்சாவூருக்கு பஸ்ல போறீங்க. ஒரத்தநாடு பஸ் ஸ்டாண்ட்லே நிற்கும்போது அங்கே ரெண்டுபேருக்கிடையில் வாய்ச்சண்டை நடக்குது. நீங்கன்னா ஏதோ சண்டை நடக்குதுன்னு விட்டுடுவீங்க. ஆனா நாங்க (எழுத்தாளர்கள்) அந்தச்சண்டையைக் கூர்ந்து கவனிப்போம். எதுக்காக அந்த சண்டை, அதன் பின்னனி என்ன, அதன் முடிவு என்ன என்பதெல்லாம் அவர்கள் சண்டையிலேயே கிடைக்கும். அவங்க பேச்சைக்கவனிங்க 'ஏண்டா நீ பெரிய பண்ணைக்காரனா இருந்தா நாங்க பயப்படனுமோ. ஒழுங்கா வாங்கின கடனை வச்சிட்டு வேலையைப்பார் (ஓகோ, இவனிடம் அவன் கடன் வாங்கியிருக்கான்). சரிதான் நிறுத்துடா, பேராவூரணி சேர்வை வீட்டுல சம்பந்தம் வச்சிக்கிட்ட திமிரோ (ஓகோ, அப்போ இவன் பேராவூரணியில் பெரிய புள்ளி வீட்டில் சம்பந்தம் பண்ணியிருக்கான்). ஏண்டா, உன் தம்பியை துபாய்க்கு அனுப்பனும்னு பணம் கடன் வாங்கி எத்தனை மாசமாச்சு (ஓகோ அவனுக்கு ஒரு த்ம்பி, அவனும் துபாயில்) பணத்தைக்கொடுக்க முடியலைன்னா மதுக்கூர்ல இருக்கிற நிலத்தை எழுதிக்கொடுடா (ஓகோ, கடன் வாங்கியவனுக்கு மதுக்கூரில் நிலம் இருக்கிறது)  இப்படியே சண்டையில் கிடைக்கின்ற விஷயங்களை சேகரிச்சு, அதில் ஒவ்வொருத்தனுக்கும் குடும்பம், குழந்தை குட்டிகள்னு உருவாக்கி.... இப்படியே கைகால் வச்சு, ஊர், பெயரையெல்லாம் மாற்றி அதை ஒரு சுவையான கதையாக்கிடுவோம்' என்றார். கேட்கவே பிரமிப்பாக இருந்தது.

முதலில் வாசலில் வந்து அழைத்த பெண்ணை அழைத்து அறிமுகப்படுத்தினார். 'இவள் என் தங்கை. கிட்டத்தட்ட எனக்கு செக்ரட்டரி மாதிரி. என்னுடைய பேனாவுக்கு இங்க் ஊற்றி வைப்பதிலிருந்து, என் கதைகளை கோர்வையாக பைல் பண்ணுவது வரை எல்லாம் இவள்தான்' என்றார்.

இப்போது திரு பிரபாகர் திரையுலகில் நுழைந்து ஒருபக்கம் கதை, மறுபக்கம் திரை என்று மிகவும் பிஸியாகிவிட்டார். இப்போது அவரை நினைத்த மாத்திரத்தில் சந்திக்க முடியாது. இருந்தாலும், சமீபத்தில் அவருடைய நாவலொன்றைப் படித்தபோது, பழைய சந்திப்பு நினைவுக்கு வந்து ஏனோ மீண்டும் அவரை சந்திக்க வேண்டும் போல மனம் ஆவல் மேலிடுகிறது.