Saturday, February 5, 2011

ஸ்ரீதர் VS ஜெயலலிதா

மறைந்த இயக்குனர் ஸ்ரீதருக்கும் அவரால் வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கும் இடையேயான உரசல், 1996 விகடனின் 'காலப்பெட்டகத்தில்' வெளியாகியிருந்தது.
இயக்குநர் ஸ்ரீதர், ஜெயலலிதா பற்றிய தன் மனக் குறையைச் சொல்லி விகடனுக்குப் பேட்டியளிக்க, அதற்கு மறுப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதினார் ஜெயலலிதா. இந்தச் சர்ச்சையில், தயாரிப்பாளர் கோவை செழியனும் தனது கருத்தைச் சொல்ல, பரபரப்பானது விஷயம். இதோ, அந்தக் கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள்

        என்னை ஏமாற்றிவிட்டார் ஜெயலலிதா!

புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கிய கையோடு வழக்கம் போலவே சினிமா உலகம் டைரக்டர் ஸ்ரீதரை மறந்துவிட்டது.கமல்ஹாசனின் அவ்வை சண்முகிபட பூஜைக்கு இரண்டு பக்கமும் ஆட்கள் கைத்தாங்கலாகப் பிடித்து வர, டைரக்டர் ஸ்ரீதர் வந்திருந்தார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழ முயன்றபோது ஸ்ரீதரின் உடல் இடதுபக்கம் இயக்கமின்றிப் போயி ருந்தது. அன்று தொடங்கி இன்றுவரை பிசியோ தெரபியும் வேறுபல சிகிச்சைகளும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. தி.நகர் வெங்கட்ராமன் தெருவில், ஸ்ரீதரின் வீட்டில் அவரைச் சந்தித்தபோது, அடக்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேசினார்

என் உடம்பு நிலைமை இப்படி ஆகிப்போச்சுனு தெரிஞ்சதும், நான் எதிர்பார்த்த முக்கால்வாசிப்பேர் வந்து எனக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லிவிட்டுப் போனாங்க. முந்தாநாள் ரஜினி வந்து ரொம்ப நேரம் பேசிட்டுப் போனார். ஆனா, அஞ்சு வருஷம் முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா போன்லகூட என்னனு ஒரு வார்த்தை விசாரிக்கலே!

வெண்ணிற ஆடைபடத்துக்காக நிர்மலாவையும் ஜெயலலிதாவையும் ஃபிக்ஸ் பண்ணிட்டோம். கடைசி நேரத்தில், ஜெயலலிதா அந்த ரோலுக்கு சரிப் படாதுன்னு நான் ஒதுக்கிட்டேன். அவங்க அம்மா சந்தியா ஓடிவந்து என்கிட்டே எப்படியெல்லாம் மன்றாடினாங்கனு பசுமையா நினைவிருக்கு! வெண் ணிற ஆடைபடத்துல ஜெயலலிதாவை நான் அறி முகப்படுத்தியது அவங்களுக்கு ஒரு திருப்புமுனை. அப்புறம்தான் வரிசையான சினிமா வாய்ப்புகள், எம்.ஜி.ஆர். அறிமுகம், அரசியல் வாழ்க்கை எல்லாம் வந்தது!” – தடித்த தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுத் துடைத்துக்கொண்டார் ஸ்ரீதர்.

தெரிஞ்சவங்களுக்கு உடல்நலக் குறைவுன்னா நேர்ல போய் விசாரிப்பது எல்லோருக்கும் தெரிஞ்ச நாகரிகம். இதை ஜெயலலிதாகிட்டே எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டார். கான்வென்ட்படிப்பு அவங்களுக்கு இவ்வளவுதான் சொல்லிக் கொடுத்திருக்குபோல!

தன்னோட வளர்ப்பு மகன் கல்யாணம் நடந்த போது அவங்க எத்தனையோ பழைய நண்பர்களை எல்லாம் நினைப்பு வெச்சுக்கிட்டு அழைப்பிதழ் அனுப்பினாங்க. அப்பவும் எதிர்பார்த்தேன், நமக்கும் பத்திரிகை வரும்னு. ஏமாந்துட்டேன். சிவாஜி சார் வீட்டுலேர்ந்து பத்திரிகை வந்தது.

இருந்தாலும், அந்தக் கல்யாணத்துக்குப் போக என் மனசு ஒப்புக்கலே!
கடைசியா நான் படிச்ச அவங்களோட ஒரு பேட்டியில், ஏதோ ஒரு கன்னடப் படத்தில்தான் அவங்க அறிமுகம் ஆன மாதிரி சொல்லியிருக்காங்க. அந்தக் கன்னடப் படத்தோட அப்படியே விட்டிருந்தா, தமிழ்நாட்டு முதல்வர் பதவி வரை வந்திருப்பாங்களா? ‘வெண்ணிற ஆடைபடம் பற்றியோ, என்னைப் பற்றியோ அவங்க எங்கேயும் சொல்லலை! அப்படிச் சொல்லணும்னு நானும் எதிர்பார்க்கலை. ஆனா, இப்படிப்பட்ட நாகரிகம் உள்ள ஒருத்தரைத்தான் நாம அறிமுகப்படுத்தினோம்னு நினைக் கறப்ப கஷ்டமா இருக்கு!
விடைபெறும்போது ஸ்ரீதர் அழுத்தமாகச் சொன்னார்: என்மேல் அனுதாபப்படற மாதிரி எதுவும் எழுதிடாதீங்க. நான் தன்னம்பிக்கையோட தைரியமாத்தான் இருக்கேன்!

யூ டூ மிஸ்டர் ஸ்ரீதர்?” – ஜெயலலிதா விளக்கம்!

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
உங்கள் 15.9.1996 ஆனந்த விகடனில், டைரக்டர் ஸ்ரீதர் அளித்துள்ள பேட்டியில் உண்மைக்குப் புறம்பான சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேட்டி, உங்கள் வாசகர்கள் மத்தியில் என்னைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதனால் சில விளக்கங்கள் அளிக்கவேண்டியது அவசியமா கிறது.

பொதுவாழ்வில் 14 ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த போதிலும், நான் அவ்வளவாகப் பிறர் வீடுகளுக்கு விஜயம் செய்யும் பழக்கம் இல்லாதவள் என்பதனை, தமிழகத்தின் முக்கியப் பிரமுகர்கள் அறிவார்கள். அதனாலேதான் எத்தனையோ முக்கிய நண்பர்களின் குடும்ப வைபவங்களுக்குக்கூட நான் போகாமல் இருந் திருக்கிறேன். என்னை நன்கு புரிந்துகொண்ட எவரும் என்னை வற்புறுத்துவதும் இல்லை. சிறு வயது முதல் நான் ஒரு சங்கோஜியாகவும், தனிமை விரும்பியாகவும் இருந்திருக்கிறேன். அது எனது உரிமை. முதலமைச்சர் ஆனதால், எனது வேலைப்பளுவும் 1991-க்குப் பின் அதிகரித்து வந்துள்ளது என்பதையும் மறந்துவிடலாகாது. டைரக்டர் ஸ்ரீதர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்க்க இயலாமல் போனதன் காரணம் வேறேதுமில்லை. எனினும், அவர் தேறி வருகிறார் என்று உங்கள் பத்திரிகை வாயிலாகத் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் திரு.ஸ்ரீதரைப் பார்க்கவில்லை என்று அவர் வேதனைப்படலாம்; நியாயம்! ஆனால், தேவையில்லாமல் உண்மைக்குப் புறம்பான சில சம்பவங்களைக் கூறி என்னை வேதனைப்படுத்தியுள்ளாரே திரு.ஸ்ரீதர் என்று வருந்துகிறேன். You too Mr.Sridhar? வெண்ணிற ஆடைபடத்தில் நடிக்க வாய்ப்பளித்து, என்னைத் தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் திரு.ஸ்ரீதர் என்பதனை நான் மறுக்கவில்லை; மறக்கவும் இல்லை. ஆனால், அதனால்தான் நான் பின்னர் பொது வாழ்வில் பேரும் புகழும் பெற்றேன் என்று அவர் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. திரு.ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய புதுமுக நடிகை களில் எத்தனை பேர் முதலமைச்சராகி உள்ளார்கள்? எத்தனை பேர் அரசியலில் பிரவேசித்துள்ளார்கள்? எத்தனை பேர் பேரும் புகழும் பெற்றுள்ளார்கள் என்பதனை அவரே கூறட்டும்.

நான் எனது நடன ஆற்றலால் சிறந்த நாட்டியக் கலைஞராக இருந்தேன்; நடிப்பாற்றலால் சிறந்த நடிகையாக இருந்தேன்; அறிவாற்றலால் நாடாளுமன்ற உறுப்பினராகப் பிரகாசித்தேன்; அரசியல் ஆற்றலால் முதலமைச்சராக வீற்றிருந்தேன் என்பது என் கருத்து. இக்கால கட்டங்களில் எனக்கு உறுதுணையாக, ஆசானாக, நண்பர்களாக, ஊன்று கோலாக, ஆலோசகர்களாக இருந்த வர்கள் எத்தனையோ பேர். அவர்கள் அத்தனை பேர் மீதும் அன்பும், பரிவும், பாசமும், நேசமும் கொண்டு நன்றி மறவாமல் வாழ்ந்து வருகி றேன். நன்றி மறப்பது நன்றன்றுஎன்பதை நான் நன்கு அறிவேன். திரு.ஸ்ரீதர் போன்றோர் கூறும் கூற்றுக்களில் நன்றல்லது அன்றே மறப்பது நன்றுஎன்பதனையும் நான் அறிவேன்.
என் தாயார் அவரிடம் போய் எனக்காக மன்றாடினார் என்று அவர் கூறியுள்ளது மிகப் பெரிய பொய். நடிகை ஹேமமாலினி, அதே படத்தில் வேறு பாத்திரத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின்னர் ஒதுக்கப்பட்ட நேரத்தில், ஹேம மாலினியின் தாயார் திரு.ஸ்ரீதரைப் பார்த்து சந்தர்ப்பம் கேட்டார் என்று திரு.ஸ்ரீதரே என்னிடம் கூறியுள்ளார். அவ்வாறு திரு.ஸ்ரீதரால் உதாசீனப் படுத்தப்பட்ட ஹேமா, பம்பாய் சென்று அகில இந்திய அளவில் பெரிய நடிகையாகப் பேரெடுத்து, பேரும் புகழும் பெற்று வளர்ந்தாரே, அதுவும் திரு.ஸ்ரீதரால்தானா என்பதை அவர் யோசித்துப் பார்க்க வேண்டும்.
இனிய உளவாக இன்னாத கூறல்அவசியமா திரு.ஸ்ரீதர்?

- ஜெ.ஜெயலலிதா
பொதுச்செயலாளர், அ.இஅ.தி.மு.க.,
முன்னாள் தமிழக முதலமைச்சர்.

ஜெயலலிதாவுக்கு ஸ்ரீதர் பதில்!

ஜெயலலிதா விகடனுக்கு (29.9.96 இதழ்) எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, “என் தரப்பில் மேலும் சில விளக்கங்கள் சொல்ல விரும்பு கிறேன்!என்று டைரக்டர் ஸ்ரீதரிடமிருந்து போன். நேரில் சந்தித்தபோது ஸ்ரீதர் சொன்னார்

என் உடல்நிலை பற்றி பத்திரிகை வாயிலாகத் தெரிந்து, பத்திரிகை மூல மாகவே நலம் விசாரித்ததற்கு ஜெயலலிதாவுக்கு என் நன்றி! ஆனால், உண்மைக்குப் புறம்பான தகவல் களைச் சொல்லியிருப்பது அவர் தான்; நான் அல்ல!
ஜெயலலிதாவின் தாயார் திருமதி சந்தியா, என்னைச் சந்தித்துத் தன் மகளுக்கு வாய்ப்புக் கொடுக்கும்படி கேட்டபோது, தயாரிப்பாளர் கோவை செழியன் என்னுடன் இருந்தார். அவரைக் கேட்டால் உண்மையைச் சொல்வார்!

மேலும், ஜெயலலிதா சொல்வது போல், ஹேமமாலினியை நான் தேர்வு செய்தது வெண்ணிற ஆடை படத்துக்கு அல்ல; ‘காதலிக்க நேர மில்லைபடத்துக்கு! அப்போது அவர் முகம் குழந்தைத்தனமாக இருந்ததால், அறிமுகம் செய்ய வில்லை. ஆனால், அவர் இந்தியில் ட்ரீம் கேர்ள்படத்தில் அறிமுகமாகி நடிப்பதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.

ஜெயலலிதாவுக்கு நானும் ஒரு திருக்குறளை நினைவுபடுத்த விரும் புகிறேன் எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந் நன்றி கொன்ற மகற்கு!

தயாரிப்பாளர் கோவை செழியனைச் சந்தித்தோம்.

டைரக்டர் ஸ்ரீதருக்கு ஜெயலலிதா பதில் எழுதிய கடிதத்தை விகடனில் நானும்
படித்தேன். ஆச்சரியமும் வேதனையும் அடைந்தேன்.
நான் தயாரித்த சுமைதாங்கிபடம் வெளியான பிறகு, டைரக்டர் ஸ்ரீதர் முழுக்க முழுக்கப் புதுமுகங்களை வைத்து வெண்ணிற ஆடைபடத்தை உருவாக்கத் திட்டமிட்டார்.மற்ற தேர்வுகள் முடிந்து கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்த சமயத்தில்தான், சிவாஜி தலைமையில் நடிகை சந்தியாவின் மகள் நடன அரங்கேற்றம் நடந்தது. அவரை ஏன் கதாநாயகியாக்க முயற்சிக்கக் கூடாது?” என்று சந்தியாவுக்கு போன் செய்து வரவழைத்துப் பேசி னோம். அப்போது ஜெயலலிதாவுக்கு 14 வயது. கதாநாயகி பாத்திரத்துக்குப் பொருந்திவரமாட்டார் என்ற முடிவில், வேறு கதாநாயகியைத் தேட ஆரம்பித்துவிட்டோம்.

சித்ராலயா ஆபீஸில் பாடல் கம்போஸிங். டைரக்டர் ஸ்ரீதர், நான், எம்.எஸ்.விஸ்வநாதன், சி.வி. ராஜேந்திரன், சித்ராலயா கோபு அனைவரும் இருந்தபோது, சந்தியா அங்கு வந்தார். வேறு நடிகை தேடுகிறீர்களாமேநீங்கள் அவசியம் என் மகளுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்என்று கேட்டுக்கொண் டார். என் மகள் வயது குறைந்தவள் என்றாலும், நல்ல முறையில் நடிப்பாள். அவள் நடிப்பில் திருப்தி இல்லாவிட்டால் பிறகு மாற்றிவிடுங் கள்!என்று சொன்னபோது, சந்தியாவின் கண்களில் நீர் பெருகி விட்டது. அதன்பிறகுதான் ஜெயலலிதாவை நடிக்க வைக்க முடிவு செய்து படப்பிடிப்பைத் தொடங்கி னோம்!என்றார்.

Friday, February 4, 2011

மூன்று தெய்வங்கள்

நடிகர் திலகத்தின் படங்களில் சோகமே இல்லாத முழுக்க முழுக்க நகைச்சுவைப்படங்களைப் பட்டியலிட்டால் கீழ்க்கண்ட படங்கள் நிச்சயம் இடம் பெறும்.

சபாஷ் மீனா
பலே பாண்டியா
ஊட்டிவரை உறவு
கலாட்டா கல்யாணம்
சுமதி என் சுந்தரி
மூன்று தெய்வங்கள்

இதில் மற்ற எல்லாப்படங்களையும் விட மக்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாத படம் என்று 'மூன்று தெய்வங்கள்' படத்தை சொல்லலாம். உண்மையில் சிறையிலிருந்து தப்பி வந்த மூன்று குற்றவாளிகளைப்பற்றிய கதை. இதே படம் பின்னர் இந்தியில் தயாரிக்கப் பட்டபோது 'தீன் சோர்' (மூன்று திருடர்கள்) என்ற பெயரிலேயே எடுக்கப்பட்டது. திருடர்களை திருடர்கள் என்ற பெயரிலேயே எடுப்பதை விட அவர்களுக்கு தெய்வங்கள் என்று பெயர் வைத்து, அவர்கள் எப்படி தெய்வங்கள் ஆகிறார்கள் என்று காட்டுவதுதானே விசேஷம்.

கதைச்சுருக்கம்:

சிறையிலிருந்து மூன்று கைதிகள் நள்ளிரவில் தப்பித்து வரும் காட்சியோடு படம் துவங்குகிறது. சிவா (சிவாஜி), முத்து (முத்துராமன்), நாகு (நாகேஷ்) ஆகியோர்தான் அந்த மூன்று கைதிகள். (அவரவர்கள் பெயரில் பாதியையே பாத்திரத்துக்கு வைத்து விட்டார்கள்). எப்படிப்பட்ட பூட்டையும் உடைத்து திருடக்கூடிய  கைதேர்ந்த திருடன் சிவா, சந்தேகத்தினால் மனைவியைக் கொலை செய்த முத்து, யாருடைய கையெழுத்தையும் சுலப்மாகப்போட்டு 'ஃபோர்ஜரி' பண்ணக்கூடிய நாகு மூவருமே அந்த கைதிகள். தப்பி வந்த அவர்கள் எங்கே அடைக்கலம் புகுவது என்ற யோசனையில், சுப்பையாவின் கடையில் ரெடிமேட் துணிகலை திருடி போட்டுக்கொண்டு நிற்க, அவர்கள் ஓடு மாற்ற வந்தவர்கள் என்று நினைக்கும் சுப்பையா, பின்னர் அவர்களின் சேவையில் மகிழ்ந்து போய் அடைக்கலம் கொடுக்கிறார். தங்களுக்கு இப்படி ஒரு அருமையான அடைக்கலம் கிடைத்ததை எண்ணி மகிழும் அவர்கள் அதை இழக்க விரும்பாமல் அக்குடுமபத்தின் அனைத்து வேலைகளையும் தங்கள் தலையில் இழுத்துப்போட்டு செய்து, அக்குடும்பத்துடன் ஒன்றி விடுகிறார்கள். வீட்டு வாசலில் கடை வைத்து நடத்திவரும் சுப்பையா, கடை நிர்வாகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்கிறார்.

இந்நிலையில் சுப்பையாவுடைய மகள் சந்திரகலா சிவகுமாரைக் காதலிக்கிறார். சிவகுமாரை வளர்த்து வரும் அவருடைய பெரியப்பா (வி.கே.ராமசாமி) வடிகட்டிய கஞ்சன். சிவகுமாருக்கு தான் செய்த செலவுகள் அனைத்தையும் ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொண்டு, அந்தப்பணம் முழுவதையும் வரதட்சணயாக தருபவரின் பெண்ணுக்கே சிவகுமாரை திருமணம் செய்து வைப்பதாக கண்டிஷன் போட்டிருப்பார். சிவகுமாரோ பெரியப்பாவுக்கு பயந்த பிள்ளை. இந்த கண்டிஷனை மறைந்திருந்து கேட்கும் சிவா, முத்து, நாகு மூவரும் இதற்கு ஒரு வழி பண்ணி சிவகுமாரையும் சந்திரகலாவையும் சேர்த்துவைக்க தீர்மானிக்கிறார்கள்.

இதற்கிடையே, சுப்பையாவுக்கு வட்டிக்கு கடன் கொடுத்திருக்கும் எம்.ஆர்.ஆர். வாசு, தன்னுடைய (கிறுக்கு) மகன் மூர்த்திக்கு சந்திரகலாவை திருமணம் செய்து தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சுப்பையாவை கடனுக்காக கோர்ட்டுக்கு இழுப்பேன் என்றும் மிரட்ட, சுப்பையா ஆடிப்போகிறார். ஆனால் இம்மூவரும் அவரை பயப்பட வேண்டாம் என்றும், தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறார்கள்.

முதலில் வாசு வீட்டுக்கு நள்ளிரவில் போகும் சிவாவும் நாகுவும், கடன் பத்திரத்தை திருடி, அதில் பூராக் கடனையும் பெற்றுக்கொண்டதாக எழுதி வாசுவைப்போல கையெழுத்துப்போட்டு வைத்து விட்டு வருகிறார்கள் (அதுக்குத்தான் யாருடைய கையெழுத்தையும் போடும் நாகேஷ் இருக்கிறாரே). அடுத்து வி.கே.ஆர்.வீட்டுக்கு நள்ளிரவில் புகுந்து, பணத்தைக் கொள்ளையடித்து வருகிறார்கள் (பூட்டை உடைக்கும் சிவாவின் கைங்கர்யத்தால்). மறு நாள் மாறு வேடத்தில் சந்திரகலாவின் வெளிநாட்டு மாமன்கள் என்று சொல்லிக் கொண்டு வி.கே.ஆர் வீட்டுக்குப்போய், அவரிடம் கொள்ளையடித்த பணத்தை அவரிடமே வரதட்சணையாக கொடுத்து விட்டு, திருமணத்துக்க சம்மதம் வாங்கி வருகிறார்கள். பணம் தந்தது சுப்பையாவுக்கு தெரியக்கூடாது என்றும் வி.கே.ராமசாமியை எச்சரித்து விட்டு வருகிறார்கள்.

நடப்பது எல்லாம் சுப்பையாவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது. பெண்பார்க்கும் படலம் எல்லாம் முடிந்து திருமண நாள் அன்று இம்மூவருக்கும் சோதனை ஏற்படுகின்றது. திருமணத்துக்கு, விகேஆரின் நண்பரான ஜெயிலர் வருகிறார். அதை மூவரில் ஒருவர் பார்த்துவிட்டு மற்றவர்களிடம் சொல்ல, மூவரும் மணப்பந்தலுக்கு வராமல் உள்ளேயே பதுங்கிக்கொள்கிறார்கள். பந்தலுக்கு அவர்கள் வந்தே ஆக வேண்டும் என்று சுப்பையா தம்பதியர் வற்புறுத்த, வேறு வழியில்லாமல் அவகளிடம் மட்டும் தாங்கள் யார் என்று சொல்லி, தாங்கள் இப்போது பந்தலுக்கு வந்தால் ஜெயிலர் கண்களில் மாட்டி, உண்மை வெளியாகி, அதனால் இவ்வளவு சிரமப்பட்டு ஏற்பாடு செய்த திருமணம் நின்று போய் விடும் என்று கூறி, தாங்கள் மூவரும் யாருக்கும் தெரியாமல் போக விரும்புவதாக கூறி வெளியேறுகின்றனர். 'உங்களையே குற்றவாளிகள் என்றால், உலகில் யார்தான் நல்லவர்கள்' என்று கண்கலங்கும் சுப்பையா தம்பதியர் அவர்களுக்கு பிரியா விடை கொடுக்கின்றனர்.

திருமண வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் எங்கே போவது என்று யோசித்து, தாங்கள் வந்த இடத்துக்கு (சிறைச்சாலைக்கு) திரும்பி செல்வதே சரியென்று முடிவெடுக்கின்றனர். (இதே முடிவை கல்யாண வீட்டில் எடுத்திருந்தால் கல்யாணம் நின்று போயிருக்கும்). அதன்படி அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று சரணடைகின்றனர். சந்திரகலாவின் கழுத்தில் தாலி கட்டப்படும் அதே நேரத்தில் இவர்கள் கைகளில் விலங்குகள் பூட்டப்பட, இரண்டையும் மாற்றி மாற்றி காண்பிக்கும் காட்சியில் இயக்குனர் நிற்கிறார். காவல் நிலையத்திலிருந்து சிறைச்சாலைக்கு ஜீப்பில் போகும்போது எதிரில் திருமண ஊர்வலம் வர ஜீப் ஒதுங்கி நிற்கிறது. சிவகுமாரையும் சந்திரகலாவையும் திருமண கோலத்தில் (யாருக்கும் தெரியாமல்) பார்த்து விலங்கு பூட்டிய கைகளுடன் அவர்கள் ஆசீர்வதிக்க, திருமண ஊர்வலம் கடந்து போனதும் புறப்படும் ஜீப் இருட்டில் சென்று மறைய, அதுவரை நம் கண்களில் கோர்த்து நின்ற கண்ணீர் முத்துக்கள் சட்டென்று நம் கன்னங்களில் வழிய.......... திரையில் "வணக்கம்".

படம் முழுக்க நகைச்சுவையால் நம் வயிறு குலுங்க சிக்க வைத்த்வர்கள் கடைசி பதினைந்து நிமிடங்கள் நம் மனத்தை உணர்ச்சி மயமாக்கி விடுவார்கள். (அது என்னவோ நடிகர் திலகத்தின் படமென்றால், அது நகைச்சுவைப் படமேயானாலும் இறுதியில் உணர்ச்சிகளின் சங்கமத்தோடுதான் அரங்கை விட்டு வெளியே வரவேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும். அதற்கு இப்பட்மும் தப்பவில்லை).

இந்தப்படத்தில் இன்னொரு முக்கிய கட்டம். ரிட்டயர்ட் போலீஸ் அதிகாரியான வி.எஸ்.ராகவனிடம் ஜெயிலர் சிவா, முத்து, நாகு மூவரின் படத்தைக்காட்டி 'இவர்களைப் பார்த்ததுண்டா' எனக் கேட்க, தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள வீட்டிற்குச்செல்வார் வி.எஸ் ராகவன். அப்போது ஒரு குழந்தை பீரோ ஒன்றுக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ள அது தானாக பூட்டிக்கொள்ளும். யார் யாரோ என்னென்னவோ முயற்சி செய்து பார்க்க, அந்நேரம் வி.எஸ்.ராகவன் அங்கு வர, எந்தப்பூட்டையும் திறக்கும் சாமர்த்தியம் கொண்ட சிவாஜி, அவரைப் பார்த்து செய்வதறியாது திகைத்து நிற்பார். அவர் கண்முன்னே பீரோவைத் திறந்தால் வலிய மாட்டிக்கொள்ள நேரிடும். இருந்தாலும் குழந்தையின் அழுகுரலில் நெகிழ்ந்து போகும் சிவாஜி, என்ன ஆனாலும் சரியென்று பூட்டை திறந்து விடுவார். திரும்பிப் பார்த்தால் அங்கு வி.எஸ்.ஆர் இல்லை. சிவாவின் மனிதாபிமானத்தில் மனம் கனத்துபோன ராகவன், ஜெயிலரிடம் சென்று 'நான் சொன்ன ஆட்கள் இவர்களில்லை. இது வேறு யாரோ' என்று சொல்லி அவரை அனுப்பி விடுவார்.

நடிகர் திலகம் இப்படத்தில் முழுக்க முழுக்க ஜோடியில்லாமல் நடித்திருப்பார். அவர் மட்டுமல்ல முத்துராமன் நாகேஷ் இவர்களுக்கும் ஜோடி கிடையாது. இந்தப்படத்தின் கதையமைப்பின் படி இவர்களுக்கு ஜோடி கொடுத்திருந்தால் கதையோட்டத்துக்குப் பொருந்தாது என்று நினைத்ததுதான் காரணம். எனவே, சிறையிலிருந்து தப்பி வந்தவர், வந்து தங்கிய இடத்தில் ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்டார் என்று கதையமைத்து, கூடவே கனவில் இரண்டு டூயட் பாடுவது போன்ற அபத்தமான கற்பனைகளையெல்லாம் கதாசிரியரும் இயக்குநரும் புகுத்தவில்லை. நடிகர் திலகமும் தனக்கு ஜோடி இருந்தே ஆக வேண்டும் என்றும் வற்புறுத்தவில்லை.

பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, 'மெல்லிசை மாமன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசைய‌மைத்திருந்தார். முதல் பாடல், சந்திரகலா குளித்துக்கொண்டே பாடும் "தேன் மழையிலே மாங்கனி நனைந்தது" பாடலை பி.சுசீலா தனித்துப் பாடியிருப்பார்.

சிவகுமார் சந்திரகலா ஜோடியாகப்பாடும் "முள்ளில்லா ரோஜா... முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்" அந்த நாளைய (இளைய) எஸ்.பி.பி.யின் குரல் நம்மை மயக்கும். கூடவே சுசீலா மேடமும்.

சீர்காழியின் கணீர் குரலில், சுப்பையா பாடுவதாக வரும் "திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா" என்ற பாடல், சுப்பையாவின் பீரோவைத் திறந்து மூவரும் கொள்ளையடிக்க முற்படும் வேளையில் இப்பாடல் ஒலிக்க, மூவரும் மனம் மாறி பூஜையறைக்கு வருவதும், பின்னர் திருப்பதி போகும்போது சுப்பையா இவர்களிடமே கடை வியாபாரத்தை ஒப்படைத்துப் போகும்போது மூவரும் நெகிழ்ந்து போய், சுப்பையா குடுமபத்துக்கு உண்மையாக நடக்க உறுதியெடுப்பதும் நெகிழ்ச்சியூட்டும் இடங்கள்.


விகேஆரிடம் வெளிநாட்டு மாமன்களாக மாறு வேடம் போட்டுச் செல்லும் மூவரும், மாறு வேடத்தில் பாடும் "நடப்பது சுகம் என நடத்து" என்ற பாடல் சுவையானதுதான். ஏனோ மக்களைச் சென்றடையவில்லை. அது போலவே வாசுவின் கிறுக்கு மகன் மூர்த்தியுடன் சந்திரகலா பாடும் "நீயொரு செல்லப்பிள்ளை... நானொரு வண்ணக்கிள்ளை..." பாடலும் நல்ல மெட்டமைப்பு. ஆனால் இலக்கை எட்டவில்லை.

தீபாவளிக் கொண்டாட்ட‌த்தின்போது, சுப்பையா குடுமபத்துடன் மூவரும் பாடும் "தாயெனும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்" பாடலும் நம் மனதில் நிற்கும். (ஆனால் இப்பாடலுக்கு நடிகர் திலகம் அணிந்திருக்கும் MEROON கலர் ஜிப்பா, அவருக்கு கொஞ்சம் கூட பொருந்தாது).

ஆனால் இவையெல்லாவற்றுக்கும் சேர்ந்தாற்போல, அந்த வருடத்தில் சுசீலாவின் மாபெரும் HIT பாடல்களில் ஒன்றான "வசந்தத்தில் ஓர் நாள்" பாடலின் வரிகளும், மெட்டமைப்பும், காட்சியமைப்பும் அருமையோ அருமை. தன்னைப் பெண் பார்க்க வந்த இடத்தில் சிவகுமாரின் பெரியப்பா விகேஆர், ஒரு பாடல் பாடும்படி தன் வருங்கால மருமகள் சந்திரகலாவிடம் கேட்க... அவரது கற்பனை விரிகிறது. ஒருபக்கம் விகேஆரின் பணத்தாசை விரட்ட, மறுபக்கம் வாசுவின் கெடுபிடி நெருக்க, எங்கே தங்களின் காதல் திருமணத்தில் முடியுமோ முடியாதோ என்ற ஏக்கத்தில் இருந்த தனக்கு, எங்கிருந்தோ வந்து தன்னுடைய திருமணத்தை நடத்த அம்மூவரும் மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டு, அவர்கள் மனிதர்கள் என்ற நிலையைத் தாண்டி தன் கண்ணுக்கு தெய்வங்களாகத் தெரிய......

சிவா, முத்து, நாகு மூவரும் முறையே திருமால், சிவன், பிரம்மாவாக வந்து நடத்தி வைக்கும் சீதா ராம கல்யாணம் கதாசிரியர் மற்றும் இயக்குனரின் அபார கற்பனை.

வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ... தேவி
வைதேகி காத்திருந்தாளோ

பாட‌லாசிரிய‌ரும், இசைய‌மைப்பாள‌ரும், இய‌க்குந‌ரும், ந‌டித்த‌வ‌ர்க‌ளும் போட்டி போட்டுக்கொண்டு இப்பாட‌லில் விஸ்வ‌ரூப‌ம் எடுத்து நிற்க‌, அர‌ங்க‌த்தில் இருந்த‌ ர‌சிக‌ர்க‌ள் எப்ப‌டி ர‌சித்தார்க‌ள் என்ப‌த‌ற்கு, பாட‌ல் முடிந்த‌தும் எழும் ப‌ல‌த்த‌ கைத‌ட்ட‌லே சாட்சியாக‌ அமைந்த‌து

இப்படத்தில் நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ், எஸ்.வி.சுப்பையா, ருக்மணி, எம்.ஆர்.ஆர்.வாசு, வெண்ணிற ஆடை மூர்த்தி, சிவகுமார், சந்திரகலா, ஜெயகௌசல்யா (சுப்பையாவின் கண்ணில்லாத மகள்), வி.கே.ராமசாமி, வி.எஸ்.ராகவன் என பலரும் நடித்துள்ளனர்.

'ஸ்ரீ புவனேஸ்வரி மூவீஸார்' தயாரித்த மூன்று தெய்வங்கள் படத்துக்கு 'சித்ராலயா' கோபு திரைக்கதை வசன‌ம் எழுதியிருந்தார். (கோபு இருக்கும் இடத்தில் சிரிப்பு இல்லாமல் இருக்குமா. இவர் அடுத்த ஆண்டில் (1972) 'காசேதான் கடவுள‌டா' படம் மூலமாக இயக்குநர் ஆனார்). நடிகர் திலகத்தின் காவியப்படங்களான 'இரத்தத் திலகம்', 'புதிய பறவை' படங்களை இயக்கிய தாதாமிராஸி, மூன்று தெய்வங்கள் படத்தை இயக்கியிருந்தார். கொஞ்சம் கூட போரடிக்காமல் இரண்டரை மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக அமைத்திருந்தார். நடிகர் திலகத்தின் படங்களில் மிகச் சிக்கனமாக தயாரிக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

1971 ஆகஸ்டு 15 அன்று வெளியான் இப்படம் சென்னை சித்ரா, மகாராணி, மேகலா, ராம் ஆகிய நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. எல்லா அரங்குகளிலும் ஐம்பது நாட்களைக்கடந்து ஓடிய இப்படம் அதிக பட்சமாக திருச்சி ஜூபிடர் மற்றும் மதுரையில் 10 வாரங்களைக் கடந்தது. நடிகர்திலகத்தின் பொழுதுபோக்குப்படங்களில் 'மூன்று தெய்வங்களுக்கு' நிச்சயம் இடம் உண்டு.

'மூன்று தெய்வங்கள்' திரைப்படத்தைப் பற்றிய என்னுடைய பதிவைப் படித்த நல் இதயங்களுக்கு நன்றி.

 

Wednesday, February 2, 2011

வியட்நாம் வீடு


சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படம், நடிகர் திலகத்தின் உணர்ச்சிபூர்வமான நடிப்பைக்கொண்ட படங்களில் கண்டிப்பாக இடம் பெறுவது. ஏற்கெனவே விடிவெள்ளி (பிரபுராம் பிக்சர்ஸ்), பாசமலர், குங்குமம் (ராஜாமணி பிக்சர்ஸ்), புதிய பறவை (சிவாஜி பிலிம்ஸ்), அன்னை இல்லம் (கமலா பிக்சர்ஸ்), தெய்வமகன் (சாந்தி பிலிம்ஸ்) போன்ற படங்கள் சொந்தப்படமாக இருந்தபோதிலும் 'சிவாஜி புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் படமாக தயாரிக்கப்பட்டது. இப்போதும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் எம்ப்ளமாக நடிகர்திலகமும், ராஜாமணி அம்மையாரும் சாமி படங்களுக்கு பூஜை செய்வதைக் காட்டும்போது அங்கு வியட்நாம் வீடு படத்தின் கிளாப் போர்டு இருப்பதைப் பார்க்கலாம்.

ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் மாதச்சம்பளத்தில் உயர்பதவியில் இருக்கும் ஒரு பிராமண குடும்பத்தலைவருக்கு பொறுப்பில்லாத பிள்ளை களால் ஏற்படும் வாழ்க்கைப்போராட்டமே கதையின் ஆணிவேர். புதிதாக வீடுகட்டி குடிபுகும் விழாவோடு படம் துவங்குகிறது. எல்லாவற்றிலும் கௌரவம் பார்க்கும் (கர்வம் அல்ல) பத்மனாப ஐயர். அதனால் பெயரே பிரிஸ்டிஜ் பத்மனாபன். கோடுபோட்டதுபோல வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டு அதன்படியே நெறிபிறழாமல் வாழ நினைக்கும் அவருக்கு, ஜாடிக்கு ஏற்ற மூடியாக மனைவி சாவித்திரி (பத்மினி) அமைந்தாரே தவிர, அவரது பிள்ளைகளை அவரைப்போல நேர்கோட்டில் வளர்க்க முடியவில்லை. ஒரு நிறுவனத்தில் மாதச்சம்பளத்தில் பணிபுரியும் மூத்தபிள்ளை ஷ்ரீதர் (ஷ்ரீகாந்த்). மனைவிசொல்லே மந்திரமாக மனைவியின் சொல்வதற் கெல்லாம் 'பூம் பூம் மாடாக' தலையாட்டும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. அவன் அடிமைத்தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாமனார், மாமியார் பற்றி வத்தி வைப்பதையே வேலையாக அலையும் அவன் மனைவி மாலா (ரமாப்ரபா). ரமாப்ரபாவுக்கு இப்படியெல்லாம் வில்லியாக நடிப்பில் கொடிகட்ட முடியுமா என்பது நமக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், மாமியாருக்கு எதிராக வில்லத்தனம் என்றால்தான் நம் பெண்கள் வெளுத்து வாங்குவாங்களே (ஆனால் நான் ரொம்ப நல்ல் பொண்ணுங்க, என் மாமியாரைக் கேட்டுக்குங்க).

இரண்டாவது மகனாக, அன்றைய கல்லூரி மாணவர்களின் ஸ்டைலில் நீளமாக தலைமுடி வளர்த்துக்கொண்டு அலையும் கல்லூரி மாணவன் (நாகேஷ்), இவர்கள் இருவருக்கும் கீழே பருவமெய்திய ஒரு தங்கை. குழந்தை கள் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே என்று எண்ணி மனதுக்குள் குமுறும் தந்தை, ஆனாலும் அவருக்கு வெறும் வார்த்தைகளால மட்டும் ஆறுதல் சொல்லும் மனைவி. அதனால்தான் வேலையிலிருந்து திடீரென்று ரிட்டையர் ஆகும்போது அது அவருக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. கையில் தானே சாப்பாட்டுக்கூடையைத் துக்கிக் கொண்டு வீட்டுக்குள் வரும் அவர், நேராக  அம்மாவின் படத்துக்கு முன்பு போய் நின்று கொண்டு "அம்மா, நான் ரிட்டையர்ட் ஆயிட்டேன், உன் பிள்ளைக்கு இன்னைக்கு அம்பத்தஞ்சு வயசு ஆயிடுத்து. I AM COUNTING MY DAYS TO GRAVE" என்று குரல் உடைந்து தடுமாறுகிறார். அப்போது அங்கே வரும் மனைவியிடம் "சாவித்திரி, நான் ரிட்டயர் ஆயிட்டேண்டி" என்று சொல்ல "என்னன்னா சொல்றேள்?. அதுக்குள்ளாகவா?" அன்று கேட்க "என்னடி பண்றது, திடீர்னு கூப்பிட்டு 'உனக்கு வயசாடுச்சு, நீ வீட்டுக்கு போடா'ன்னு அனுப்பிச்சுட்டான். அந்த கம்பெனியோட வளர்ச்சிக்காக நான் என்னவெல்லாம் பாடுபட்டிருப்பேன். எல்லாத்தையும் மறந்திட்டு போடான்னு அனுப்பிட்டானே" என்று குமுறும்போது முகத்தில், சோகம், ஏமாற்றம், விரக்தி, இனி மிச்சமுள்ள காலத்துக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற அச்சம், இனி நாளையிலிருந்து வேலையில்லாதவனாகி விட்டோம் என்ற சூன்யம்.... எல்லாம் கலந்த கலவை யாக அந்த ஒரு முகத்தில்தான் எத்தனை முகபாவம், என்னென்ன உணர்ச்சிப் பிரவாகம். 

(அடப்பாவி மனுஷா... எங்கிருந்தய்யா கத்துக்கிட்டே இதையெல்லாம்?. உனக்குப்பிறகு வந்தவர்கள் உன்னை காப்பியடித்து செய்திருக்கலாம். ஆனால் நீ யாரையும் காப்பியடிக்கவில்லையே..!. காரணம், உனக்கு முன் எவனும் இதையெல்லாம் செய்து காட்டவேயில்லையே... பின் எங்கிருந்து உனக்கு மட்டும் இப்படியெல்லாம்...!!!)

வேலைமுடிந்து வீட்டுக்குள் நுழையும் மூத்த மகனிடம், தாய் மெதுவான குரலில் "டேய் ஷ்ரீதரா, உங்க அப்பா ரிட்டயர்ட் ஆயிட்டாருடா. நீ உங்க அப்பா கிட்டே போயி 'அப்பா கவலைப்படாதீங்க, இனிமே குடுமபத்தை நான் பாத்துக்கறேன்'ன்னு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லுடா" என்ற் கெஞ்சுவது போல கேட்கும் தாயின் குரலுக்கு செவி மடுத்து அப்பாவின் அறைக்குப் போகப்போகும் கணவனை மனைவி மாலா வழி மறித்து, தன் அறைக்கு அழைத்துச்சென்று அவனுக்கு தூபம் போடுவது டிப்பிக்கல் நடுத்தர வர்க்க குடும்பத்தின் அச்சடித்த பிரதிபலிப்பு என்றால்....

அப்பா ரிட்டையர்ட் ஆன முதல்மாதம் மகன் சம்பளத்தை வாங்கி வந்து தங்களிடம் தருவான் என்று எதிர்பார்த்திருக்கும்போது, அவன் வந்து "அம்மா, இந்த மாதத்துக்கு எனக்கும் மாலாவுக்கும் சாப்பாட்டுப்பணம்" என்று நீட்டுவது கொடுமை.

 
தங்களுக்குள் திறந்த புத்தகமாக வாழ்ந்து விட்ட பதமனாபன் - சாவித்திரி தம்பதியினரிடையே, எந்த ஒளிவு மறைவுமில்லை என்பதை எடுத்துக்காட்டும் அந்த வசனம். ரிட்டையாராகி வீடு வந்த பத்மனாபன், தயங்கி தயங்கி தன் மனைவியிடம் "சாவித்திரி, என்னுடைய சம்பளத்தில் இருந்து மாசாமாசம் எதுவும் சேர்த்து வச்சிருக்கியா?" என்று கேட்க "என்னன்னா, உங்களுக்கு தெரியாமல் நான் என்னைக்கு...", முடிக்கும் முன்பாகவே அவர் "இல்லையில்லை, சும்மாதான் கேட்டேன்" என்று பதறும் இடம்.

பார்க்கில் வாக்கிங் போகும்போது எவனோ ஒருத்தன், "நாளைக்கு இந்நேரம் நான் பிரிஸ்டிஜ் பத்மனாபனுடைய மாப்பிள்ளையாகியிருப்பேன்" என்று சொல்வதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோகும் அவர், வீட்டுக்குத் தெரியாமல் அந்த எவனோ ஒருவனுடன் ஓடிப்போகும் மகளை ரயில்வே ஸ்டேஷனில் தோளில் கைவைக்க, திரும்பிப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோகும் மகளை, கோபமும், 'நீயாடி இப்படி' என்று அதிர்ச்சியுமாக பார்க்கும் அந்த பார்வை, அந்த பாவம், அந்த உணர்ச்சிக்கொந்தளிப்பு... நூறு பக்க வசனங்களுக்கு சமம்.  

மனைவி மாலாவின் பேராசையால் அலுவலக வேலைகளில் ஊழல் செய்து லஞ்சம் வாங்கி தன் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் ஷ்ரீதர், அப்படி தவறான பாதையினால் ஏற்பட்ட கூடாநட்புகளின் காரணமாக மதுவருந்தி விட்டு, தள்ளடியபடி வீட்டுக்குள் நுழைய, அதைப்பார்த்து பதறிப்போன அம்மா, இந்த விஷயம் பத்பநாபனுக்கு தெரியாமல் மறைக்க, அவனது ரூம் வரை கொண்டு விட்டு விட்டுத் திரும்பும்போது, இத்தனையையும் பார்த்துக்கொண்டு கண்களில் ரௌத்ரமும், அதிர்ச்சியும் பொங்க பந்த்மனாபன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து பத்மினி அதிர்வது உச்சம்.

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவருக்கு இடையூறாக அண்ணனும் அண்ணியும் ட்ரான்ஸிஸ்டரில் சத்தமாக  கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்த தங்கை, அவர்களுடன் சண்டைபோட்டு, ட்ரான்ஸிஸ்டரைப் பிடுங்கி வீச, தங்கையை அவன் கைநீட்டி அடிக்க, தான் செல்லமாக வளர்த்த தன் மகளை கைநீட்டி அடிப்பதைப்பார்த்து பதமனாபன் மகனை அடிக்க, அவனும் அவன் மனைவியும் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்போது, அப்படியே கேமரா சுவரின் பக்கம் திரும்ப சுவரில் விரிசல். (சுவரில் தெரிவது விரிசல் மட்டுமல்ல, இயக்குனர் பி.மாதவனின் முகமும்தான்).

கோபித்துக்கொண்டு தன் தந்தை வீட்டுக்குப் போகும் மாலாவையும் ஷ்ரீதரையும் அவளுடைய தந்தை மட்டும் ஏற்றுக்கொள்வாரா?. பிரிஸ்டிஜ் பத்மனாபனின் சம்மந்தியாயிற்றே. வாசலிலேயே நிற்க வைத்து அவர்களைக் கண்டித்து, மீண்டும் பத்மனாபன் வீட்டுக்கே அழைத்து வருகிறார். நடந்தவற்றைக் கொஞ்சம் கூட மனதில் வைத்துக்கொள்ளாமல் "ஏன் இன்னும் நிக்கறேள்?. மேலே போங்கோ" என்று அனுப்பிவைக்க, அவர்கள் மாடியில் ஏறும் சமயம் இன்னொரு பெரிய வில்லங்கம் வருகிறது. ஆம், லஞ்சஒழிப்புத் துறை அதிகாரி விஜயன், தன் சக அதிகாரிகள் சகிதம் வீட்டை சோதனை போட வருகிறார். சோதனையின்போது, ஏராளமான சொத்துக்கள், நகைகள், பக்கத்துவீட்டுப் பெண் பெயரில் ஓடும் டாக்ஸி போன்றவை சிக்க பத்மனாபன் அதிர்ந்து போகிறார். ஷ்ரீதரை அரெஸ்ட் பண்ணி அழைத்துப் போகும்போது, மாலாவின் அப்பா வி.எஸ்.ராகவனைப்பார்த்து, "சம்மந்தி, பாத்தேளா.. இந்த வீட்டோட பிரிஸ்ட்ஜும் போயிடுத்து, ஜஸ்டிஸும் போயிடுத்து" என்று பத்மனாபன் புலம்பும்போது நம்மை பரிதாபத்தின் உச்சத்துக்கு கொண்டு போய் விடுவார்.


நம்மை நெஞ்சைப்பிழியும் இன்னொரு முக்கியமான கட்டம், 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடல் காட்சி. முதலிரண்டு வரிகளைமட்டும் பாரதியார் பாடலில் இருந்து எடுத்துக்கொண்டு, மேற்கொண்டு காட்சிக்கு தகுந்தாற்போல கவியரசர் கண்னதாசன் புனைந்த அற்புத பாடல், 'KVM மாமா'வும் 'சின்ன மாமா'வும் (புகழேந்தி) சேர்ந்தமைத்த மனதை வருடும் மெட்டு. இந்தமாதிரிப் பாடல்களைப்  பாடுவதற்கென்றே பிறந்த டி.எம்.எஸ் பாட, அதற்கு நடிகர் திலகமும், நாட்டியப்பேரொளியும் முகபாவங்காளாலேயே உணர்ச்சிகளைக் கொட்ட.......

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

பல்லவி முடிந்து இடையிசையில், கைப்பிடித்தபடி மணவறையை சுற்றிவரும் பஞ்கச்சம் கட்டிய பத்மநாபன், மடிசார் கட்டிய சாவித்திரி தம்பதியின் இளமைக் கால நினைவுகள். அந்த நினைவில் தொடரும் அனுபல்லவி...

உன்னைக்கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி 
பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

நம்பிய பிள்ளைகள் ஏமாற்றி விட்டனர். விழுதுகளாய் நின்று தங்களைத் தாங்குவார்கள் என்று நம்பியிருந்த விழுதுகள் ஒவ்வொன்றாக மறைய, துவண்டு விழப்போகும் சமயம், மனைவி ஓடிவந்து தாங்கி அணைத்துக் கொள்ள....

சாலச்சுமைதாங்கி போலே மார்பில் எனைத்தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

மீண்டும் தம்பதிகளின் பழைய முதலிரவுக்காட்சி. மடிசார் மாமியின் மடியில் தலைவைத்து உறங்கும் இளைய பத்மனாபன். அவரது அழகான முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் சாவித்திரி, சட்டென்று காட்சி மாறி தரையில் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் சாவித்திரியின் மடியில் தலை வைத்து  தரையில் படுத்திருக்கும் பத்மனாபனைக்காணும்போது, கல்மனம் படைத்தவர்கள் தவிர அனைவரது கண்களிலும் கண்ணீர் வரும்.....

முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும்
பிள்ளைக்குலமடியோ என்னை பேதமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
தேவையை யாரறிவார்... என்...... தேவையை யாரறிவார்
உன்னைப்போல  தெய்வம் ஒன்றேயறியும் 

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில்.... நீர் வழிந்தால்.... என் நெஞ்சில்.....
(இருவரின் விம்மல் நம் நெஞ்சுக்குள் ஊடுருவும்)

பாடல் முடிந்ததும் அமைதி, எங்கும் நிசப்தம், ஒரு கைதட்டல் இல்லை, விசில் இல்லை. மாறாக சத்தமில்லாத விம்மல்கள், கைக்குட்டைகளிலும், வேஷ்டி நுனிகளிலும், முந்தானையிலும் கண்களைத் துடைத்துக்கொள்ளும் ரசிகர் கூட்டம்.

எழுதியவர் இல்லை, இசைவடிவம் தந்தவர்கள் இல்லை, இயக்கியவரும் போய் விட்டார், நடித்தவர்களும் மறைந்து விட்டனர். பாடியவர் மட்டும் இருக்கிறார்... பல்லாண்டு வாழ்க.

இப்படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள்.....

பதமனாப ஐயரின் திருமண நாள் கொண்டாட்டத்தில் பாடும் பாடல் "உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே (உண்மைதானே) உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பும் இதயமே". இப்பாடலை நான்கு வித்தியாசமான மெட்டுக்களில் அமைத்திருப்பார் மாமா.

வயதான காலத்தில், தங்களின் திருமண போட்டோவைப்பார்க்கும்போது, இருவரது கண்களிலும் விரியும் ஃப்ளாஷ்பேக் பாடல் "பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா". படத்திலேயே நடிகர்திலகமும், நாட்டியப்பேரொளியும் இளமைத்தோற்றத்தில் முழுக்க வருவது இந்தப்பாடல் காட்சியில் மட்டும்தான்.

இளைஞர்களைக்கவர்வதற்கென்று, கல்லூரி மாணவர்கள் பாடுவதாக போடப்பட்ட பாடல் "மைலேடி கட்பாடி நீயே எந்தன் ஜோடி"... (ஏ.எல்.ராகவன் குழுவினர்) இப்படத்தின் தரத்துக்கு தேவையில்லாத பாட்டு. நாகேஷ், தங்கவேலு போன்றவர்கள் இருந்தும் கடும் நகைச்சுவைப்பஞ்சம். ஈட்டிக்காரனிடம் கடன் வாங்கி விட்டு, அவன் துரத்த, இவர்கள் ஓடுவது எல்லாம் காமெடியா?.

கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, திரையிசைத் திலகம் கே.வி.எம். மாமா இசையமைத்திருந்தார். கதை வசனம் எழுதியவரை எங்கே எல்லோரும் மறந்துவிடப்போகிறார்களோ என்ற எண்ணத்தில் பின்னாளில் 'வியட்நாம் வீடு சுந்தரமாகவே' ஆகிப்போனார்.  

படம் எப்படி முடியப்போகிறது என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருப்பார் இயக்குனர் பி.மாதவன். பத்மனாபன் ஆபரேஷனுக்குப் போகும்போது சோகமாக முடியப்போவது போலிருக்கும். ஆபரேஷனுக்காக ஸ்ட்ரெச்சரில் படுக்கப்போகும் பத்மனாபன், தன் கையில் வாட்ச் இருப்பதைப்பார்த்ததும் அதைக்கழற்றி மனையிடம் கொடுக்கப்போகும்போது பார்த்து விட்டுச்சொல்வார்... "கடிகாரம் நின்னுபோச்சுடி சாவித்திரி" (இந்த இடத்தில் தியேட்டரில் 'ஐயோ' என்ற சத்தம் கேட்கும்).

ஆனால் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து வீட்டுக்கு வந்தபின்னர், சுபமான முடிவை எதிர்நோக்கியிருப்பது போலிருக்கும். திடீரென மீண்டும் கதை மாறி, பத்மனாபன் இறந்துபோவதுபோல முடிந்து நம் நெஞ்சில் சோகத்தை சுமக்க வைத்து விடும். ஆனால் அழுகை, சத்தம், கூக்குரல் என்று எதுவுமில்லாமல் சோகத்தை அப்படியே ஸ்டில்களில் நிறுத்தி படத்தை முடித்திருப்பது அருமையான உத்தி.

படமாக்கப்படுவதற்கு முன்னர் இது சிவாஜி நாடக மன்றத்தால் பலநூறுமுறை மேடை நாடகமாக நடத்தப்பட்டது. படத்தில் பத்மினி நடித்த ரோலில், நாடகத்தில் (நடிகர்திலகத்தின் ஜோடியாக) நடிகை ஜி.சகுந்தலா நடித்திருந்தார். (சி.ஐ.டி.சகுந்தலா அல்ல, ஜி.சகுந்தலா).

வியட்நாம் வீடு திரைப்படம், 1970-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக (தி.மு.க.தலைமையிலான) தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு பெற்றது. ('தி.மு.க.தலமையிலான' என்ற வாக்கியம் எதற்கு?. "அன்றைக்கு காங்கிரஸ் அரசு இருந்தது, சிவாஜி காங்கிரஸ்காரர் என்பதால் கொடுத்தார்கள்" என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதைத் தவிர்க்கத்தான்).

சென்னை சாந்தி கிரௌன், புவனேஸ்வரி, திருச்சி பிரபாத் உட்பட தமிழகத்தில் ஐந்து நகரங்களில் நூறு நாட்களைக்கடந்து ஓடிய இப்படம் நடிகர் திலகத்தின் திறமையின் உரைகல்லாக அமைந்த படங்களில் ஒன்று.

(" I AM COUNTING MY DAYS TO GRAVE" என்ற வார்த்தைகளை டைப் செய்தபின்னர், சில நிமிடங்களுக்கு என்னால் டைப் செய்ய முடியவில்லை. கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. கைகள் நடுங்கின. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தேன்).

'வியட்நாம் வீடு' என்ற காவியப்படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.