Sunday, June 5, 2011

பட்டுக்கோட்டை பிரபாகர்

சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், என் சொந்த ஊரைப்பற்றிக் கேள்விப்படும் தோழிகள் பெரும்பாலோர் தவறாமல் கேட்பது, 'உங்க ஊர் பக்கத்துலதானே பட்டுக்கோட்டை பிரபாகர் இருக்கார். அவரை சந்திச்சிருக்கியா? பேசியிருக்கியா?' என்ற கேள்வியைத்தான். சந்தித்ததில்லை என்று மொட்டையாகச்சொல்லி அவர்களின் கிண்டலுக்கு ஆளாவதை விட, மடக்குவோம் என்ற நினைப்பில், 'ஏண்டி, நீங்கள்ளம் சென்னையில்தானே இருக்கீங்க?. சென்னையிலுள்ள ஏராளமான எழுத்தாளர்களில் எத்தனை பேரை நீங்க சந்திச்சிருக்கீங்க?' என்று பதில் கேள்வி கேட்டு தப்பிப்பதுண்டு.

இருந்தாலும் திரு. பிரபாகரின் எழுத்துக்களை தொடர்ந்து படித்துவந்தபோது எனக்கே ஒரு ஆசை தோன்றியது. இவ்வளவு சுவாரஸ்யமான எழுத்தாளராக இருக்காரே. அடுத்தமுறை ஊருக்குப்போகும்போது அவரை சந்திக்க முயற்சித்தால் என்ன என்ற ஆவல் ஏற்பட்டது. ஆனால் அந்த ஆவல் உடனே நிறைவேறவில்லை. இடையில் பலமுறை ஊர் சென்று வந்தபோதும் இந்த விருப்பம் மட்டும் கைகூடவில்லை. அவருடைய எழுத்துக்களைப் படிப்பது மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. கல்லூரி முடிந்தது, வேலை கிடைத்தது, திருமணமும் ஆனது. வாழ்க்கை வேறுபக்கம் பயணிக்கத்துவங்கியதும் பட்டுக்கோட்டையாரை சந்திக்கும் ஆவல் இதயத்தின் ஒரு மூலையில் கிடத்தப்பட்டது. ஒருநாள் என் கணவர் பிரகாஷ் சொன்னார், 'சாரூ சேதி தெரியுமா?. உன் அபிமான எழுத்தாளர் பிரபாகரை இன்னைக்கு எதிர்பாராமல் சந்திச்சேன். சென்னை வந்தவர் இன்னைக்கே ஊர் திரும்புவதாகச்சொன்னார். இன்னும் ஒருநாள் இருந்திருந்தால் உன்னையும் அழைச்சிக்கிட்டுப் போயிருப்பேன்' என்றார்.

அவ்வளவுதான், பிரபாகரைசந்திக்கும் எண்ணம் மீண்டும் மனதின் பிரதான இடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டது. அதற்கேற்றாற்போல அடுத்த மாதம் என் உறவினர் இல்லத் திருமணத்துக்கு ஊர் செல்ல வேண்டியிருந்தது. துரதிஷ்டவசமாக பிரகாஷ் வர முடியவில்லை. நாம் மட்டும் சென்றேன். என் அண்ணனின் நண்பரான கொழும்பு ஸ்டோர் பஷீர் அவர்களிடம் சொல்லி போனில் அப்பாயிண்மென்ட் வாங்கினேன். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு தலையாரித்தெருவில் உள்ள அவருடைய வீட்டுக்குச் சென்றேன். வாசலிலேயே ஒரு பெர்ப்யூம் கடை வைத்து வேறொருவர் அதைக்கவனித்து வருகிறார்.

என்னைவிட இளைய வயதுடைய பெண் வந்து, 'நீங்கதான் சாரதாவா?. அண்ணன் இருக்கிறார் வாங்க என்று என்று அழைத்துச்சென்றார். கூடத்தில் பிரம்பு சோபாக்களில் ஒன்றில் அமர்ந்திருந்த பட்டுக்கோட்டை பிரபாகர் சற்று எழுந்து கைகூப்பினார். நானும் பதிலுரைத்ததோடு, அப்போது அவர் ஏதோ ஒரு விருது வாங்கியிருந்ததற்கு வாழ்த்துச் சொன்னேன். எதிர் சோபாவில் உட்காரச் சொன்னவர்அவரே பேச்சை ஆரம்பித்தார்.

'வழக்கமாக வர்ரவங்க சும்மா காலின் பெல்லை அடிச்சுட்டு உள்ளே வருவாங்க. நீங்க போனில் அப்பாயின்மெண்டெல்லாம் கேட்டு ஒரு வி.ஐ.பி. சூழ்நிலை கிரியேட் பண்ணிட்டீங்க. ரொம்ப நன்றி' என்றார். 'என்ன சார் நீங்க, இவ்வளவு எழுதிட்டு இன்னும் அடக்கமாக இருக்கீங்க. சென்னையில் பாருங்க. நாலு சிறுகதை எழுதி பிரசுரம் ஆனதும் ரொம்ப பிஸிம்பாங்க' என்றேன். பதிலுக்கு 'ஐயோ, அந்த பந்தாவெல்லாம் எனக்கு வேண்டாம்' என்று கூச்சமானார்.

என் கல்லூரி நாட்களில் இருந்து அவருடைய எழுத்துக்கள் மீது இருந்த ஈர்ப்பு, தோழிகளின் விசாரணை, சந்திக்க விரும்பிய ஆவல், காலப்போக்கில் இல்லற வாழ்வில் திரும்பியதும் அவரது சந்திப்பு இரண்டாம் பட்சமாகப் போனது எல்லாவற்றையும் சொன்னேன். ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தார். அவரைப்பற்றிய விசாரிப்புகளுக்கும் வெளிப்படையாக பதில் சொன்னார். ஒருமாதம் முன்பு சென்னையில் என் கணவர் சந்தித்ததைச் சொன்னேன். அதற்கு அவர், 'சென்னையில் என்னை பலபேர் சந்திச்சாங்க, உங்க வீட்டுக்காரர் யாருன்னு சரியாக நினைவில்லை ஸாரி, இப்போ சாரும் கூட வந்திருக்கலாமே' என்றார். அவருக்கு அலுவலகத்தில் லீவு கிடைக்கவில்லை என்று சொன்னதும் சற்று யோசித்தவர், ', அப்படீன்னா அந்த இன்கம் டாக்ஸ் பார்ட்டியா?' என்று கேட்க நான் குதூகலத்துடன் அவரேதான் என்றேன்.

பல்வேறு விஷயங்களையும் ரொம்ப சுவாரஸ்யமாகப்பேசினார். இடையிடையே நான் சம்பிரதாயத்துக்காக 'ஸாரி சார், உங்க நேரத்தை ரொம்ப எடுத்துக்கிறேனோ' என்று கேடுக்கொண்டேன். 'நோ, நோ அப்படியெல்லாம் இல்லை'ன்னு சொல்வார்னு தெரியும். அப்படியேதான் சொன்னார். ஒரு நடுத்தர வயது பெண்மணி இருவருக்கும் தட்டுக்களில் சூடான மசால்வடை கொண்டு வந்து வைத்தார். என்னை சாப்பிடச்சொல்லி விட்டு தானும் சாப்பிட்டுக்கொண்டே பேசினார் பிரபாகர்.

'ஒரு கதைக்கான கருவை எங்கிருந்து எடுக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'கதைக்கரு என்பது எங்கிருந்தும் எடுப்பது அல்ல. நம்மைச்சுற்றி நடப்பவற்றை கூர்ந்து கவனித்தாலே போதும். அதற்கு கைகால் வைத்து கதையாக்கி விடலாம். இப்போது நாம் இருவரும் பேசிக் கொண்டிருப்பதையே நான் ஒரு கதையாக்கி விடுவேன். அப்படி ஒரு கதை பண்ணி அது பிரசுரமானால் போன் பண்றேன். படிச்சுப்பாருங்க' என்றவர் மேலும் தொடர்ந்தார்...

'உதாரணமாக, இங்கிருந்து த்ஞ்சாவூருக்கு பஸ்ல போறீங்க. ஒரத்தநாடு பஸ் ஸ்டாண்ட்லே நிற்கும்போது அங்கே ரெண்டுபேருக்கிடையில் வாய்ச்சண்டை நடக்குது. நீங்கன்னா ஏதோ சண்டை நடக்குதுன்னு விட்டுடுவீங்க. ஆனா நாங்க (எழுத்தாளர்கள்) அந்தச்சண்டையைக் கூர்ந்து கவனிப்போம். எதுக்காக அந்த சண்டை, அதன் பின்னனி என்ன, அதன் முடிவு என்ன என்பதெல்லாம் அவர்கள் சண்டையிலேயே கிடைக்கும். அவங்க பேச்சைக்கவனிங்க 'ஏண்டா நீ பெரிய பண்ணைக்காரனா இருந்தா நாங்க பயப்படனுமோ. ஒழுங்கா வாங்கின கடனை வச்சிட்டு வேலையைப்பார் (ஓகோ, இவனிடம் அவன் கடன் வாங்கியிருக்கான்). சரிதான் நிறுத்துடா, பேராவூரணி சேர்வை வீட்டுல சம்பந்தம் வச்சிக்கிட்ட திமிரோ (ஓகோ, அப்போ இவன் பேராவூரணியில் பெரிய புள்ளி வீட்டில் சம்பந்தம் பண்ணியிருக்கான்). ஏண்டா, உன் தம்பியை துபாய்க்கு அனுப்பனும்னு பணம் கடன் வாங்கி எத்தனை மாசமாச்சு (ஓகோ அவனுக்கு ஒரு த்ம்பி, அவனும் துபாயில்) பணத்தைக்கொடுக்க முடியலைன்னா மதுக்கூர்ல இருக்கிற நிலத்தை எழுதிக்கொடுடா (ஓகோ, கடன் வாங்கியவனுக்கு மதுக்கூரில் நிலம் இருக்கிறது)  இப்படியே சண்டையில் கிடைக்கின்ற விஷயங்களை சேகரிச்சு, அதில் ஒவ்வொருத்தனுக்கும் குடும்பம், குழந்தை குட்டிகள்னு உருவாக்கி.... இப்படியே கைகால் வச்சு, ஊர், பெயரையெல்லாம் மாற்றி அதை ஒரு சுவையான கதையாக்கிடுவோம்' என்றார். கேட்கவே பிரமிப்பாக இருந்தது.

முதலில் வாசலில் வந்து அழைத்த பெண்ணை அழைத்து அறிமுகப்படுத்தினார். 'இவள் என் தங்கை. கிட்டத்தட்ட எனக்கு செக்ரட்டரி மாதிரி. என்னுடைய பேனாவுக்கு இங்க் ஊற்றி வைப்பதிலிருந்து, என் கதைகளை கோர்வையாக பைல் பண்ணுவது வரை எல்லாம் இவள்தான்' என்றார்.

இப்போது திரு பிரபாகர் திரையுலகில் நுழைந்து ஒருபக்கம் கதை, மறுபக்கம் திரை என்று மிகவும் பிஸியாகிவிட்டார். இப்போது அவரை நினைத்த மாத்திரத்தில் சந்திக்க முடியாது. இருந்தாலும், சமீபத்தில் அவருடைய நாவலொன்றைப் படித்தபோது, பழைய சந்திப்பு நினைவுக்கு வந்து ஏனோ மீண்டும் அவரை சந்திக்க வேண்டும் போல மனம் ஆவல் மேலிடுகிறது.

6 comments:

  1. Saaroo,*
    மிகவும் சுவாரசியமான பதிவு..
    நடை மிக இயல்பாக இருக்கிறது..
    வாழ்த்துக்கள்.
    *ஒரு மேடத்தின் பெயர் "சார்" என்று ஆரம்பிக்கறதே?
    ;-))

    ReplyDelete
  2. மிகவும் நல்ல,அண்டர்ரேட்டட் எழுத்தாளர்,இவர் கதைகளில் விறுவிறுப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமே இராது.நேர்காணல் சம்பவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அன்புள்ள சாரதா,

    விறுவிறுப்பான நடையில் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    On a related note,

    பட்டுக்கோட்டை பிரபாகர் பற்றி சக்தி விகடன் பொறுப்பாசிரியர் ரவி பிரகாஷ் கூறுகிறார்...

    பட்டுக்கோட்டை பண்பாளர்
    ==========================
    பட்டுக்கோட்டை குமாரவேல், பட்டுக்கோட்டை அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என பட்டுக்கோட்டைக்குச் சிறப்புச் சேர்த்த பெரியவர்கள் பலருண்டு என்றாலும், பட்டுக்கோட்டை என்றதுமே எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருகிற பெயர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

    சாவியில் நான் பணியில் சேர்ந்து, வெறுமே புரூஃப் பார்ப்பதோடு நிற்காமல், இதழுக்குப் பொறுப்பேற்று பத்திரிகைத் தயாரிப்புப் பணியிலும் ஈடுபட்டபோது, நான் என் விருப்பத்துக்கேற்ப ஒரு வி.ஐ.பி. எழுத்தாளரிடம் தொடர்கதை கேட்டு வாங்கிப் பிரசுரித்தேன் என்றால், அது பட்டுக்கோட்டை பிரபாகரிடம்தான். (அதற்கு முன்பு மோனா மாதமிருமுறை இதழுக்குப் பொறுப்பேற்றிருந்தபோது, நான் முதன்முதல் என் விருப்பத்துக்கேற்ப நாவல் வாங்கி வெளியிட்டது எழுத்தாளர் ராஜேஷ்குமாரிடம். அது பற்றி முன்பு ஒருமுறை பதிவு எழுதியிருக்கிறேன்.)

    பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு முன் நான் அதிகம் படித்தது மௌனி, லா.ச.ரா., புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன்... இவர்கள் யாருடைய கதைகளையும் அல்ல. ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் இவர்கள் இருவருடைய சிறுகதைகளையும், மாத நாவல்களையும் மட்டுமே நான் அதிகம் படித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன்.

    ராஜேஷ்குமாரின் நாவல் எடுத்த எடுப்பில் யமஹா பைக் மாதிரி குபுக்கென்று வேகமெடுத்துக் கிளம்பும். வர்ணனைகளைவிட கதையின் பரபரப்புக்கும் திடுக் திருப்பங்களுக்கும் அவர் கதைகளில் அதிக முக்கியத்துவம் இருக்கும். படிக்கத் தொடங்கிவிட்டால், முடிக்கும் வரை கீழே வைக்கமுடியாது. அத்தனை விறுவிறுப்பாக இருக்கும்.

    பட்டுக்கோட்டை பிரபாகர் கதை வேறு ரகம். மாத நாவல்களைப் பொறுத்தவரையில் முதல் அத்தியாயம் ஓர் இனிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிற விதமாக, ரசனையாகச் செல்லும். இரண்டாம் அத்தியாயத்தில்தான் முக்கிய கதைக்குள் நுழைவார். சில வர்ணனைகளைப் படித்தபின், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, அந்த வர்ணனைகளை மீண்டும் மனசுக்குள் காட்சியாக்கி ஓட்டிப் பார்த்து, அந்த ரசனையில் திளைப்பது எனக்கு மிகவும் விருப்பம். இதனால், அவரது நாவலைப் படித்து முடிக்க ரொம்ப நேரமாகிவிடும். ஒரே மூச்சில் படிக்க வேண்டுமென்று தோன்றாது. அனுபவித்து அனுபவித்துப் படிப்பேன்.

    ராஜேஷ்குமாரின் கதை சூடும் சுவையும் உள்ள உயர்தரமான காபி என்றால், பட்டுக்கோட்டை பிரபாகரின் கதை நிதானமாகப் பருகவேண்டிய பழரசம். திரையுலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜி - ரஜினி, கமல் என்கிற மாதிரி ராஜேஷ்குமார் - பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரும் நாவல் உலகில் இரு பெரும் தூண்கள் என்பது என் கருத்து.

    எண்பதுகளில், திருச்சியில் உள்ள என் உறவினர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தபோது, அங்கே அவர்கள் சாவி பத்திரிகையைத் தொடர்ந்து வாங்கிப் படிப்பது தெரிந்தது. ஆரம்ப இதழ் முதல் அனைத்தையும் பைண்டு செய்து வைத்திருந்தார்கள். சாவி என்றொரு பத்திரிகையை முதன்முதல் அங்கேதான் பார்த்தேன். அதில் ஒரு நெடுங்கதையைப் படித்தேன். தலைப்பு ஞாபகம் இல்லை.

    நாலைந்து நண்பர்கள். அவர்களில் ஒருவன், துப்பறியும் சிங்கமாக வேண்டும் என்று ஆர்வம் கொண்டு, எப்போதும் அது பற்றியே பேசிக்கொண்டு இருப்பான். ஒருமுறை, அவன் துப்பறியும் வேட்கைக்குத் தீனி போடுவதாக ஒரு சம்பவம் நிகழும். ரிமோட் ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில், ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, ஹாலில் ஒரு பெண் கொலையுண்டு கிடப்பது தெரியும். போலீசுக்கு போன் செய்து வரவழைத்து, அதிரடியாக அந்த வீட்டின் கதவைத் தட்டி உள்ளே போனால், யாரும் கொலையுண்டதற்கான தடயமே இருக்காது. தான் கண்ணால் பார்த்ததாகச் சொல்வான். ‘மாடியில் என் மகள் படித்துக்கொண்டு இருக்கிறாள். அவளைத் தவிர, வேறு பெண்கள் கிடையாது’ என்று சொல்லி, அவளைக் கீழே கூப்பிடுவார் அந்த வீட்டின் ஓனர். அவள் கீழே இறங்கி வர, ‘இவள்... இவள்தான் இறந்துகிடந்தாள்’ என்று அலறுவான்.

    இப்படியாக, மிக மர்மமாகச் செல்லும் கதை கடைசியில், அவனது துப்பறியும் வேட்கைக்குத் தீனி போடுவதற்காக நண்பர்களாகச் செய்த செட்டப் அது என்று முடியும். ரொம்பவும் ரசித்துப் படித்தேன். லயித்துப் படித்தேன். யார் எழுதிய கதை இது என்று பெயரைப் பார்த்தேன். பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற பெயர் எனக்குப் பரிச்சயமானது அப்போதுதான்.

    ReplyDelete
  4. அதன்பின்பு, பட்டுக்கோட்டை பிரபாகரின் தொடர்கதை (அது அவரின் முதல் தொடர்கதை) ஒன்று சாவி இதழில் வெளியானது. மன்னிக்கவும், அதன் தலைப்பும் மறந்துவிட்டது. (வயசாகிறது அல்லவா!) யார் எழுதுகிறார் என்று கதாசிரியர் பெயரே இல்லாமல் வெளியான தொடர்கதை அது. கதையின் விறுவிறுப்பிலும் சுவாரசியத்திலும், அதை எழுதுவது யார் என்று தெரிந்துகொள்ள சாவி வாசகர்கள் பெரிதும் ஆர்வப்பட்டார்கள். நானும்! பட்டுக்கோட்டை பிரபாகர் என்று கடைசி அத்தியாயத்தில் பெயரை வெளியிட்டார்கள். பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற பெயர் என் மனதில் பதிந்தது அப்போதுதான்!

    எழுத்தாளரின் பெயரை வாசகர்களின் மனதில் நிலை நிறுத்த சாவி சார் கையாண்ட உத்தி அது. அவரே ஆனந்தவிகடனில் ‘வாஷிங்டனில் திருமணம்’ எழுதியபோது, தன் பெயரையே போட்டுக் கொள்ளாமல், கடைசி அத்தியாயத்தில்தானே பெயரை வெளியிட்டார்! அவருக்குப் பின் அதே பாணியில் கடைசி அத்தியாயத்தில் தன் பெயரை வெளிப்படுத்திக்கொண்டவர் எனக்குத் தெரிந்து பட்டுக்கோட்டை பிரபாகர் மட்டும்தான். சாவி ‘ஆப்பிள் பசி’ என்று நாவல் எழுதினார். அந்தத் தலைப்பை மிகவும் ரசித்து, அதே பாணியில் ‘விஸ்கி தாகம்’ என்று தலைப்பிட்டு ஒரு நாவல் எழுதினார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

    வர்ணனைகளே இல்லாமல் வெறுமே டயலாக்குகளிலேயே ஒரு நாவல் எழுதியுள்ளார் பிரபாகர். (தலைப்பு ‘தொடரும்’ என நினைக்கிறேன்). முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒரு நாவல் எழுதினார் (இதன் தலைப்பு ‘பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்’ என நினைக்கிறேன்). இப்படி அவரது பல நாவல்களை நான் ரசித்துப் படித்திருக்கிறேன். ‘ஆகாயத்தில் ஆரம்பம்’ என்று ஒரு மாத நாவல். விமானத்தில் ஒரு விஞ்ஞானியைக் கடத்துவார்கள். விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத கதை அது.

    பிரபாகரின் நாவலில்தான் முதன்முறையாக வில்லன்கள் கொடூரமாகப் பேசாமல், காமெடியாகப் பேசி நான் படித்திருக்கிறேன்.

    சாவியில் பொறுப்பேற்றபோது, தொடர்கதை கேட்டு பட்டுக்கோட்டை பிரபாகருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘அடுத்த வாரம் விளம்பரத்தில் அறிவிக்க ஒரு தலைப்பு கொடுங்கள்’ என்று என் கடிதத்தில் கேட்டிருந்தேன். ‘சாவியிலிருந்து கதை கேட்டுக் கொடுக்காமல் இருப்பேனா’ என நெகிழ்ச்சியோடு, உடனே பதில் போட்டிருந்தார். கதைத் தலைப்பு: திண்ணை வைத்த வீடு. அந்த இதழிலேயே விரைவில் பட்டுக்கோட்டை பிரபாகரின் புதிய தொடர்கதை ‘திண்ணை வைத்த வீடு’ ஆரம்பிக்கவிருப்பதாக சாவியில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டேன். சொன்னது போலவே உடனடியாக முதல் அத்தியாயத்தை எழுதி, உடனே அனுப்பி விட்டார். ஆழ்ந்து அனுபவித்துப் படித்து ரசிக்க வேண்டிய தொடர்கதை அது.

    ReplyDelete
  5. பின்னர் நான் விகடனில் சேரும் வரைக்கும்... ஏன், சேர்ந்து பல வருடங்களுக்குப் பிறகும்கூட பட்டுக்கோட்டை பிரபாகரை நேரில் சந்தித்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, தன் மகள் திருமணப் பத்திரிகை கொடுப்பதற்காக விகடன் அலுவலகம் வந்திருந்தார். அப்போது சந்தித்ததுதான்! அதற்கு முன்பு வரை வெறும் தொலைபேசித் தொடர்புதான்.

    திருமணப் பத்திரிகையையும் புதுமையான முறையில் வெளியிட்டிருந்தார். ஒரு சி.டி. தயார் செய்து, அதில் இன்விடேஷன், மணமகன், மணமகள் புகைப்பட ஆல்பம் மட்டுமின்றி, சார்லி சாப்ளின், லாரல்-ஹார்டி காமெடிக் காட்சிகளையும் பதிந்து தந்திருந்தார். ரசனை மனம் உள்ளவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் யோசிக்க முடியும்.

    அவரின் மகள் திருமணம் சென்னை, விஜயா மஹாலில் (பழைய நாகேஷ் தியேட்டர்) நடந்தது. அதற்குச் சென்றிருந்தேன். அங்கேதான் முதன்முறையாக ராஜேஷ்குமாரையும் சந்தித்தேன்.

    ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் தன் நண்பர்களுக்கெல்லாம் புத்தாண்டு வாழ்த்து அனுப்பி வைத்துவிடுவார் பட்டுக்கோட்டை பிரபாகர். ஒவ்வொரு முறையும் ஒரு ‘தீம்’ எடுத்துக்கொண்டு, விசேஷ கவனத்தோடு அந்த வாழ்த்து தயாரிக்கப்பட்டிருக்கும். அறிஞர்களின் பொன்மொழிகள், நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள், குட்டிக் குட்டிப் புதுக் கவிதைகள் என வருஷா வருஷம் புத்தாண்டு வாழ்த்து வேறுபடும். இத்தனை வேலைகளுக்கிடையில் எப்படித்தான் இவருக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறதோ என்று பிரமிப்பாக இருக்கும்.

    நானெல்லாம் சுத்த சோம்பேறி. புத்தாண்டு வாழ்த்துகளை எஸ்.எம்.எஸ்ஸில் அனுப்புவதற்குக்கூட எனக்குக் கை வராது. ஒரு சில ஆண்டுகள், ரொம்பப் பிரயத்தனப்பட்டு கிரீட்டிங் கார்டுகள் வாங்கிச் சிலருக்கு அனுப்பினேன். புத்தாண்டு தொடங்கி நாலைந்து நாட்களுக்குப் பிறகு கூட நிதானமாக அனுப்பியிருக்கிறேன். வந்த வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துப் பதில் எழுதுவதற்குக்கூடச் சோம்பேறித்தனம். புத்தாண்டு என்றில்லை; தீபாவளி, பொங்கல் என எந்த விசேஷத்துக்குமே நான் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்து அனுப்புவதை ஒரு கடமையாக நினைக்கவில்லை. அதற்காக நான் நண்பர்களை மதிக்கவில்லை என்றோ, மறந்துவிட்டேன் என்றோ அர்த்தமில்லை. தெரியவில்லை; ஏனோ, வாழ்த்துக்கள் அனுப்பத் தோன்றவில்லை.

    இந்த ஆண்டும் பிரபாகரிடமிருந்து எனக்குப் புத்தாண்டு வாழ்த்து வந்தது. என் புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அது. அதைப் பார்த்ததுமே சட்டென்று என் இதயம் நெகிழ்ச்சியில் கரைந்தது. இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜி முன்னேற்றத்தில் போட்டோவுடன் கூடிய பிரத்யேகமான வாழ்த்து தயார் செய்வது ஒன்றும் கடினமில்லைதான்! ஆனாலும், ஒவ்வொரு நண்பருக்கும் அவருடைய புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அனுப்புவோம் என்கிற அந்த எண்ணம்... நட்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், மெனக்கிடல், அந்த அக்கறை, அன்பு... அதற்கு ஈடாக எதையுமே என்னால் சொல்ல முடியவில்லை.

    பிரபாகர் - தி கிரேட்!

    எனக்கெல்லாம் அவரின் பக்குவம் சுட்டுப் போட்டாலும் வராது. பாருங்களேன்... தொலைபேசியிலோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ, ஈ-மெயிலிலோ அவருக்கு இன்னும் நன்றிகூடத் தெரிவிக்காமல் வலைப்பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன் நான்!

    ReplyDelete
  6. "Pazhaiya Nagesh" theater - this was really the "Pazhaiya Rajakumari" theater in Pondy Bazaar!

    ReplyDelete