Monday, February 21, 2011

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஸ்ரீகாந்தின் புகழ் மகுடத்தில் ஒளிவீசும் வைரம்
லட்சுமிக்கு ஊர்வசி பட்டம் தந்த காவியம்
பீம்சிங்கின் கடைசி வெற்றிச்சித்திரம்
கருப்புவெள்ளை யுகத்தின் கடைசி வெற்றி அத்தியாயம்
ஜெயகாந்தனின் ஒப்பற்ற திரை ஓவியம்

.....இப்படி புகழ்மாலை சூட்டிக்கொண்டே போகலாம் இப்படத்துக்கு.

ஆர்ட் பிலிம் என்றாலே வெற்றிக்கும் அதற்கும் வெகுதூரம். மக்களைச் சென்றடையாது என்ற சித்தாந்தங்களைப் பொய்யாக்கி மாபெரும் வெற்றியடைந்ததன் மூலம், இதுபோன்ற திரைப்படங்களை எடுக்கும் தைரியத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தந்த உன்னதச் சித்திரம்.

ஒரே வீட்டில் பல குடித்தனங்கள் சேர்ந்து, அதே சமயம் தனித்தனியாக வாழும் ஒண்டுக்குடித்தன வாழ்க்கையில் தன் தாயுடன் வசிக்கும் ஒருத்தி ஒரு மழைபெய்த மாலை நேரத்தில் காரில் வந்த காமுகனால் சூறையாடப்பட, அதை மறைக்கத்தெரியாமல் தாயிடம் வெகுளித்தனமாகச் சொல்லப்போக, அதை அந்தத்தாய் அவளைவிட வெகுளித்தனமாக, ஒண்டுக்குடித்தனக்காரர்கள் மத்தியில் விஷயத்தைப் போட்டு உடைத்து, மகளைத் அடிக்க, வெறும் வாய்களுக்கு கிடைத்த அவலாக, அவளது அந்த கருப்பு சம்பவம் அலசப்பட, அவள் களங்கப்படுத்தப்பட்டதை விட அதை வெளியில் சொன்னதுதான் மகா பாவம் என்ற நிலைமைக்கு ஆளாகிப்போனாள்.

முள்ளில் விழுந்த சேலையாக ரொம்ப ஜாக்கிரதையாகக் கையாளப்பட வேண்டிய கதை. கொஞ்சம் நூலிழை பிசகினாலும் விரசம எனும் பள்ளத்துக்குள் விழுந்துவிடக்கூடிய கதையை, இந்திய பாகிஸ்தான் பிரிவினையை விட கவனமாகக் கையாண்டிருந்தார் இயக்குனர் பீம்சிங். அதற்கு அடித்தளமாக அமைந்தது ஜெயகாந்தனின் யதார்த்தமான நடை.

ஊர்வாயில் விழுந்த அவலாக மெல்லப்படும் அவள் அவஸ்தை தாங்காமல் துடிப்பதை லட்சுமியை விட இன்னொருவர் சிறப்பாகக் காண்பித்திருக்க முடியுமா என்ன?. அதிலும் அந்த 'அக்கினிப்பிரவேசம்' என்ற நாவலை தாயிடம் கொடுத்து, அதில் வரும் குறிப்பிட்ட இடத்தைச்சுட்டிக்காட்டும்போது, மீண்டும் பழைய காட்சி... அம்மா சுந்தரிபாய் லட்சுமியை அடிக்கும்போது, வீடு மொத்தமும் எழுந்துபார்க்க.. 'ஒண்ணுமில்லே, இப்படி மழையிலே நனைஞ்சிட்டு வந்திருக்காளேன்னுதான் அடிச்சேன்' என்று சொல்ல மொத்த வீடும், மீண்டும் தங்கள் வேலையைப் பார்ப்பதைக்காண்பித்து, 'அன்னைக்கு மட்டும் நீ இப்படிச் சொல்லியிருந்தால், என் வாழ்க்கை இன்று சேற்றில் போட்டு இழுக்கப் பட்டிருக்குமா' என்பது போல லட்சுமி பார்ப்பாரே ஒரு பார்வை. அப்பப்பா... (தேசிய விருதுக்கமிட்டி அந்த இடத்தில்தான் விழுந்திருக்க வேண்டும்). எப்பேற்பட்ட ஒரு நடிகையை வெறுமனே டூயட் பாடவைத்ததன் மூலம், ஒரு நாதஸ்வரத்தை அடுப்பு ஊத பயன்படுத்தியுள்ளோம் என்ற குற்ற உணர்வு எழுகிறது.

ஸ்ரீகாந்த் மட்டும் என்னவாம். சூப்பர்ப். பாத்திரத்தின் தன்மைக்கு ஈடுகொடுத்து அற்புதமாகச்செய்துள்ளார். ஆரம்பத்தில் லட்சுமியை ஏமாற்றிவிட்டுப்போனதும், அவருக்கு வழக்கமான ரோல்தானோ என்று தோன்றும். ஆனால் மீண்டும் லட்சுமியைச் சந்தித்தபின், அவர் தொடரும் அந்த உறவில் அவர் காட்டும் கண்ணியம், நேர்மை. ஏற்கெனவே தனக்கு ஒரு குடும்பம் இருந்தும், லட்சுமியிடம் அவர் காட்டும் அன்பு, வரம்பு மீறாத பெரியமனுஷத்தனம் .....வாவ். இன்னும் ஒரு நாலைந்து படம் இதுபோல தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் மனிதர் எங்கோ போயிருப்பார்.

எழுத்தாளர் ஆர்,கே.விஸ்வநாத சர்மாவாக வரும் நாகேஷ் அப்படியே அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். காற்றில் பறந்துபோய்க்கொண்டிருக்கும் பேப்பர்களை ஓடி, ஓடி பிடிக்க முயன்று தோற்றுப்போய், மிச்சமிருக்கும் ஒரே பேப்பரையும் இவராகவே காற்றில் பறக்கவிடுவது போன்ற காட்சிகள் இவர் பாத்திரத்துக்கு வலு சேர்ப்பவை. இன்னும் கொஞ்சநேரம் வரமாட்டாரா என்று ஏங்கவைப்பார்.

மறக்காமல் குறிப்பிடப்படவேண்டிய இருவர் அம்மாவாக வரும் சுந்தரிபாய் (வெகுளியான அம்மா), வம்பு பேசும் கூட்டத்தின் மத்தியில் எதைப்பேசுவது, எதை மறைப்பது என்று அறியாத அப்பாவி. ஆச்சாரம் பத்தி மகளிடம் பேசப்போக, 'நீ மட்டும் ரொம்ப ஆச்சாரமோ. அப்பா செத்து இத்தனை வருஷமாச்சு. நீ மட்டும் ஆச்சாரத்தை கடைப்டிச்சியா?' மகள் கேட்டதற்காக, தலையை மொட்டையடித்துக்கொண்டு குளித்து சொட்டச்சொட்ட நனைந்து வந்து நிற்கும் ஒரு இடம்போதும் இவ்ருக்கு பேர் சொல்ல.  

இன்னொருவர், வெங்குமாமா வாக வரும் ஒய்.ஜி.பார்த்தசாரதி. தன் தங்கை மகள் கெட்டுப்போய்விட்டாள் என்று தெரிந்ததும், அவளைத் தான் அடைய அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், பெரிய மனிதனின் வக்கிர புத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டே, கட்டிலில் படுத்திருக்கும் லட்சுமியிடம் செய்யும் சேஷ்டைகள் எல்லைமீறுமுன், கொதித்தெழும் லட்சுமி அவரை பெல்ட்டால் விளாச, தன் மனதில் இருந்த சாத்தான் விரட்டியடிக்கப்பட்டதும், லட்சுமி தூக்கி எறிந்த பெல்ட்டை கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தும்போது, இந்த மனிதர் ஏன் நாடக மேடைகளிலேயே தன்னைக் குறுக்கிக்கொண்டார் என்ற ஆதங்கம் நமக்கு வரும். அதற்கு ஈடாக இன்னொரு காட்சியைச் சொல்வதென்றால், மறுநாள் பொழுது விடிந்ததும் ஒய்.ஜி.பி., லட்சுமியின் அறைக்கதவைத்தட்டி, 'ஐ ஆம் லீவிங்' என்று சொன்னதும், லட்சுமி சட்டென்று அவர் காலில் விழுந்து நமஸ்கரிப்பாரே அதைச்சொல்லலாம்.

இப்படி, படிப்படியாக நம்மை படத்துடன் ஒன்றவைத்து, படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற நினைவை மாற்றி, அல்லது மறக்கடித்து, ஏதோ நம் கண்முன் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களில் நாமும் ஒன்றாகிப்போனோம் என்ற நினைவில் நம்மைக்கொண்டு விடுவதால்தான், அந்த கிளைமாக்ஸ் காட்சி நம்மை அப்படி பாதிக்கிறது.

நம் ஊனையும் உருக வைக்கும் வாணி ஜெயராம் குரலில்....
'வேறு இடம் தேடிப்போவாளோ - இந்த
வேதனையில் இருந்து மீள்வாளோ' என்ற பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க,
அவர் (ஸ்ரீகாந்த்) இனிமேல் மாட்டார் என்று தெரிந்தும், வாசலை வாசலைப் பார்த்துக்கொண்டும், திரைச்சீலை அசையும்போதெல்லாம் ஆவலோடு திரும்பிப் பார்த்துக்கொண்டும் இருக்கும் லட்சுமி இனி வரமாட்டார் என்ற நிதர்சனத்துடன் கடைசியில் ஸ்ரீகாந்த் கழற்றி வைத்துவிட்டுப்போன கோட்டை எடுத்து தன்னோடு அணைத்துக்கொள்ளும்போது, உணர்ச்சிப்பெருக்கால் நம் மனதில் விழும் சம்மட்டி அடி. (பின்னாளில், 'பூவே பூச்சூட வா' கிளைமாக்ஸில் நதியாவை ஆம்புலன்ஸில் கொண்டுபோனபின், கண்களில் நீருடன் மீண்டும் காலிங் பெல்லை பொருத்திக் கொண்டிருக்கும் பத்மினியைப் பார்த்தபோது, மீண்டும் மனதில் விழுந்த அதே சம்மட்டி அடி). ஆம், செல்லுலாய்டில் கவிதை வரையும் திறன் சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

படம் முடிந்தபின்னும் பிரம்மை பிடித்தது போன்ற உணர்வுடன், இருக்கையை விட்டு எழக்கூட மனமில்லாமல் எழுந்து செல்கையில், அடுத்த காட்சிக்காக கியூவில் நிற்பவர்களைப்பார்த்து, 'பீம்சிங் கொன்னுட்டாண்டா' என்று கத்திக்கொண்டு போகும் ரசிகர் கூட்டம் (அன்று 'பாகப்பிரிவினை' பார்த்துவிட்டு இவர்களது அப்பாக்கள் கத்திக்கொண்டு போன அதே வார்த்தை).

இப்படத்துக்கு அற்புதமான இசையைத் தந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 'கண்டதைச் சொல்லுகிறேன்' என்ற பாடலும், 'வேறு இடம் தேடிப்போவாளோ' என்ற பாடலும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தின. பின்னணி இசையிலும் மனதை வருடியிருந்தார்.


தமிழ்த்தாயின் தவப்புதல்வன் ஜெயகாந்தன் எழுதி, முதலில் தினமணி கதிர் பத்திரிகையில் தொடர்கதையாகவும், பின்னர் முழுநாவலாகவும் வெளியாகி மக்கள் உள்ளங்களைக்கொள்ளை கொண்டு, கிடைத்தற்கரிய 'சாகித்ய அகாடமி' விருதையும் பெற்ற இந்நாவல், திரைப்படமாகிறது என்றதும் ஒரு பயம். காரணம் அதற்கு முன் திரைப்படமாக உருப்பெற்ற நாவல்களில் 95 சதவீதம், சிதைந்து உருமாறி, நாவலைப்படித்து விட்டு படம் பார்க்கச்சென்றோர்  மனங்களை ரணமடையச்செய்தன என்பதுதான் உண்மை. ஆனால், இப்படி மாமல்லபுரம் சிற்பமாக இப்படம் உருப்பெற்று, உயர்ந்து நிற்கும் என்பது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்றால்,

 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற இப்ப்டம் மாபெரும் வெற்றிப்படமாகவும் அமைந்தது தமிழ் ரசிகர்களை தலைநிமிரச்செய்தது. ஆம், 112-ம் நாள் படம் பார்க்கச்சென்று டிக்கட் கிடைக்காமல் ரசிகர்கள் திரும்பிய அதிசயமும் நடந்தேறியது. லட்சுமிக்கு, இந்தியாவின் சிறந்த நடிகை என்ற தேசிய விருதான 'ஊர்வசி' விருதையும் பெற்றுத்தந்தது. ஸ்ரீகாந்த்தை நினைக்கும்போதெல்லாம் எனக்குத்தோன்றுவது, "உங்களுக்கு இந்த ஒரு படம் போதுமய்யா"

Sunday, February 13, 2011

கக்கன்ஜி’யுடன் சிவாஜி

தமிழக அரசியல் வரலாற்றில் இன்றுவரை அரசியலில் நேரமையும் எளிமையும் என்பதற்கு ஒரு பெருந்தலைவர் காமராஜ் அவர்களையும், ஒரு கக்கன் அவர்களையுமே அடையாளம் காண்பிக்க முடிகிறது. அந்த அளவுக்கு பெரும் பதவிகளில் இருந்தும் சுத்தமான கைகளுடன் வாழ்ந்தவர்கள். ஒன்பதாண்டுகள் முதலமைச்சராகவும், இறக்கும் வரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் இருந்த பெருந்தலைவர் காமராஜ் மறைந்தபோது அவர் வீட்டு பீரோவில் 126 ரூபாயும், அவரது வங்கிக்கணக்கில் 4,200 ரூபாயும் இருந்ததாகச் சொன்னார்கள் (கவனிக்கவும், 4,200 கோடி அல்ல).

அவர் அடியொற்றி பொதுவாழ்வில் நேர்மையோடு, எளிமையையும் கடைபிடித்தவர்தான், பெருந்தலைவர் அமைச்சரவையிலும், பெரியவர் பக்தவத்சலம் அமைச்சரவையிலும் காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன். (இன்றைய அரசியல்வாதிகளின் அகராதிப்படி 'பிழைக்கத்தெரியாதவர்'). 1978-ல் மதுரை பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த தன் கட்சிப்பிரமுகர் ஒருவரை நலம் விசாரிக்கச்சென்ற அன்றைய முதலமைச்சர் 'மக்கள் திலகம்' திரு எம்.ஜி.ஆர்., அந்த மருத்துமனையின் பொது வார்டில் கூட இடமின்றி, வராண்டாவின் தரையில் பாயில் படுத்தவாறு கடைநிலை சிகிச்சையளிக்கப்பட்டு வந்த கக்கன் அவர்களைக் கண்டு அதிர்ச்சியுற்று, மருத்துவமனை அதிகாரிகளை அழைத்து, கக்கனைப்பற்றி எடுத்துச்சொல்லி, ஸ்பெஷல் வார்டில் முதல்தர சிகிச்சையளிக்க உத்தரவிட்டாராம்.

இதற்கு சில ஆண்டுகளுக்கு முன், எழுபதுகளின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய நடிகர்திலகம் சிவாஜி, அதற்காக, தான் அப்போது நடத்திவந்த 'தங்கப்பதக்கம்' நாடகத்தினை சென்னைக்கு வெளியே பெரிய நகரமொன்றில் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார். தான் சார்ந்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவருமான கக்கன் அவர்களுக்காக நடத்தப்படும் நாடகத்துக்கு பெருந்தலைவர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை அணுக, சாதாரணமாக இதுபோன்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளும் பழக்கமில்லாத பெருந்தலைவர், கக்கன் அவர்களுக்காகவும் நடிகர்திலகத்துக்காகவும் வேண்டுகோளை ஏற்றார். நாடகம் கோவையில் நடந்ததாக நினைவு.

நாடகக்கலைஞர்களை சென்னையிலிருந்து அழைத்துச்சென்று திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது, அவர்களின் சம்பளம், அரங்க வாடகை, நாடக செட்களுக்கான லாரிவாடகை, விளம்பரச்செலவு என அனைத்துச் செலவுகளையும் நடிகர்திலகமே ஏற்றுக்கொண்டார். அபூர்வமாக தங்கள் நகரில் நடிகர்திலகம் பங்கேற்று நடிக்கும் நாடகம், அதுவும் பெருந்தலைவர் தலைமையில் நடக்க இருப்பதையறிந்த ரசிகர்களும் பொதுமக்களும், இந்த அரிய வாய்ப்பைத்தவற விடக்கூடாதென்று பெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர். வசூல் குவிந்தது.


(தங்கப்பதக்கம் நாடக இடைவேளையில், நாடகம் பார்க்க வந்திருந்த கானக்குயில் 'பாரதரத்னா' லதா மங்கேஷ்கருடன் நடிகர்திலகம்)

நாடகத்துக்கான மொத்தச்செலவையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்காக, மேடையிலேயே தலைவர் கரங்களால் வழங்கப்பட்டது. நடிகர்திலகத்தின் இந்த சீரிய சேவையைப்பாராட்டி அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். தலைவர் அளித்த அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் விழாவில் ஏலம் விட்டார். அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். (அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் எழுநூறு ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் நடிகர்திலகம்.

நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.

Thursday, February 10, 2011

வைர நெஞ்சம்

புதுமை இயக்குனர் ஸ்ரீதர் அவர்களால் சித்ராலயா நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு, அவரால் இயக்கப்பட்ட இப்படத்துக்கு, முதலில் அவர் வைத்த பெயர் ஹீரோ-72. இப்பெயர் வைக்க முக்கிய காரணமாக இருந்தது 1972-ல் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் அடைந்த தொடர் வெற்றிகள். இது பற்றி முன்பே நிறைய சொல்லிவிட்டோம். இப்படம் ஹீரோ-72 என்ற பெயரோடு, குறித்த காலத்தில் படப்பிடிப்பு முடிந்து, குறித்த காலத்தில் வெளியாகியிருந்தால் இப்படத்தின் வெற்றி வாய்ப்பு வேறு விதமாக இருந்திருக்கும். மிகக் காலம் கடந்து, வேறொரு பெயர் சூட்டப்பட்டு, ஏனோதானோ என்று வெளியானதால் எதிர்பார்த்த  வெற்றியைப்பெறவில்லை.
  

ஸ்ரீதர் படங்களிலேயே, மிக அழகான, மிக இளைமையான, நடிகர் திலகத்தை இப்படத்தில்தான் காணலாம். இத்தனைக்கும் அவர் படங்களிலேயே பின்னாளில் வந்த படம் (இதையடுத்து சில ஆண்டுகள் கழித்து, இந்த இருவர் கூட்டணியில் இறுதிப்படமாக மோகன புன்னகை வந்தது).

ஒரு பேங்கில் நடைபெறும் ஒரு கொள்ளையை மையமாக வைத்து, அதன் பின்னணியில் இயங்கும் ஒரு கொள்ளை மற்றும் கடத்தல் கும்பலை கதாநாயகன் வேட்டையாடிப்பிடிக்கும் கதை. வல்லவன் ஒருவன், ‘எதிரிகள் ஜாக்கிரதை காலத்தில் வந்திருக்க வேண்டிய கதை. இதைவிட தீவிரமான துப்பறியும் கதைகளான ராஜா போன்ற படங்களை மக்கள் பார்த்து ரசித்தபின் வந்தது.

கதாநாயகி கீதா (பத்மப்ரியா)வின் தந்தை தான் சேர்மனாக இருக்கும் பேங்கிலேயே பணத்தைக் கையாடிவிட்டு தற்கொலை செய்துகொள்ள, பேங்கில் டைரக்டர்களில் ஒருவராக இருக்கும் அவரது மகனுடைய (முத்துராமன்) ஒத்துழைப்புடனேயே, ஒருகொள்ளைக்கும்பல் பேங்கைக்கொள்ளையடித்து, அவர் அப்பா செய்த கையாடலின் தடையத்தையும் மறைத்து அவரைக்காப்பாற்ற, அந்தக் கொள்ளைக்குமபலைப் பிடிக்கப் போராடி வெற்றிபெறும் கதாநாயகனைப்பற்றிய கதை. கொள்ளைக்கும்பலுக்கு உதவியாக இருந்த முத்துராமனின் நண்பன் ஆனந்த் (நடிகர்திலகம்) தான் அந்த துப்பறியும் அதிகாரி என்பதும், இன்னொரு நண்பன் மதன் (பாலாஜி) தான் அந்தக்கொள்ளைக்கும்பலின் தலைவன் என்பதும் கூடுதல் சுவாராஸ்யம். 

நள்ளிரவில் நடந்த கொள்ளையை நேரில் பார்த்த தன் தங்கை கீதாவிடம், அந்த விவரத்தை யாரிடமும் சொல்லக்கூடாது, முக்கியமாக போலீஸிடம் சொல்லக்கூடாது என்று சொல்லும் முத்துராமன், சந்தேகத்தோடு பார்க்கும் தங்கையிடம், 'நீ கல்யாணம் ஆகாத பொண்ணு. தேவையில்லாமல் சாட்சி, கேஸ், கோர்ட்டுன்னு இழுத்தடிப்பாங்க. அதுக்குத்தான் மறைக்கச்சொன்னேன்' என்று சமாளிக்கும் இடமும், தன் நண்பன் ஆனந்த் தான் (நடிகர்திலகம்)  கொள்ளையைக்கண்டுபிடிக்க வந்த அதிகாரி என்றறிந்து, தன் வீட்டில் தங்கியிருக்கும் அவரைக்கொல்ல தண்ணீர் பைப்பில் கரண்ட் ஷாக் வைத்தவர், அவர் ஆன் பண்ணப்போகும் நேரம் நட்பின் வேகத்தால் உந்தப்பட்டு, சட்டென்று மெயினை ஆஃப் செய்து காப்பாற்றும் இடமும் முத்துராமன் கேரக்டருக்கு பெயர் சொல்ல வைக்கும் இடங்கள்.

பத்மப்ரியா பல படங்களில் நடித்திருந்தபோதிலும் இந்தப்படத்தில் அவர் தோன்றும் அளவுக்கு அழகாக எந்தப்படத்திலும் வரவில்லை என்று சொல்லலாம். எல்லாவித நாகரீக உடைகளும் கச்சிதமாக பொருந்துகின்றன. டூயட் பாடல் காட்சிகளில் நன்றாக செய்திருக்கிறார். நடிகர்திலகத்துடன் முதலில் முறைத்துக்கொண்டவர் மெல்ல மெல்ல காதல் வசப்படுவது அழகான கவிதை. நடிகர்திலகத்தின் நடவடிக்கைகளில் சந்தேகப்படும் அவர், அவர் யாரென்று தெரிந்ததும், மனம் உருகிப்போவது டாப். (ஆனால் அவர் யாரென்று அறியும் நேரம், அவர் அண்ணன் முத்துராமனுக்கு உச்சகட்ட அதிர்ச்சி).


அவரது இளமைக்கு ஈடுகொடுத்து நடிகர்திலகம் செய்திருப்பதுதான் பாராட்டுக்குரியது. அழகாக ஸ்லிம்மாக இளமையாகத்தோன்றும் நடிகர்திலகம், தோற்றத்தில் மட்டுமல்லாது, நடிப்பிலும் சுறுசுறுப்பு. குறிப்பாக பத்மப்ரியாவை டீஸ் செய்து அவர் பாடும் பாடலில் நல்ல துள்ளல் மற்றும் துடிப்பு. சண்டைக்காட்சிகளிலும் அப்படியே. குறிப்பாக லாரிக்குள் ஜீப்பை ஏற்றி டூப்ளிகேட் போலீஸுடன் போடும் ஃபைட் கண்ணுக்கு விருந்து. (லொக்கேஷன், சோழவரம் கார் ரேஸ் மைதானமா?). 'செந்தமிழ் பாடும் சந்தன காற்று' டூயட்டிலும் நல்ல அழகு. இந்த மாதிரிக்கதைகளில் உணர்ச்சி மயமான நடிப்பைக்காட்ட வாய்ப்புகள் அரிதுதான். (ராஜாவின் கிளைமாக்ஸில் பண்டரிபாய் அடி வாங்கும்போது சிரிப்பதுபோலவோ, தங்கச்சுரங்கம் கிளைமாஸில் வரும் 'சர்ச்' காட்சியைப் போலவோ ஒரு காட்சியை இயக்குனர் வைத்து, ரசிகர்களை திருப்தி செய்திருக்கலாம்)

முத்துராமனுடன் நண்பனாக உறவாடிக்கொண்டே, கொள்ளைக்கும்பலின் தலைவனாகவும் உலாவரும் பாலாஜிக்கு போதிய வாய்ப்புகள் இல்லை. அவரது கூட்டாளியாக வரும் சி.ஐ.டி.சகுந்தலா வுக்கும் அப்படியே. ஆனால் சகுந்தலாவுக்காக வாணி ஜெயராம் பாடும் 'நீராட நேரம் நல்ல நேரம்' பாடல், மற்ற எல்லா பாடல்களையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறது.   

படத்தின் மிகப்பெரிய குறை, இம்மாதிரி படங்களுக்கு இருக்க வேண்டிய நட்சத்திரக்கூட்டம் போதிய அளவு இல்லாமல், ஏதோ ஓரங்க நாடகம்போல மூன்று நான்கு கேரக்டர்களை மட்டுமே வைத்துக்கொண்டு படம் முழுவதையும் நகர்த்த முயற்சித்திருப்பது. தவிர மந்தமான ஆரம்பம். மிகச்சிக்கனமான தயாரிப்பு. ஏர்போர்ட்டில் நடிகர்திலகம் வருவதாகக் காண்பிப்பதைக்கூட, சும்மா ஸ்டுடியோவில் இருட்டில் பத்துபேரோடு நடந்து வருவதாக காட்டி ஒப்பேற்றி விடுவார்கள். படம் பார்க்கும்போது,  ஸ்ரீதருக்கு இப்படத்தில் நஷ்ட்டம் வந்திருக்க வாய்பில்லை என்றே தோன்றும். அதிக நாட்கள் ஓடாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஓடியவரையில் ஸ்ரீதருக்கு லாபமே கிடைத்திருக்கும். அந்த அளவுக்கு படத்தில் சிக்கனம்.

வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் உழைத்திருக்கும் மற்றும் இருவர் உண்டு. ஒருவர் ஒளிப்பதிவாளர் யு.ராஜகோபால். கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியான ஒளிப்பதிவு. நைட் எஃபெக்ட் காட்சிகள் அதிகம் இருந்தபோதிலும் அத்தனையும் துல்லியம். இயக்குனர் ஸ்ரீதர் ஆச்சே.

இன்னொருவர் 'மெல்லிசை மாமன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். பாடல்கள் அத்தனையும் அருமை.

1) பத்மப்ரியாவை டீஸ் செய்து சிவாஜி பாடும் முதல்பாடல்
' ஏஹே .... மை ஸ்வீட்டி...
என் பிரியத்துக்குரியவளே
இளம் பெண்களில் புதியவளே
நல்ல பருவத்தில் இளையவளே
என் பழக்கத்துக்கினியவளே'

('என் பழக்கத்துக்கு இனியவளே', ‘என் பழக்கத்துக்கு இனி அவளே' கண்ணதாசா, உன்னை புரிஞ்சிக்கறது ரொம்ப கஷ்டம்பா)

2) நடிகர்திலகம் - பத்மப்ரியா பாடும் டூயட் பாடல்..

'செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று
தேரினில் வந்தது கண்ணே'

மனதை இதமாக வருடும் அழகான மெலோடி. டி.எம்.எஸ். - சுசீலா வெற்றி ஜோடியின் இனிய குரலில் நம் மனதை அள்ளும். இப்பாடலை சென்னைக்கு அருகிலுள்ள ஒரு பீச் ரிஸார்ட்டில்தான் படமாக்கியிருப்பார்கள். ஆனால் ஒளிப்பதிவாளரும் இயக்குனரும் சேர்ந்து ஏதோ வெளிநாட்டில் படமாக்கிய உணர்வைத்தருவார்கள்.

3) சி.ஐ.டி.சகுந்தலாவிடமிருந்து கழுத்திலுள்ள டாலரை அபகரிக்க, நடிகர்திலகமும், பத்மப்ரியாவும் மாறுவேடம் போட்டுக்கொண்டு பாடி ஆடும் பாடல்...

'கார்த்திகை மாசமடி கல்யாண சீஸனடி
சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே - இங்கு
மாலையை மாத்திக்கடி முன்னாலே'

பாடலில், மெல்லிசைமன்னர் தவில் பயன்படுத்தி பாடலுக்கு அழகு சேர்த்திருப்பார்.

4) சூப்பர் டாப் பாடல், CID சகுந்தலாவுக்காக வாணி ஜெயராம் பாடிய..

'நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
மேனியொரு பாலாடை
மின்னுவது நூலாடை'

அதிலும் சரணத்தில்...

காலம் பார்த்து வந்தாயோ
கமலம் மலரக் கண்டாயோ..ஓ.... ஓ..... ஓ... ஓ....
கோலம் காணத்துடித்தாயோ
கூடல் வேதம் படித்தாயோ

நீயும் கண்டாய் என்னை
நானும் கண்டேன் உன்னை
போதும் இது நாம் கூட
போதையுடன் ஊடாட

மெல்லிசை மன்னர் மிக அற்புதமாக மெட்டமைத்த பாடல். மக்களை அதிகம் சென்றடையாத பாடல். தொலைக்காட்சிகளுக்கு இப்படியொரு பாடல் தமிழில் வந்திருக்கிறது என்றே தெரியாத பாடல்.

(வி.ஐ.பி.தேன்கிண்னமெல்லாம் நான் இப்போது பார்ப்பது கிடையாது. அவர்கள் என்னென்ன பாட்டு போடப்போகிறார்கள் என்று என் பையனே லிஸ்ட் போட்டுவிடுவான். படகோட்டியில் ஒரு பாடல் (தரை மேல்), ஆயிரத்தில் ஒருவனிலிருந்து ஒரு பாடல் (ஓடும் மேகங்களே), எங்க வீட்டுப் பிள்ளையிலிருந்து ஒரு பாடல் (நான் ஆணையிட்டால்), பாசமலரிலிருந்து (மலர்ந்தும் மலராத), ஞான ஒளியிலிருந்து (தேவனே என்னைப்பாருங்கள்), திருவிளையாடலில் இருந்து ஒரு பாடல் (பாட்டும் நானே), புதிய பறவையிலிருந்து ஒரு பாடல் (எங்கே நிம்மதி)... டைம் முடிந்தது. 'எனக்கு இந்த நல்ல வாய்ப்பினை வழங்கிய '......' டிவிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு'.... அட போங்கப்பா.)

சரி, பாடகி திருமதி வாணி ஜெயராம் கலந்துகொள்ளும் டி.வி. நிகழ்ச்சிகளிலாவது இம்மாதியான பாடல்களைப் பாடுவாரா என்று ஆவலோடு காத்திருந்தால், அவர் மைக்கைப்பிடித்துக்கொண்டு ஆரம்பிப்பார் 'மல்லிகை என் மன்னன் மயங்கும்'... (அவர் 'மல்லிகை' என்று ஆரம்பித்ததும் 'ஆமா. இந்தம்மாவுக்கு இதைவிட்டால் வேறு பாட்டு தெரியாது' என்று ரிமோட்டைத்தேடுவோர் பலர். நல்ல பாட்டுத்தான், இல்லேன்னு சொல்லவில்லை. நாலாம் வகுப்பில் மீனாட்சி டீச்சர் திருக்குறள் நடத்தினார்.. 'பசங்களா, சொல்லுங்க 'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்....'). திருப்பி திருப்பி வாணியம்மா அதையே பாடும்போது, இவர் முப்பதாயிரம் பாடல் பாடினார்.. நாற்பதாயிரம் பாடல் பாடினார் என்பதெல்லாம் பொய்யோ என்று எண்ணத்தோன்றும்.

சரி, மெல்லிசை மன்னராவது என்றைக்காவது இதுபோன்ற 'தான் பெற்ற' அற்புதமான குழந்தைகளைப்பற்றி சொல்வாரா என்றால்.... ஊகும். அவரும் திரும்ப திரும்ப ஜெனோவா, சி.ஆர்.சுப்பராமன், நௌஷாத், எனக்கொரு காதலி இருக்கின்றாள், அறிஞனாய் இரு என்று அந்தக்கால கீறல் விழுந்த கொலம்பியா ரிக்கார்ட் போலவே பேசிக்கொண்டு இருக்கின்றார்.

சரி, படத்தைப்பேச ஆரம்பித்து டாப்பிக் எங்கோ போகிறது (இருந்தாலும் நான் சொன்னதெல்லாம் உண்மைதானே)

படத்தில் நடிகர்திலகம் - பத்மப்ரியா காதல் காட்சிகள் நல்ல் அழகோடும் இளமையோடும் அமைக்கப்படிருக்கும். (ஒருவேளை இந்தக் காட்சிகளை மட்டும் சி.வி.ஆர். இயக்கியிருப்பாரோ). பத்மப்ரியாவின் பெட்ரூமில் சிவாஜி கிண்டல் செய்துகொண்டிருக்க, 'ஐயோ, சீக்கிரம் வாங்க. அங்கே அண்ணன் டைனிங் ஹாலில் காத்துக்கிட்டிருக்கார்' என்று கெஞ்சும் பத்மப்ரியாவிடம், 'உங்க அண்ணன் சாப்பாட்டுராமன். டைனிங் ஹால்லதான் இருப்பான். நான் அழகை ரசிப்பவன் அதனால்தான் பெட்ரூம்ல இருக்கேன்' என்று சிவாஜி பதில் சொல்லும் இடம், இளமை கொஞ்சும் இதுபோன்ற இடங்கள் நிறையவே உண்டு.

1972-ல் துவங்கிய இப்படம், 1975 தீபாவளிக்கே ரிலீஸானது. இதே நாளன்று மற்றொரு படமான ஏ.சி.டி.யின் சினிபாரத் சார்பில் தயாரான 'டாக்டர் சிவா'வும் வெளியானது. (இரண்டு படங்களுக்குமே MSV-யின் பங்களிப்பு அபாரம்) சினிபாரத்தின் முந்தைய படங்களான பாபு, பாரத விலாஸ் படங்களை மனதில் கொண்டு ரசிகர்களும் பொதுமக்களும் ரொம்ப எதிர்பார்த்தனர். மாவுக்கேற்ற பணியாரமில்லை. 'மன்னவன் வந்தானடி' பட வெற்றிக்குப்பின் சிறிது தேக்க நிலை, 'அன்பே ஆருயிரே'யிலிருந்து தொடங்கியது. இடையில் பெருந்தலைவரின் மறைவு ரசிகர் மத்தியிலும் நடிகர்திலகத்திடமும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அந்நேரம் வெளியான இம்மூன்று படங்களோடு தொடர்ந்து வந்த 'பாட்டும் பரதமும்' உனக்காக நான் ஆகிய படங்களும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இத்தனைக்கும் இப்படங்களின் இயக்குனர்கள் எல்லாம் சாமானியர்கள் அல்ல. ஏ.சி.திருலோக்சந்தர், ஸ்ரீதர், பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் என நடிகர்திலகத்துடன் இணைந்து பல வெற்றிகளை ருசித்தவர்கள்.

'வைர நெஞ்சம்'  சிவாஜி ரசிகர்களால் புறந்தள்ளப்பட்டதற்கு இன்னொரு முக்கிய காரணம், இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஸ்ரீதர் இப்படம் தயாரிப்பில் இருந்தபோதே மாற்றுமுகாமுக்கு தாவி, வைரநெஞ்சம் வெளியாவதற்கு சரியாக ஒரு வருடத்துக்கு முன் ஒரு படத்தை தயாரித்து வெளியிட, அது மாபெரும் வெற்றியடைந்தது. அவ்வெற்றியின் மூலமாக தன்னுடைய கடன் தொல்லைகளில் இருந்து மீண்டதாக அவர் சொல்லப்போக, அது திரிக்கப்பட்டு, அவர் நடிகர்திலகத்தை வைத்து எடுத்த முந்தைய படம் மூலம்தான் கடனாளியானார் என்று மாற்று முகாமினரால் பரப்பப்பட, சிவாஜி ரசிகர்கள் வெகுண்டார்கள். அதனால் வைரநெஞ்சம் என்றொரு படம் தயாரிப்பில் இருந்ததையே மறந்தனர். அவர்கள் கவனம் முழுக்க டாக்டர் சிவாவின் பக்கமே இருந்தது. வைரநெஞ்சம் வெளியான ஓடியன் திரையரங்கில் ஒரு கொடி, தோரணம், பேனர் கூட கட்டப்படவில்லையாம்.

ஆக, வைரநெஞ்சம் ஏனோதானோ என்று வெளியாகி, ஏனோதானோ என்று ஓடி ஒருவழியாக ஐந்து வாரங்களை மட்டுமே கடந்தது.

இப்படிப்பட்ட படத்துக்கு நீ ஒரு கட்டுரை எழுதவேண்டுமா? என்று என்னைக்கேட்கலாம். ஆனால் வைரநெஞ்சம் (துவக்கத்தில் குறிப்பிட்ட காரணங்களால்) எனக்குப் பிடித்த படம் . தவிர, இப்படத்தைப்பற்றி வேறு யாரும் எழுதும் வாய்ப்புக்குறைவு. ஆகவேதான் எழுதுவோமே என்ற ஆசை. சர்ச்சைக்குரிய தகவல்கள் இருந்தால் பொறுத்தருளுங்கள்.   

'வைரநெஞ்சம்' பற்றிய என்னுடைய பதிவைப்படித்த அத்தனை அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.

Tuesday, February 8, 2011

எங்க மாமா

நடிகர் திலகத்தின் சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் 'எங்க மாமா' வுக்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அழகான கதை, நடிகர் திலகத்தின் அழகிய தோற்றம் மற்றும் அருமையான நடிப்பு, துறு துறுவென மழலைப்பட்டாளங்கள், அழகான கதாநாயகிகளாக ஜெயலலிதா மற்றும் நிர்மலா ('வெண்ணிற ஆடை' நமக்குத் தந்த இரு பரிசுகள்), வில்லனாக பாலாஜி (ரொம்ப பேர் இதை அவருடைய சொந்தப்படம் என்றே நினைத்திருக்கிறார்கள்), நகைச்சுவையில் கலக்கும் சோ, தேங்காய் மற்றும் ஏ.கருணாநிதி, என்றென்றைக்கும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அருமையான பாடல்கள் என பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய ஒரு அழகான படம்தான் 'எங்க மாமா'.


'ஜேயார் மூவீஸ்' என்ற நிறுவனம் இதற்கு முன் 'வேறொரு' கறுப்பு வெள்ளைப் படத்தை தயாரித்த பிறகு, நடிகர் திலகத்தை வைத்து வண்ணத்தில் தயாரித்த படம் இது. (இதன் பிறகு இதே நிறுவனம் நடிகர் திலகத்தை வைத்து 'ஞான ஒளி', 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களைத் தயாரித்தனர். அவையிரண்டும் நூறு நாட்களைத் தாண்டி ஒடின).
                      
'எங்க மாமா' திரைப்படம் இந்தியில் வெளியான 'பிரம்ம்ச்சாரி' என்ற படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்தியில் ஷம்மி கபூர், ராஜஷ்ரீ, மும்தாஜ், பிரான் ஆகியோர் நடித்திருந்தனர்.

கதைச்சுருக்கம்:

திருமணம் ஆகாத 'கோடீஸ்வரன்' (பெயர்தான் கோடீஸ்வரன், மற்றபடி அன்றாடம் காய்ச்சிதான்) பத்திரிகைகளுக்கு புகைப்படம் எடுக்கும் ஒரு புகைப்படக் கலைஞன். அத்துடன் ஒரு நட்சத்திர ஓட்டலில் பகுதி நேரப் பாடகன். குழந்தைகள் மேல் அன்பு கொண்ட அவர் ஒரு வாடகை வீட்டில் தங்கி தன்னுடன் பல அனாதைக்குழந்தைகளை வைத்து அவர்களுக்கு உண்வு, உடை, கல்வி என அனைத்தையும் வழங்கி ஒரு தந்தையாக இருந்து அன்புடன் வளர்த்து வருகிறார். தன் வீட்டின் முன்பு ஒரு தொட்டில் கட்டி வைத்திருக்க அதில் அனாதைக்குழந்தைகளை மற்றவர்கள் போட்டு விட்டுப் போவதும் அதை இவர் எடுத்து வளர்ப்பதும் இப்படியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இவர் வழக்கமாக புகைப்படம் எடுத்துக் கொடுக்கும் பத்திரிகை ஆசிரியர், இனிமேல் அழகான இளம்பெண்களின் கவர்ச்சியான படங்கள் வேண்டும் என்று கண்டிஷன் போட, வேறு வழியில்லாத இவர் கடற்கரையில் குளிக்கும் இளம் பெண்களை படம் எடுக்கும்போது, ஒரு பெண் (ஜெயலலிதா) தற்கொலை செய்து கொள்ள ஆயத்தமாக நிற்பதைக் கண்டு பதறி ஓடிப்போய் அவளைக் காப்பாற்றுகிறார். வீட்டிற்கு அழைத்து வந்து அவளுடைய கதையை கேட்க, அவ, தன்னுடைய பெயர் சீதா என்றும் தன்னுடைய தாய் தந்தையர் இறந்து விட்டனர் என்றும் கிராமத்திலிருந்து வந்த தன்னை, தனக்கென ஏற்கெனவே திருமணம் செய்ய முடிவு செய்து வைத்திருந்த தன் அத்தை மகன் முரளி கிருஷ்ணன் (பாலாஜி) ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதால் மனமுடைந்து போய் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக கூறுகிறாள்.கோடீஸ்வரனும் (சிவாஜி) குழந்தைகளும் சீதா மேல் இரக்கப்பட்டு அவளை அவள் அத்தை மகன் முரளியுடன் சேர்த்துவைக்க முடிவெடுக்கின்றனர். அதே சமயம், குழந்தைகளை வளர்க்க தன்னுடைய வருமானம் போதாமல் கஷ்டப்படும் கோடீஸ்வரன், முரளியுடன் சீதாவை சேர்த்து வைத்து விட்டால் அவருக்கு இருபதாயிரம் ரூபாய் (அப்போ அது பெரிய தொகை) முரளியிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்று, சீதாவும் அதற்கு சம்மதிக்கிறாள்.

முதலில் முரளியின் நடவடிக்கைகளை அறிய விரும்பும் கோடீஸ்வரன், தான் பாட்டுப்பாடும் ஓட்டலிலேயே பிறந்த நாள் கொண்டாட வரும் முரளியிடம் அந்த ஓட்டலின் பாடகனாக அறிமுகமாகிறார். முரளியின் வேண்டுகோளுக்கு இணங்க, முரளியின் காதலி 'லீலா' (வெண்ணிற ஆடை நிர்மலா)வுடன் ஒரு பாடலும் பாடி ஆடுகிறார். கோடீஸ்வரனுக்கு ஒன்று தெளிவாகிறது. முரளி ஒரு ஷோக்குப் பேர்வழி. அவனைச் சுற்றி எப்போதும் இளம் பெண்களின் கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பட்டிக்காட்டு சீதாவை அவன் ஏற்றுக்கொள்வது என்பது நடக்காத காரியம். முரளி (பாலாஜி)யின் கவனத்தை சீதா (ஜெயலலிதா)வின் பக்கம் திருப்ப வேண்டுமென்றால், அவளை மற்ற பெண்களைக்காட்டிலும் நவநாகரீக மங்கையாக மாற்றியே தீர வேண்டியது அவசியம் என்று உணர்கிறார். வீட்டுக்குத் திரும்பியதும் சீதா விடமும், குழந்தைகளிடமும் இது பற்றி விவாதிக்கிறான். வேறு வழியின்றி சீதா நாகரீக மங்கையாக மாற சம்மதிக்கிறாள்.

படிப்படியாக கோடீஸ்வரன் அவளை நாகரீக மங்கையாக மாற்றி, கிட்டத்தட்ட முரளிக்கே அவளை அடையாளம் தெரியாத அளவுக்கு கொண்டு வந்து, தான் பாட்டுப்பாடும் ஓட்டலிலேயே அவளை அழைத்து வந்து, வழக்கமாக முரளி அமரும் மேஜைக்கருகிலேயே அவளை அமர்த்தி விடுகின்றார். பெண் பித்தனான முரளி அங்கே வரும்போது, தன்னை அசர வைக்கக்கூடிய அப்ஸரஸ் ஆக ஒரு இளம்பெண் அமர்ந்திருப்பதை அறிந்து,  எப்படியும் அவளை அடைய தீர்மானிக்கிறான். தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு வைர மோதிரம் பரிசளிக்க அவள் அதை அலட்சியப்படுத்துகிறாள். தொடர்ந்து பேசும்போது உண்மையில் தான் சீதா என்ற உண்மையை வெளியிட அசந்து போன முரளி அப்போதும் அவளை வெறுக்கவில்லை. அவளை மணந்தே தீருவது என்று முடிவெடுக்க சீதா அதை மறுத்து வீட்டுக்கு திரும்புகிறாள்.

முரளியின் மீது அவள் கொண்ட வெறுப்பு கோடீஸ்வரன் (சிவாஜி) மீது காதலாக மாறுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக கோடீஸ்வரன் மனமும் அவள் பக்கம் திரும்ப ஒரு கட்டத்தில் காதலர்களாகிறார்கள். கோடீஸ்வரனிடம் இருந்து எப்படியும் சீதாவை பிரித்து தான் அடைய வேண்டும் என்று முடிவெடுக்கும் முரளி, பலநாள் வாடகை தராமல் கோடீஸ்வரனும் குழந்தைகளும் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரும் தன்னுடைய நண்பருமான செந்தாமரையை அணுகி, கோடீக்கு நெருக்கடி தருமாறு கூற, செந்தாமரையும் சம்மதித்து அமீனாவுடன் வீட்டை காலி செய்ய வருகிறார். அப்போது அங்கு வரும் முரளி தான் ஏதோ பரோபகாரி போல, ஜப்தி செய்ய வந்தவர்களை கடிந்து கொள்கிறார். அந்நேரம் வெளியில் 'சோ'வென மழை பெய்து கொண்டிருக்க, பாத்திரம் பண்டங்கள், குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் மழை நீரில் வீசியெறியப்படுகின்றன. இதுதான் பேரம் பேச சரியான சமயம் என்பதை உணர்ந்த முரளி, இந்த நெருக்கடியில் இருந்து கோடீயையும் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டுமானால், சீதாவை தனக்கு விட்டுத்தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்க, கோடீஸ்வரன் செய்வதறியாது திகைக்கிறார். குழந்தைகளோ தங்களுக்காக அக்காவை இழந்து விடாதீர்கள், நாங்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்கிறோம் என்று கூற, அதே சமயம் முரளி கோடீயின் தியாக உள்ளத்தை கேலி செய்து 'நீ குழந்தைகள் மேல் கொண்ட அன்பெல்லாம் வெறும் வேஷம். நீ ஒரு சுயநலக்காரன்' என்று கூறி கேலி செய்ய, ஆடிப்போன கோடீஸ்வரன், குழந்தைகளின் நலனுக்காக தன் காதலை தியாகம் செய்ய முடிவெடுக்கிறார்.

முரளியின் தூண்டுதலால் கோடீஸ்வரன் வீட்டிற்கு வரும், சீதாவின் 'திடீர்' சித்தி (சி.கே சரஸ்வதி)யும் அவரது எடுபிடி ஓ.ஏ.கே.தேவரும், சீதாவை கோடீ-யிடம் இருந்து பிரித்து முரளிக்கு சொந்தமான ஒரு இடத்தில் கொண்டு விடுகிறார்கள். அமீனா தன் வீட்டை காலி செய்ய வந்தபோது தனக்கு உதவிய முரளியிடம் அவன் வாக்களித்தபடி சீதாவை மணமுடித்து வைக்க வேண்டுமே என்று எண்ணும் கோடீ, அவள் தானாக வெறுக்க வைக்க ஒரு செட்டப் செய்கிறார். அதன்படி, தனியே பேசுவதற்காக ஓட்டலுக்கு சீதாவை கோடீ அழைத்து வர, அங்கே வரும் பெண்ணொருத்தி அவரிடம் தனியே பேச விரும்புவதாக கூறி அழைத்துச் செல்ல, அவர்களின் உரையாடலை சீதா கேட்க நேரிடுகிறது. அந்தப்பெண்ணுக்கும் கோடீ-க்கும் ஏற்கெனவே தொடர்பு இருப்பது போலவும், அதன் காரணமாக அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது போலவும் அவர்கள் பேசிக்கொள்ள, சீதா (ஜெயலலிதா) மனம் உடைந்து போகிறார். ஏற்கெனவே செய்துகொண்ட செட்டப்பின்படி முரளி (பாலாஜி) அங்கே வர, அவரிடம் சீதா சென்று தன் மனக்குறையைச் சொல்லி அழ, அவன் கோடீ-க்கும் அந்தப்பெண் ணுக்கும் ஏற்கெனெவே தொடர்பு இருப்பதும், அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தனக்கும் தெரியும் என்று கூற அதை நம்பி அவனுடன் செல்கிறாள். அவளை முன்னே போக விட்டு, முரளி பின்னே திரும்பி கோடீ-க்கு சைகையால் நன்றி தெரிவித்து விட்டுப்போகிறான்.

ஏற்கெனவே தன்னுடைய குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் தன் காதலி லீலாவை ஏமாற்றி அவள் தனக்கு ஆதாரமாக வைத்திருந்த தான் எழுதிய கடிதங்களை திருடி தன் பர்ஸில் வைத்து முரளி எடுத்துபோக, குடிகாரனாக வரும் தேங்காய் அந்த பர்ஸை பிக்பாக்கெட் அடித்துப்போய் அவைகளை நண்பன் சோவிடமும் அவன் மனைவி ரமாபிரபாவிடமும் படித்துக் காட்டுகிறான். இந்நிலையில் திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளும் லீலா, அதை கோடீஸ்வரனின் அனாதை இல்லத்தில் போட வரும் போது அவரிடம் மாட்டிக்கொள்கிறாள். அவளைப்பார்த்த கோடீ-க்கு அதிர்ச்சி. 'இவள் முரளியின் பிறந்த நாளில் தன்னுடன் நடனம் ஆடிய பெண்ணல்லவா' என்று எண்ணி விசாரிக்க, அக்குழந்தைக்கு தந்தை முரளிதான் என்று அவள் சொல்லி அதற்கு ஆதாரமான கடிதங்களை முரளி எடுத்துக்கொண்டு போய் விட்டான் என்றும் சொல்கிறாள். அப்போது அந்த இடத்தில் இருக்கும் சோ 'கடிதங்கள் எங்கும் போய் விடவில்லை தன் நண்பனிடம் தான் இருக்கிறது' என்று சொல்ல, அவரும் கோடீயும் தேங்காயிடம் போய் நாலு போடு போட்டு கடிதங்களை வாங்கி, லீலாவை அழைத்துக்கொண்டு நியாயம் கேட்டு முரளியின் வீட்டுக்கு செல்கிறான்.

இதனிடையில் ஜெயலலிதாவை மீட்டு அழைத்து வரலாம் என்று செல்லும் குழந்தைகள் முரளியின் கஸ்டடியில் மாட்டிக்கொள்கிறர்கள். லீலாவை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தைகளைக் கொன்று விடுவதாக முரளி மிரட்ட, இருவருக்கும் பெரிய சண்டை நடக்க சண்டையின் முடிவில் முரளி கடிதங்களை பிடுங்கிக்கொண்டு, குழந்தைகள் அடைக்கப்பட்டிருக்கும் வேனில் தப்பியோட, கோடீஸ்வரன் ஜீப்பில் விரட்ட, ஒரு ரயில்வே லெவெல் கிராஸிங்கில் தண்டவாளத்தின் குறுக்கே வேனை நிறுத்தி விட்டு முரளி ஒளிந்திருந்து, குழந்தைகள் சாகப்போவதை வேடிக்கை பார்க்க, அதே நேரம் ஜீப்பில் வரும் கோடீ, தண்டவாளத்தின் குறுக்கே வேன் நிற்பதையும், ரயில் வேகமாக வந்து கொண்டிருப்பதையும் அதிர்ச்சியோடு பார்த்து, ரயில் வருவதற்குள் ஜீப்பினால் வேகமாக வேனை முட்டித்தள்ளுவதோடு, சடாரென ஜீப்பையும் ரிவர்ஸில் எடுக்க குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர். அப்போது தன்னிடம் இருக்கும் கடிதங்களை முரளி கொளுத்தப்போக, மீண்டும் கோடீ அவனுடன் சண்டையிட்டு அவைகளை கைப்பற்றுகிறான். அப்போது காரில் லீலாவுடன் வந்து இறங்கும் முரளியின் அம்மா, கடிதங்களைப் படித்து உண்மையறிந்து முரளியை அறைந்து, லீலாவை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்க, வேறு வழியில்லாமல் முரளி சம்மதித்து லீலாவுடன் சேருகிறான். மீண்டும் கோடீ-யும் சீதாவும் ஒன்று சேர, குழந்தைகள் குதூகலிக்க‌...... முடிவு 'சுபம்'.


பாடல்களை கண்ணதாசனும், வாலியும் எழுதியிருக்க. இசை...????,  வேறு யார். "மெல்லிசை மாமன்னர்தான்". பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டியது. இன்றைக்கும் தெவிட்டாத தேன் விருந்தாக மக்கள் கேட்டு ரசிக்கிறார்கள்.

முதல் பாடல், தன்னுடைய அனாதை இல்லக்குழந்தைகளை காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு (அந்தக் காரை பார்த்தாலே சிரிப்பு வரும். 'காதலிக்க நேரமில்லை'யில் ரவிச்சந்திரன் வைத்திருப்பாரே அது போன்ற ஒரு கார்) நடிகர் திலகம் சென்னையைச் சுற்றி வரும் பாடல்.

நான் தன்னந்தனிக்காட்டு ராஜா
என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டுப்பிள்ளை
என் தொட்டிலில் எத்தனை முல்லை... முல்லை... முல்லை

இந்தப்பாடல் காட்சி சென்னை மெரீனா கடற்கரை, பழைய உயிரியல் பூங்கா வில் இருந்த குட்டி ரயில், தீவுத்திடல் பொருட்காட்சியின் குடை ராட்டினம், ஜயண்ட் வீல் போன்றவற்றில் படமாக்கப் பட்டிருக்கும். நடிகர் திலகம் வழக்கத்துக்கு மாறாக தொப்பியணிந்து நடித்திருப்பார்

தன்னுடைய குழந்தைகள் இல்லத்தில் நடிகர் திலகம் பாடும் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' என்ற பாடல். 'ல...ல...ல... ல... ல...ல..லா' என்ற ஆலாபனையுடன் டி.எம்.எஸ். பாடத்துவங்கும்போதே நம் மனதை அள்ளிக் கொண்டு போகும்.

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப்பூக்களாம் தொட்டிலிலே
என் பொன் மணிகள்... ஏன் தூங்கவில்லை

எத்தனை முறை கேட்டாலும் கிறங்க வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
இந்தப்பாடல் படத்தில் இரண்டு முறை வரும். மகிழ்ச்சியான சூழ்நிலையில் முதலில் பாடிய இதே பாடலை, சேகரை பணக்காரர் ஒருவருக்கு தத்துக் கொடுத்த பின்னர் சோகமே உருவாக இருக்கும் குழந்தைகளை சமாதானப் படுத்த மீண்டும் ஒருமுறை சோகமாக பாடுவார். இரண்டுமே மனதைத்தொடும்.

பாலாஜியின் பிறந்தநாள் விழாவில், வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் நடிகர் திலகம் பாடும்
"சொர்க்கம் பக்கத்தில்...
நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்"

மஞ்சள் நிற சேலையில் நிர்மலாவும், டார்க் மெரூன் கலர் ஃபுல் சூட்டில் நடிகர் திலகமும் ஆடும் இந்த காட்சி நம் இதயங்கலை கொள்ளை கொள்ளும். நான் திரும்ப திரும்ப சொல்வது ஒன்றுதான். இக்காட்சிகள் மிக அருமையாக அமைய காரணம் அப்போதிருந்த அவருடைய ஒல்லியான அழகு உடம்பு. அதற்கேற்றாற்போல அமைந்த அழகான நடன அசைவுகள். இன்றைக்குப் பார்த்தாலும் அந்தப்பாடல் நம் மனதை அள்ளும். இப்பாடல் டி.எம்.எஸ்ஸும் ஈஸ்வரியும் பாடியிருப்பார்கள். (இப்பாடலுக்காக நடிகர்திலகம் 'அக்கார்டியனை' தோளில் மாட்டிக்கொண்டு வாசிப்பது போல உடலை பெண்ட் பண்ணி நிற்பதுதன் அன்றைய 'தினத் தந்தி' பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம்).

ஓட்டலில் ஜெயலலிதா ஆடும் 'பாவை பாவைதான்... ஆசை ஆசைதான்' என்ற பாடலில் அதிகப்படியான இசையை அள்ளிக்கொட்டியிருப்பார் மெல்லிசை மன்னர். வயலின், கிடார், பாங்கோஸ் யாவும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு விளையாடும்.

நடிகர் திலகத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் டூயட் பாடல் வேண்டுமே என்ற   சித்தாந்தத்தில் உருவான "என்னங்க... சொல்லுங்க... இப்பவோ எப்பவோ" என்ற  பாடல்.
  
கடைசி பாடல்  நம மனதை அள்ளிக்கொண்டு போகும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஓட்டலுக்கு ஜெயலலிதாவுடன் வரும் பாலாஜி, நடிகர் திலகத்தை ஒரு பாடல் பாடும்படி வற்புறுத்த, இவர் தன்னுடைய சோகத்தை யெல்லாம் கலந்து பாடும் இந்த பாடல் இன்றைய இளைஞர்களுக்கும் கூட ஃபேவரைட்.

'பியானோ' வாசித்துக்கொண்டே பாடுவது போன்ற பாடல் இது. டி.எம்.எஸ். அண்ணா பற்றி சொல்லணுமா. அவருக்கு இந்த மாதிரிப் பாடல்களெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. பிண்ணியெடுத்திருப்பார். எத்தனை ஆழமான வரிகள்.

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

பாடலின்போது பாடல் வரிகளின் பொருளை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக்கொள்ளும் ஜெயலலிதாவின் முகபாவமும் அருமையாக இருக்கும்.

நடிகர் திலகம், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, பாலாஜி, சோ, தேங்காய் சீனிவாசன், ஏ.கருணாநிதி, ரமாபிரபா, கி.கே.சரஸ்வதி, ஓ.ஏ.கே.தேவர், செந்தாமரை, டைப்பிஸ்டு கோபு இப்படி பெரியவர்கள் மட்டுமல்லாமல், அப்போதிருந்த குழந்தை நட்சத்திரங்கள் அத்தனை பேரும் (பேபி ராணி நீங்கலாக) பிரபாகர், சேகர், ராமு, ஜெயகௌசல்யா, ரோஜாரமணி, ஜிண்டா, சுமதி இன்னும் பெயர் தெரியாத குழந்தை நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். நடிகர் திலகத்தின் படங்களிலேயே முழுக்க முழுக்க குழந்தைகளோடு நடித்த படம் இது.

அப்போது நடிகர்திலகத்தின் பல படங்களை வரிசையாக இயக்கி வந்த இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இப்படத்தையும் இயக்கியிருந்தார். வசனம் குகநாதன் எழுதியிருந்தார். மாருதிராவ் ஒளிப்பதிவு செய்திருந்தார் (கிளைமாக்ஸில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நிற்கும் வேனை ஜீப் இடித்துத்தள்ளிவிட்டு சட்டென்று ஜீப் ரிவர்ஸில் வர, உடனே ரயில் கடந்து செல்லும் காட்சி தியேட்டரில் பலத்த கைதட்டல் பெற்றது. ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் அருமை).

நான் துவக்கத்தில் சொன்னபடி, நடிகர் திலகத்தின் சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் 'எங்க மாமா'வுக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் உண்டு.

"எங்க மாமா" பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.