'திருடன்' படம் இப்போது பார்க்கும்போது மேலும் மெருகு ஏற்றப்பட்டதுபோல தோற்றமளிக்கிறது. மிக இயல்பான நடிப்பு. ஆம், இன்றைய கதாநாயகர்கள் (சிலர்), வில்லனைப்பார்த்து... 'டேய்' என்று ஆரம்பித்து தொடர்ந்து காட்டுக்கத்தல் போடுவதைப்பார்க்கும்போது (இவற்றையெல்லாம் 'ஓவர் ஆக்டிங்' என்று அழைக்க பலருக்கு வாய் வலிக்கும்), திருடன் படத்தில் நடிகர்திலகத்தின் நடிப்பு ரொம்பவே இயல்பாக இருக்கிறது.
குளக்கரையில் அமர்ந்து கே.ஆர்.விஜயாவிடம், தான் சிறைக்குச்செல்ல நேர்ந்த காரணத்தைச்சொல்லும்போது, நாம் எங்கே எங்கே என்று ஏங்கும் அந்த ஃப்ளாஷ்பேக் வந்து விடுகிறது...
தனது பாஸ் பாலாஜி தூக்கியெறியும் தொப்பியை கீழே விழ விடாமல் குண்டுகளால் துளைத்து அதை ராமதாஸ் தலையில் விழவைக்கும்போது, அவரது துப்பாக்கி சுடும் ஸ்டைல் ரொம்பவே மனதை அள்ளுகிறது. அதேபோல, சினிமா ஷூட்டிங் நடத்துவது போல, பட்டப்பகலில் கூடியிருக்கும் மக்களின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு, சேட் இடமிருந்து பணப்பெட்டியை கொள்ளையடிக்கும் காட்சியில் தொப்பியும் குளிர்க்கண்ணாடியுமாக காட்சியளிக்கும் ஸ்டைல், மற்றும் சசிகுமார் தம்பதியிடமிருந்து வைர நெக்லஸைக் கொள்ளையடிக்கச் சென்ற இடத்தில் யுவராஜா மற்றும் யுவராணியாக அவரும் விஜயலலிதாவும் ஆடும் 'கோட்டைமதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' பாடலின்போது அவர் காட்டும் ஸ்டைல்.... இப்படி எதிலும் செயற்கைத்தனம் தெரியவில்லை.
பிளாக் மெயில் பண்ணி பணம் பறிப்பதற்காக ஒருகுழந்தையைத் திருடிவரச்சென்ற இடத்தில், குழந்தையைக்காணாமல் அதன் தாய் கதறி மூர்ச்சையாகி விழ, இறந்துபோன தன் தாய் மனக்கண்முன் வந்து சாபமிட, மீண்டும் குழந்தையை அவளிடம் ஒப்படைப்பதற்காக குழந்தையைக்கேட்டு, ஸ்டண்ட் மாஸ்ட்டர் திருவாரூர் தாஸுடன் அவர் போடும் சண்டைக்காட்சி அற்புதம். ஒல்லியான உடம்பாதலால் நல்ல சுறுசுறுப்பு, ரசிகர்களுக்கு நல்ல விருந்து.
சிறையிலிருந்து விடுதலையான பின் திருந்தி வாழும் தன்மீது எப்போதும் சந்தேகப்பார்வையை வீசும் போலீஸ் இன்ஸ்பெக்டர் (முன்னர் இவரைக்கைது செய்த) மேஜரிடம், ராஜு (சிவாஜி)யின் மகள் குதிரைப்படம் வரைந்து கேட்க, மேஜர் வரைந்து தரும் படத்தைப்பார்த்து குழந்தை ராணி,... 'அய்யோ இன்ஸ்பெக்டர் அங்கிள். இது குதிரையில்லே கழுதை' என்று சொல்ல...
'என்னப்பா ராஜு, நான் குதிரைப்படம் வரைந்து கொடுத்தால் உன் மகள் கழுதைன்னு சொல்றாளே'
'உங்களைப்பத்தி என்னைவிட என் மகள் நல்லா புரிஞ்சு வச்சிருக்கா'
'என்ன சொல்றே நீ..?'
'உங்களுக்குத்தான் குதிரைக்கும் கழுதைக்கும் வித்தியாசம் தெரியாதே'. (வசனம்: ஏ.எல்.நாராயணன்)
சிறையிலிருந்து ரிலீஸானதும் தான் எவ்வளவு முயற்சித்தும் தன்னுடைய கொள்ளைக்கும்பல் பக்கம் திரும்பாத சிவாஜியைப்பழி வாங்க, இறுதியில் பாலாஜியால் கடத்தப்பட்ட தன் மகள் ராணியை மீட்டு வரச்செல்லும்போது, மனைவி கே.ஆர்.விஜயாவிடம், விரக்தியான முகபாவத்துடன் அவர் பேசும் வசனங்கள் ரொம்பவே யதார்த்தம், 'திரும்பினால் நம்ம பொண்ணோடுதான் திரும்புவேன். இல்லேன்னா'..... கொஞ்சம் நிறுத்தியவர் 'எதுக்கும் எனக்கு இப்பவே வாய்க்கரிசி போட்டு அனுப்பிடு' என்னுமிடத்தில் அவருடைய முகபாவம் அபாரம்.
Thanks a lot Saradha madam for "Thirudan" review... Wonderful movie and worth to run more than 100 days...
ReplyDeleteNT is simply superb...
Cheers,
Sathish
பகிர்வுக்கு மிக நன்றி.
ReplyDeleteAmazing. Pl continue your write up.
ReplyDelete