Monday, January 24, 2011

ராமன் எத்தனை ராமனடி

1969 இறுதியில் தீபாவளியன்று வந்த பிரமாண்ட படமான 'சிவந்தமண்'ணை அடுத்து 1970 பொங்கலன்று வெளியான 'எங்க மாமா' படம் பத்து வாரங்களைத் தொட்டு சுமார் வெற்றி யடைந்தது. நாடகமாக வெற்றியடைந்த 'வியட்நாம் வீடு' படம் படமாக்கப் பட்டபோதும் பல இடங்களில் 100 நாட்களைக்கடந்து ஓடி, 70-ம் ஆண்டில் நடிகர்திலகத்துக்கு முதல் வெற்றிப்படம் என்ற பெருமையைப் பெற்றது. நடிகர்திலகம், A.P.நாகராஜன், K.V.மகாதேவன் இணைந்த 'விளையாட்டுப்பிள்ளை' ரசிகர்களுக்கு நிறைவைத்தரவில்லை. முதல் முறையாக நடிகர் திலகமும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரும் இணைந்து உருவாக்கிய முதல் படமான (இறுதிப்படமும் அதுதான்), ரசிகர்களாலும் பொதுமக்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'எதிரொலி' ஒரு வெற்றிப்படத்துக்குரிய எல்லா அம்சங்களும் நிறைந்திருந்தும் ஏன் மக்கள் மத்தியில் அவ்வளவாகச்சென்றடையவில்லை என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. இந்நேரத்தில் ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் வண்ணம், நடிகர்திலகம் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான பாத்திரப் படைப்போடு வந்த படம்தான் 'ராமன் எத்தனை ராமனடி'.   

முற்பாதியில் கள்ளம் கபடமற்ற, உருவத்தில் இளைஞனாகவும், உள்ளத்தில் குழந்தையாகவும், தன் வயதுக்குப்பொருத்தமில்லாத பள்ளிச்சிறுவர்களுடன் சுற்றித்திரியும் சாப்பாட்டு ராமனாக வும், பிற்பகுதியில் உலகமே மெச்சும் திரைப்பட நடிகராவும் இருவேறு பரிமாணங்களுடன் அற்புதமாகச்செய்திருப்பார். கிராமத்து அப்பாவி இளைஞன் எப்படி சென்னைக்குப்போய் பெரிய நடிகராகிறார் என்பதை ஒப்புக்கொள்ளும்படியான காரண காரியங்களுடன் சொல்லியிருப்பார்கள் கதாசிரியர் பாலமுருகனும், இயக்குனர் மாதவனும்.

பூங்குடி கிராமத்தில் உலகமே அறியாமல், அந்த கிராமத்தின் எல்லைகள் மட்டுமே உலகம் என்று சுற்றிக்கொண்டிருக்கும் ராமன். தன் ஆயாவுக்கு கோயிலில் இருந்து சிதறு தேங்காய் பொறுக்கிக்கொடுப்பதும், ஆயா சுட்டுத்தரும் இட்லிகளை மூக்குப்பிடிக்க வெட்டுவதும், மற்ற நேரங்களில் பள்ளிக்கூட சிறுவர்கள் சிலருடன் சுற்றித்திரிவதும்தான் தன்னுடைய வேலை, அதைத்தாண்டி உலகத்தில் வேறெந்த விஷயமும் இல்லையென்ற ரீதியில் வாழ்ந்து வரும் இளைஞன். அவனுக்கும் ஒரு வீக்னஸ். எதையாவது பார்த்து அதிர்ச்சியடைந்தால் காக்கா வலிப்பு வந்து அவஸ்தைப்படுவான். அந்த கிராமத்தில் ஒரு மைனர். தனது பணக்கார திமிரில் கிராமத்து மக்கள் அனைவரையும் கிட்டத்தட்ட தனது அடிமையாக நடத்துபவன். அவனது தங்கை தேவகி நகரத்தில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு காரில் கிராமத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது, குளக்கரையில் காக்காவலிப்பு வந்து துடித்துக்கொண்டிருக்கும் ராமனை, தன் சாவிக்கொத்தைக்கொடுத்துக் காப்பாற்றுகிறாள். படித்துறையில் அவள் தலை யிலிருந்து விழும் மல்லிகைப்பூவை ஏதோ புனிதப்பொருள்போல எடுத்து அணைத்துக் கொள்ளும் அவன், அந்த சம்பவத்தை தன் நண்பர்களான சில்லுண்டிகளிடம் சொல்லும்போது, அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். மறுநாள் அவர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது, தோழிகளுடன் அந்தப்பக்கமாக வரும் அவள் அவனைப்பார்த்து சிரித்து விட்டுப்போக, அந்த சந்தோஷத்தில் சிறுவர்களுடன் ஆடிப்பாடுகிறான். இன்னொருநாள் இரவில் வீட்டில் ஆயா இல்லாத நேரம், மழைக்காக அவன் வீட்டில் ஒதுங்கும் தேவகி ராமனிடம் கூழ் வாங்கி சாப்பிட்டுப்போகிறாள். இதையெல்லாம் சிறுவர்களிடம் அவன் சொன்னதும், அவர்கள் ஒட்டுமொத்தமாக, 'டேய் சாப்பாட்டு ராமா. தேவகியம்மா உன்னைக் காதலிக்கிறாங்கடா. நீயும் உன் காதலை அவங்க கிட்டே சொல்லிடு. சம்மதிச்சாங்கன்னா, வர்ர ஞாயத்துக்கிழமைதான் எங்களுக்கு ஸ்கூல் லீவு. அன்னைக்கு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லிடு' என்று அப்பாவித்தனமாக உசுப்பேத்தி விட, அதை நம்பிய அவனும் கொஞ்சமும் யோசனையில்லாமல் நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருக்கும் தேவகி வீட்டு மாடி ஜன்னல் வழியாக உள்ளே குதித்து தன் காதலைச்சொல்ல, அவள் அதிர்ச்சியடைகிறாள். இந்த ரெண்டுங்கேட்டானுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று எண்ணும் அவள், தனக்காக எதையும் செய்வதாகச்சொல்லும் அவனிடம் 'எங்கே எனக்காக இந்த மாடியிலிருந்து குதி' என்று சொல்ல, அவனும் எந்த யோசனையுமின்றி குதித்து விட அவள் அதிர்ச்சியடைகிறாள். இந்த களேபரத்தில் விழித்துக் கொள்ளும் மைனர், கால் உடைந்து கிடக்கும் ராமனை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறான். ஆஸ்பத்திரியில் ராமனைப் பார்க்க வரும் தேவகியை ஆயா திட்டி அனுப்புகிறாள். ஆஸ்பத்திரியில் குண்மாகி வீட்டுக்குத்திரும்பும் ராமனை, மீண்டும் அரைடிக்கட்டுகள் சந்தித்து, தேவகிக்கு வேறிடத்தில் கல்யாண ஏற்பாடுகள் நடப்பதாகவும், அவன் நேராக மைனரிடம் போய் பெண் கேட்கும்படியும் ராமனைத் தூண்டிவிட, மைனரின் பங்களாவுக்குப்போகும் ராமன் பெரிய பணக்காரர்கள் மத்தியில் பேசிக்கொண்டு இருக்கும் மைனரிடம் விஷயத்தைச்சொல்ல, அனைவரும் சேர்ந்து ராமனை அடித்து துவைக்கிறார்கள். மைனர் சவுக்கால் விளாசுகிறான். தன் தங்கையை கல்யாணம் செய்ய பெரிய பெரிய பணக்காரர்களெல்லாம் போட்டிபோடுகிறார்கள் என்று சொல்லும் மைனரிடம், தானும் பெரிய லட்சாதிபதியாக வந்து தேவகியை பெண் கேட்கப்போவதாக சவால் விடுகிறான். கடைசியாக மைனர் எட்டி உதைக்க, வாசலில் போய் விழும் ராமனுக்கு மீண்டும் காக்காவலிப்பு வர, காம்பவுண்டின் இரும்பு கேட்டை எட்டிப்பிடிக்கும் அவனது காக்காவலிப்பு நிற்கிறது.

'என்ன ஆயா, பணமாம் பெரிய பணம். நானும் பணக்காரனா வந்து அந்த மைனர்கிட்டே பொண்ணு கேட்கிறேனா இல்லையா பாரு' கொடியில் கிடக்கும் துணிகளை சுருட்டி பைக்குள் வைத்துக்கொண்டே பேசும் ராமனிடம் என்ன சொல்வதென்று புரியாமல் ஆயா விழித்துக் கொண்டு நிற்க, அந்நேரம் அங்கு வரும் தேவகி, ராமன் பணக்காரணாக திரும்பி வரும் வரை அவனுக்காகக் காத்திருப்பதாகச் சொல்ல, ராமன் சென்னைக்கு ரயிலேறுகிறான். அங்கு கைவண்டி இழுத்து, ஒவ்வொரு பைசாவாகச்சேர்த்து வைக்கும் ராமனை ஒருநாள் இரவு சந்திக்கும் அவனது சிறுவர்பட்டாளத்தில் ஒருவனான மூக்குறுஞ்சி, தான் இப்போது சினிமாவில் நடிப்பதாகவும், ராமனையும் சினிமாவில் சேர்த்து விடுவதாகவும் சொல்லி ஸ்டுடியோவுக்கு அழைத்துப்போக, அங்குள்ள இயக்குனருக்கு ராமனின் அப்பாவித்தனம் பிடித்துப்போக, சினிமாவில் நடிக்க வைக்கிறார்.

இதனிடையே பூங்குடி கிராமத்தில் ஒரு வீட்டில், விருந்தினராகத்தங்கியிருக்கும் பட்டணத்து படித்த இளைஞனொருவன், கோயிலில் தவறுதலாக தன் தங்கையின் மீது இடித்துவிட்டதை யறிந்த மைனர், அந்த இளைஞன் தங்கியிருக்கும் வீட்டுக்காரரை அழைத்து, அவ்விளைஞனை ஊரைவிட்டே அனுப்பவேண்டும் என்று எச்சரிக்க, இதையறிந்த அவ்விளைஞன் கிராமத்தில் தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு சரியான பதில் கொடுப்பேன் என்று புறப்பட்டுப்போகிறான். ஆனால் மைனரும் இளைஞனும் நேரடியாக சந்திக்கவேயில்லை

திரைப்பட நடிகரான ராமு, கோடீஸ்வரனாக கிராமத்துக்கு வர, அது யாரென்று அறியாத மைனர் பெரிய வரவேற்பளிக்கிறார். தன்னை யாரென்று அடையாளம் காட்டும் ராமன், தன்னை முன்னர் அடித்தபோது பக்கத்திலிருந்த பணக்காரர்கள் மத்தியில் மைனரை அடிக்க சாட்டையை
எடுக்கிறான், அடிக்கவில்லை. பெட்டி நிறைய பணத்தை மைனர் மீது கொட்டி, தேவகியைத் திருமணம் செய்து தரும்படி கேட்க, இப்போது தானே விரும்பினாலும் தன் தங்கையை திருமணம் செய்து தர முடியாதென்றும், அவள் ஏற்கெனவே திருமணமாகி கணவன் வீட்டுக்குப்போய் விட்டாளென்றும் சொல்ல அதிர்ச்சியில் ராமு நொறுங்கிப்போகிறான்.

ஏமாற்றத்துடன் சென்னை திரும்பும் ராமன், ஒருநாள் காரில் போகும் நேரம், ரோட்டோரத்தில் தேவகியைக் காண, ராமுவைப்பார்த்து அவள் ஓட, விரட்டிச்சென்று பார்க்கும் ராமுவுக்கு அதிர்ச்சி. அவள் கணவனைப்பிரிந்து ஒரு குடிசையில் கைக்குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் வாழ்க்கையில் ராமுவுக்கு ஏற்பட்டதைவிட பலத்த அடியும் ஏமாற்றமும். அவளது கதை ஃப்ளாஷ்பேக்கில் விரிகிறது. அவள்விட்டு வந்த கணவன் வேறு யாருமல்ல, கிராமத்தில் மைனரால் அவமானப்படுத்தப்பட்ட இளைஞன்தான். (ஆனால் மைனரும் அவ்விளைஞனும் ஏற்கெனவே சந்தித்திருக்கவில்லை).தன் குடிகார நண்பர்கள் மத்தியில் கணவன் அவளைப்பாடவிட்டு அவமானப்படுத்த, அதில் ஒருவனால் தன் கற்புக்கு களங்கம் நேர முற்படும்போது, அதையும் கணவன் கொச்சைப்படுத்திப்பேச கணவனை விட்டுப் பிரிந்து தனியே வாழ்கிறாள். மனபாரத்தோடு அவளைப்பிரிந்து ராமு வீட்டுக்கு வர, ஒரு நள்ளிரவில் தேவகி கைக்குழந்தையுடன் அவனைத்தேடி வருகிறாள். மீண்டும் தன் வீட்டுக்கு வந்து தன்ன மானபங்கப்படுத்த முற்பட்ட கயவனைக்கொன்று விட்டதாகவும், தான் சிறையிலிருந்து திரும்பி வரும் வரை தன் பெண் குழந்தையை ராமுதான் வளர்க்க வேண்டுமென்றும் சொல்லி சிறைக்குப்போக..... பெண் குழந்தை ராமுவின் கஸ்ட்டடியில் வளர்ந்து பெரியவளாகிறாள்.

கல்லூரியில் படிக்கும் அவளுக்கு, அம்மாவுக்கு நேர்ந்ததைப்போன்ற அதே ஒரு சூழ்நிலை. மாணவன் போர்வையில் ஒரு கயவனால் அவளது கற்பு பறிபோகும் நேரம் அங்கு அவளைத்தேடி வரும் ராமு தன் வளர்ப்பு மகளைக்காப்பாற்றும் முயற்சியில், அந்தக்கயவனைக் கொன்று விடுகிறார். நடந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் மறைக்க முயற்சிக்கும் மகள், ஒரு டாக்ஸியில் ராமுவை அழைத்துப்போக, அந்த டாக்ஸியின் ட்ரைவர் வேறு யாரும் அல்ல. அவளுடைய அப்பாதான். ராமு பெரிய நடிகர் என்ற முறையில் அவர் அடையாளம் தெரிந்து கொள்ள, அவர் பேசும் பேச்சைக்கொண்டு அவர்தான் தேவகியின் கணவர் என ராமு தெரிந்து கொள்கிறார். வீட்டுக்குப்போனதும் முதல் வேலையாக போலீஸுக்கு போன் செய்யும் ராமு, தான் செய்த கொலையைப்பற்றிச்சொல்லி தன்னைக் கைது செய்ய வரும்படி அழைக்கிறார். தேவகியையும் அவளது கணவரையும் சேர்த்து வைத்த பின் ராமு சிறைக்குச்செல்வதோடு படம் நிறைவடைகிறது.

படத்தின் இறுதியில் நடிகர்திலகம் சிறைக்குச்செல்லும் வரிசைப்படங்களில் ராமன் எத்தனை ராமனடி படமும் ஒன்று (அவரது பட்டியலில் புதிய பறவை, கவரிமான் என்று நிறைய உண்டு).

அவர் நடிகராக மாறியதும் பாத்திரத்தின் பெயரும் விஜயகுமார் என்று மாறி விடும். இதை வைத்துதான் இந்தப்படத்தின் தயாரிப்பாளரகளான அருண்பிரசாத் மூவீஸார் பின்னாளில் தங்களுடைய 'பொண்ணுக்குத் தங்க மனசு' படத்தில் அறிமுகப்படுத்திய ஒரு நடிகருக்கு விஜயகுமார் என்று பெயர் சூட்டினர். அவர் வேறு யாருமல்ல, இப்போது குணச்சித்திர நடிப்பில் கொடிகட்டிப்பறக்கும் விஜயகுமார்தான்.  

நடிகர்திலகம் நடித்த படங்களில் இது ஒரு புதிய பரிமாணத்தை காட்டிய படம். அவரது அறிமுகமே வித்தியாசமாக இருக்கும். " 150 வாழைப்பழம், 60 முறுக்கு, ஒரு முழு பலாப்பழம், ஒரு டஜன் சோடா அனைத்தையும் பத்தே நிமிடங்களில் சாப்பிட்டு சாதனை புரிவான் நம்ம சாப்பாட்டு ராமன்" என்று அறிவித்ததும் சப்பணமிட்டு உட்கார்ந்த நிலையில் நம்மைப் பார்த்து வெகுளிச் சிரிப்போடு கும்பிடுவார். (அன்றைக்கு ஒரு கதாநாயகன் இந்த மாதிரி ரோலில் நடிப்பதற்கும், இப்படி ஒரு அறிவிப்புடன் அறிமுகமாவதற்கும் தனி 'தில்' வேண்டும். இவரைப்பொறுத்த வரை எப்போதுமே இமேஜாவது மண்ணாவது. அதையெல்லாம் காப்பாற்றிக் கொள்ள வேறு ஆட்கள் இருந்தனர்). அப்போது வரிசையாக வந்த படங்களைப் பாருங்கள்... 'எதிரொலி'யில் திருட்டு வக்கீல், இந்தப்படத்தில் சாப்பாட்டு ராமன், சொர்க்கத்தில் குடிப்பவர், எங்கிருந்தோ வந்தாளில் பைத்தியம். ரொம்பத்தான் தைரியம். இப்போதுள்ள நிலை வேறு. அப்போதெல்லாம் கதாநாயகன் என்றால் அப்பழுக்கில்லாத சுத்தமான அவதார புருஷன் என்று காட்டப்பட்டு வந்த காலம்.

அவர் நடிகரானதும் எப்படி முன்னேறுகிறார் என்பதைக்காட்ட இயக்குனர் மாதவன் புது யுக்தியைக் கையாண்டிருந்தார். அவர் நடித்த படிக்காத மேதை, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், எங்க ஊர் ராஜா, தெய்வமகன் ஆகிய படங்களின் முக்கிய காட்சிகளைக்காட்டி அவற்றுக்கிடையே மக்கள் ஆரவாரத்துடன் 100-வது நாள், வெள்ளி விழா என்ற எழுத்துக்களைக் காட்டினார். (இதே உத்தி பின்னர் ஜெயலலிதா நடித்த 'உன்னைச்சுற்றும் உலகம்' படத்திலும் கையாளப்பட்டது).

ரசிகர்களுக்கு ரொம்ப நாளாக ஒரு ஏக்கம். இவர் என்னென்னவோ வரலாற்று பாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். ஆனால், 'சிவாஜி கணேசன்' என்ற பெயரை அவருக்குப்பெற்றுத்தந்த மாவீரன் சத்ரபதி சிவாஜியாக வேடமிட்டு நாம் பார்க்கவேயில்லையே. பெரியார் செய்த பாக்கியம் இந்த சிறியார்களுக்கும் கிடைக்கவில்லையே என்று ஏங்கிய ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் வண்ணம் இத்திரைப்படத்தில் சிவாஜியாக நடிக்கும் காட்சியில் வருவார். அறுபதுகளுக்கு முன் வந்த படங்களில் வந்த ஓரங்க நாடகம் போல அனல் பறக்கும் வசனங்கள். ஒருகாலத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தை தாக்கி எழுதப்பட்ட 'யாரது மண்ணிலே யாரது நாடகம் பார்ப்போம் என்று நான் படையெடுக்க', 'வாழ வந்த வஞ்சகக்கூட்டம் மக்களின் மடமையைக்கொண்டே வளரும் கூட்டம்' போன்ற வசனங்கள் 'பூமராங்' ஆக மாறி தங்களையே திருப்பித்தாக்கும் என்று அன்றைய (ஒன்றுபட்டிருந்த) தி.மு.க.வினர் நினைத்திருக்க மாட்டார்கள். சந்திரமோகன் நாடகத்துக்காக கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்த வசனங்கள் பொருத்தமான முறையில் செருகப்பட்டிருந்ததை ரசிகர்கள் புரிந்து கொண்டு உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தனர்.

படத்தின் பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தில் இரண்டு முறை வரும் ' அம்மாடீ.... பொண்ணுக்குத் தங்க மனசு' பாடல் அப்போது (இப்போதும்) SUPER HIT.. அதிலும் இரண்டாவது பாடலைவிட, முதலில் அப்பாவி ராமு பாடும் பாடல், மெட்டு ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் ரொம்பவே பாப்புலர். இந்தப்பாடலுக்கு முன்னால், கே.ஆர்.விஜயாவும் தோழிகளும் வருமுன்னர் கூட்டாளிகளோடு 'கொலை கொலையா முந்திரிக்கா' விளையாடிக் கொண்டிருக்கும் நடிகர்திலகத்தைக்காட்டி, ‘இவர்தாம்பா வீரபாண்டிய கட்டபொம்மனிலும், பாசமலரிலும்  நடித்தவர். இவ்வளவு ஏன், இதற்கு முந்தைய படமான வியட்நாம் வீட்டில் பிரிஸ்டீஜ் பத்மனாபனாக நடித்தவர்தான்யா இதோ கொலை கொலையா முந்திரிக்கா விளையாடிக் கொண்டிருக்கிறார் என்றால் யாராவது நம்புவார்கள் என்கிறீர்களா?. ஆம், எங்கள் அண்ணன் நடிப்பின் எல்லா நீள, அகல, உயர, ஆழங்களையும் அளந்து முடித்தவர் என்று மார்தட்டிச்சொல்வோம்.

சில ஆண்டுகளுக்குப்பிறகு அதே லொக்கேஷனில், தனித்தவராக ஏமாற்றத்தின் விளிம்பில் நின்று அவர் பாடும்... 'அம்மாடீ... பொண்ணுக்கு தங்க மனசு... தங்க மனசு... தங்க மனசு...' அடுத்த வரி பாட முடியாமல், அண்ணாந்து பார்க்க, அங்கே எரிந்துகொண்டிருக்கும் டியூப் லைட், கிராமம் ரொம்ப மாறிவிட்டது என்பதற்கு அடையாளம் காட்டும்.

எந்த தேவகி என்ற மந்திரச்சொல் தன் வாழ்க்கைப்பாதையையே மாற்றி அமைத்ததோ அந்த தேவகியை சந்திக்கப்போகிறோம் என்ற உற்சாகத்துடன் ரயிலில் வந்துகொண்டிருக்கும் ராமு வுக்கு, முந்தைய ஸ்டேஷனிலேயே தன்னை வரவேற்க வந்து நிற்கும் தேவகியுடன், ரயிலில் பயணிக்கும்போது தேவகி (கே.ஆர்.விஜயா) பாடுவதாக வரும், 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' பாடல் மெல்லிசை மன்னரின் அபார திறமைக்கு எடுத்துக்காட்டு. 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்' என்பது ஒரு மெட்டு, 'தேரில் வந்த ராஜராஜன் என்பக்கம்'  இன்னொரு மெட்டு, சரணத்தில் 'அந்நாளிலே நீ கண்ட கனவு காயாகி இப்போது கனியானதோ' என்பது இன்னொரு மெட்டு... இந்த வாமனர், தன் மூன்று காலடிகளில் இசையுலகையே அளந்து முடித்து விட்டார் என்றால் அது மிகையா?. இல்லவே இல்லை. இப்பாடலுக்கு பக்க வாத்தியமாக வரும் ரயிலின் தாலாட்டு, அது பக்க வாத்தியமல்ல 'பக்கா' வாத்தியம். அக்கால நீராவி எஞ்சினின் விசில் சத்தமாகக் காட்டி அதையே, ஸ்ருதி மாறும் போது ராமு என்கிற விஜயகுமார், புல்லாங்குழல் வாசிப்பதாகக்காட்டுவது மெல்லிசை மன்னரின் கம்போஸிங்கை இயக்குனர் பி.மாதவன் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம். பாடலும் தேவகியும் கனவு என்று அறியும்போதும், அதை மாஸ்டர் பிரபாகர் கிண்டல் செய்யும்போதும் அவர் முகத்தில் தோன்றும் நாணம்.

இந்தப்பாடல் முடிந்து ஸ்டேஷனில் வந்திறங்கும்போது, ஃபுல் சூட்டும் கண்களில் குளிர்க் கண்ணாடியுமாக, ரயில் பெட்டியின் வாசலில் தோன்றும்போது ரசிகர்களின் கைதட்டல் காதைக் கிழிக்கும். (வரவேற்கும் பேண்டு வாத்தியத்தில் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' பாடல்) இதே உடையுடனும், மைனர் அணிவிக்கும் ஆளுயர மாலையுடனும் அவர் நிற்கும் போஸ்தான் படத்தின் முழுப்பக்க விளம்பரம்.

கே.ஆர்.விஜயாவின் ஃப்ளாஷ்பேக் கதையில் வரும் 'நிலவு வந்து பாடுமோ' பாடல் மட்டும் என்னவாம். இந்தப்பாடலிலும் மெட்டு மாறும்... சரணத்தில்

'தலைகுனிந்த பெண்களும் தலை நிமிர்ந்த ஆண்களும்
நிலைகுலைந்து போனபின் நீதி எங்கு வாழுமோ'
என்ற வரிகள் ஒரு மெட்டு

'வாழட்டும் மனது போல போகட்டும்
பார்க்கட்டும் அறிவு கொண்டு பார்க்கட்டும்'
என்ற வரிகள் வேறொரு மெட்டு.
(பாடல் பாடி ரிக்கார்ட் பண்ணியபிறகுதான் படமாக்குகிறார்கள். படத்தில் முத்துராமன், கே.ஆர்.விஜயா காலை மிதிக்க '' என்று கத்தும் அவர் பின்னர் அதை அப்படியே ராகமாக்கிப் பாடுகிறார். எங்கே அது மாதிரிப்பாடுங்கள் என்று சுசீலாவிடம் சொல்லியிருக்க, அப்படியே சுசீலா பாடியிருப்பார் பாருங்கள்... வாவ்) பாவம், இதையெல்லாம் சொல்லிக்காட்ட அன்றைக்கு அவர்களுக்கு எந்த டி.வி.சேனலும் இல்லை. இன்றைக்கு ஒண்ணேமுக்க்கால் படத்துக்கு இசையமைத்தவர்களும், ரெண்டேகால் பாடல் (??) பாடியவர்களும் தங்களின் அனுபவத்தை (???????) இருபது சேனல்களில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

(ரசிகர்கள் கவனத்துக்கு.... நடிகர்திலகத்துக்கு கதாநாயகியுடன் டூயட் பாடல் இல்லாத பல படங்களில் இப்படமும் ஒன்று)





4 comments:

  1. சாரதா அவர்களுக்கு, உங்கள் புதிய இணையதளம் வெற்றிபெற வாழ்த்துக்கள். ராமன் எத்தனை ராமனடி என்னுடைய most sought after படம். நடிகர் திலகத்தின் பரிணாமத்தை வில்லாவாரியாக விவரித்து கூறியிருக்கும் நீங்கள் 2 ப்ரத்யேக காட்சியை விட்டுவிட்டீர்களே? ஒன்று, அம்மாடி பொன்னுக்கு தங்கமனசு பாட்டில் (முதல் வடிவம்) பாலத்தில் ஓடி வந்து முட்டில் இரு கை வைத்து நின்று ஆக்ஷன் காட்டுவது, அவர் திரும்பி நடிகனாக வந்து முதுகை திறந்து தழும்பை காட்டும்போது சரேலென சட்டையை லாவகமாகத் திறப்பது. 'அம்மாடி' பாட்டிற்கு முதலில் ஒரு ஆக்ஷனும் இரண்டாவது 'அம்மாடி'க்கு முற்றிலும் ஒரு வேறுபட்ட பரிணாமமும் கொடுத்து அசத்துவதையும் சேர்த்திருந்தால் இன்னும் சூபாராக இருக்கும். இதேபோல் இன்னும் பல நிகழ்சிகளை இப்படத்தில் கூறலாம்.

    ReplyDelete
  2. டியர் கோப்ஸா,
    தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. பதிவின் நீளம் கருதி சில காட்சிகளைத்தவிரக்க வேண்டியிருந்தது. இருப்பினும் நீங்கள் அதைப்பதித்து குறையை போக்கி விட்டீர்கள். இப்படம் உங்களின் பேவரைட் படங்களில் ஒன்று என்பதை அறிந்து மகிழ்ச்சி. மிக்க நன்றி. அடிக்கடி வாருங்கள்.
    சாரதா.

    ReplyDelete
  3. படம் முடியும்போது நோ கிரை என்பார்...ஆங்கிலம் அரைகுறையாகக் கற்றுக் கொண்ட நடிகர் விஜயகுமார்! என்ன படம்...அப்பா...

    ReplyDelete
  4. வணக்கம் சாரதா
    முதற்கண் எனது வாழ்த்துக்கள். எலிவளை ஆனாலும் தனிவலை நல்லது தான். உங்கள் எழுத்துக்களை "அவார்டா... " வலையில் மாய்ந்து மாய்ந்து படித்த ரசிகன் நான். Such dedicated writings and notings about "NT". Maan gaye ustaad!உங்கள் முகவரியை பாலஹனுமான் மூலம் கிடைக்க பெற்றேன் . ஒரே மூச்சில் உங்கள் சமீப படைப்புகளை ஆர்வத்துடன் படித்தேன்.

    Yes, Raman Yethanai Ramanadi is indded a remarkabale movie. நீங்கள் குறிப்பிட்டது போல் "அம்மாடி ...." பாடல் என்னை மிகவும் பாதித்த ஒன்று. I mean the second version. அமமாடீ,அமமாடீ, என்ன்ற ரீங்காரம் என் கண்களில் கண்ணீரை நிறைக்கும் .
    இப்படத்தில் சிவாஜி விஜயாவை காரிலிர்ந்து பார்த்து விட்டு துரத்தும் காட்சி (இண்டர்வல்லுக்கு அடுத்த காட்சி?) அசோக் நகர் மெயின் ரோட்லே எடுத்த தாக ஞாபகம். கோடை விடு முறையில் சென்னை வந்த போது ஷூட்டிங் பார்த்துவிட்டு திரும்பி தஞ்சை சென்று பள்ளி நண்பர்களிடம் பீலா விட்ட ஞாபகம் பசுமையா இருக்கு,
    வேறு சொல்ல ஒன்னும் நீங்க விட்டு வைக்கலே, sharadaji

    அன்புடன்

    ராஜு-துபாய்

    ReplyDelete