Tuesday, March 15, 2011

வெற்றி யாருக்கு?

இன்னும் சரியாக 28 நாட்களில் தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் அல்லோல கல்லோலப்பட இருக்கிறது. இம்முறை 'நெட் ப்ராக்டிஸ்' பண்னக்கூட அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் கொடுக்காமல், நேரடியாக 'பேட்டை'க்கையில் எடுத்துக்கொண்டு களமிறங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டது தேர்தல் ஆணையம். பிரதான கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் இன்னும் கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில் கூட இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. இதன்பிறகு, தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இன்னும் சிக்கல் நீடிக்கும். இன்னும் மூன்று நாட்களில் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. ஆகவே அரசியல் கட்சிகள் உச்சகட்ட பரபரப்பில் உள்ளன.

ஆனால் ஜெயலலிதாவைப்பொறுத்தவரையில் அவர் ஏற்கெனவே 234 தொகுதிகளுக்கும் தன் கட்சி வேட்பாளர்களைத்தேர்வு செய்து வைத்து விட்டார் என்றும், கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்களை மட்டும் அடித்துவிட்டு அப்படியே வெளியிட வேண்டியதுதான் என்றும், மற்றபடி இப்போது நடக்கும் நேர்காணல் என்பது வெறும் கண்துடைப்பு என்பதும் அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது. (கொடநாடு ஓய்வுகளின்போது அவர் சும்மா படுத்துத் தூங்கவில்லையென்பதும், இந்த வேலையில்தான் இருந்துள்ளார் என்பதும் தெரிகிறது)

கருணாநிதியின் பாடுதான் மிகவும் பரிதாபத்துக்குரியது. இம்முறை கூட்டணிக்கட்சியான காங்கிரஸ், அவர் கழுத்தில் கத்தியை வைத்து 63 தொகுதிகளைப்பெற்றிருக்கிறது என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. 'என் அரசியல் வாழ்க்கையில் இப்படி ஒரு நெருக்கடியை நான் சந்தித்ததில்லை' என்று அவரே அறிக்கைவிடும் அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியது காங்கிரஸ். தலைவர் படும் வேதனையைக் காணச்சகிக்காத உடன்பிறப்புகள், ஒரு கட்டத்தில் காங்கிரஸுடன் கூட்டு முறிந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டதும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் நிலைக்கு ஆளானார்கள். ஆனாலும்கூட காங்கிரஸுடன் கூட்டணி வைத்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு அவரைக்கொண்டு வந்து நிறுத்திய விஷயம் 'திகார் ஜெயிலில் இருக்கும் ஆ.ராசா மற்றும் அவர் சம்மந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் முறைகேடு, அதில் கனிமொழியின் பங்களிப்பு' இப்படிப்பட்ட விஷயங்களே.

அதனால்தான், மிக விசித்திரமான அனுபவங்களை 'அண்ணா அறிவாலயம்' சந்திக்க வேண்டிய சூழல். ஒருபுறம் துணை முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி ஆகிய தேர்தல் பணிக்குழு காங்கிரஸ் தலைவர்களான ப.சிதம்பரம், வாசன், தங்கபாலு, ஜெயந்தி, ஜெயக்குமார் ஆகியோருடன் தொகுதிப்பங்கீட்டுப்பேச்சில் இருக்க, மறுபுறம் முதல்வர் கருணாநிதி, அன்பழகன், அழகிரி ஆகியோர் கட்சியினருடன் நேர்காணலில் ஈடுபட்டிருக்க, மூன்றாவது விஷயமாக அதே சமயம் அதே அறிவாலய மாடியில் சி.பி.ஐ. அதிகாரிகள் முதல்வர் மனைவி தயாளுவிடமும், மகள் கனிமொழியிடமும் விசாரணை நடத்திக்கொண்டிருக்க கூடிய விசித்திர சூழ்நிலை, கூடி நின்ற உடன்பிறப்புக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது என்றால் மிகையல்ல.

'முன்னாள் முதல்வரின் சொத்துக்குவிப்பு வழக்கை கிடப்பில் போட்டு வைத்திருக்கும் மத்திய அரசு, கூட்டணிக்கட்சித்தலைவரிடம் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவது ஏன், இந்த விசாரணைக்கூத்துகளை தேர்தல் முடிந்து வைத்துக்கொள்ள முடியாதா' என்று நினைக்கும் உடன்பிறப்புக்கள் நிச்சயம் பரிதாபத்துக்குரியவர்களே. இந்த விசாரணை என்ற கூத்தே, அதிக தொகுதிகளையும், அவற்றிலும் வேண்டிய தொகுதிகளையும் மிரட்டிப்பெறத்தானே. இவ்விஷயத்தில் சிதம்பரத்துக்கும் மகன் ராகுலுக்கும் சாவி கொடுத்துவிட்டு, சோனியா மறுபக்கம் திரும்பிக்கொண்டார். தொட்டதுக்கெல்லாம் சோனியாவிடம் பேசும் வழக்கமுள்ள க்ருணாநிதிக்கு இம்முறை அதிக பட்சம் பிரணாப் முகர்ஜி வரை மட்டுமே பேச முடிகிறது.  

இம்முறை தேர்தலை சந்திக்க தி.மு.க.கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் அவர்கள் கடந்த ஐந்தாண்டுகள் அளித்த இலவசத்திட்டங்களே. ஒருவிஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்கு முன்பெல்லாம், தேர்தலின்போது ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கமே. அதில், தாங்கள் வெற்றிபெற்றால் 'யானையைத்தருவோம், பூனையைத்தருவோம்' என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால் வெற்றி பெற்றதும் முதல்வேலையாக செய்வது, அந்த தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை மறப்பதுதான். ஆனால் அந்த வகையில் பதவியேற்ற ஐந்தாவது நிமிடத்திலிருந்தே தேர்தல் அறிக்கைகளில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றத் துவங்கிய ஒரே கட்சி, உலகத்திலேயே தி.மு.க.தான் என்பதை ஜெயலலிதா கூட ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்பதையும், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் ரத்து என்பதையும் பதவியேற்ற மேடையிலேயே கையெழுத்திட்டு அதிசயிக்க வைத்தார் கருணாநிதி.

அதுபோல, இலவச தொலைக்காட்சியும் கூட நிறைவேற்ற முடியாத திட்டம் என்பதையும் பொய்யாக்கி, நடத்திக்காட்டினார். இன்னும் கொஞ்சம் பேருக்கே பாக்கி என்கிறார்கள். (ஆனால், அரசுகள் அளிக்கும் இதுபோன்ற இலவசத்திட்டங்களுக்கு நான் பயங்கர எதிர்ப்பாளி என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்). இரண்டு ஏக்கர் நிலம் போன்ற திட்டங்கள் பெரும் தோல்வியடைந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. சமத்துவபுரங்களும் வெட்டிச்செலவு என்பதில் மற்றுக்கருத்தில்லை. ஊருக்கு 100 வீடுகள் கட்டி 'சமத்துவபுரம்' என்று பெயரிட்டால் உடனே நாட்டில் சமத்துவம் வந்து விடும் என்பது பேதமை என்பதையும், அந்த வீடுகள் ஊரில் இருக்கும் மற்ற மக்களின் உழைப்பில் செலுத்தப்பட்ட வரிப்பணங்கள் என்பதும் உணரப்பட வேண்டும்.

மருத்துவக்காப்பீட்டுத் திட்டமும், 108 ஆம்புலன்ஸ் திட்டமும் பயனுள்ளவை என்றே கருதப்படுகிறது. அதுவும் நள்ளிரவு நேரங்களில் அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள், விபத்தில் சிக்கியோர் ஆகியோருக்கு உடனே மற்ற வாகனங்கள் கிடைக்காது என்பதும், அப்படி வரத் துணியும் சிலரும் தங்கள் வாகனத்தின் பாதிவிலையை வாடகையாகக் கேட்பார்கள் என்பது நாம் அறியாதல்ல. எந்த ஏழை அழைத்தாலும் 10 நிமிடத்தில் வரக்கூடிய 108 ஆம்புலன்ஸ் திட்டம் ஏழைகளின் வரப்பிரசாதம் என்பது மறுக்கப்படக்கூடியதல்ல. இதிலும் ஊழல் நடக்கிறது என்று யாரேனும் சொன்னால், அவர்களுக்கு ஒரு வார்த்தை, இத்திட்டத்தால் காப்பாற்றப்படும் ஒரு உயிரின் விலை எத்தனை கோடி ஊழலையும் விட மிகப்பெரியது. நம் சொந்த வாகனங்களில் சென்றால் கூட, மருத்துவமனையில் சேர்த்தபின்புதான் சிகிச்சைகள் துவங்கும். ஆனால் இத்திட்டத்தில் நம் வீட்டு வாசலில் நோயாளி ஏற்றப்பட்ட மறு நிமிடத்திலிருந்து, அவசர சிகிச்சை துவங்குகிறது. இதற்கு முன் பத்து நிமிடம் ஆக்ஸிஜன் கிடைக்காமல் இதுவரை போய்க்கொண்டிருந்த எத்தனையோ உயிர்கள், இத்திட்டத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு இருக்கக்கூடும்.

(108 ஆம்புலன்ஸ் திட்டம் சிறந்துது என்று கூறுவதால், அது 'ஸ்பெக்ட்ரம் ஊழல் சரியானது' என்று அளிக்கப்படும் சர்டிபிகேட் அல்ல). பயனடைந்த, மற்றும் பயனைக்கேள்விப்பட்ட மக்களின் கேள்வி, 'குறை சொல்வோர் ஏன் இதற்கு முன் இத்திட்டங்களை சிந்தித்து, அவற்றை அமுல்படுத்தவில்லை?' என்பதுதான்.

மக்களின் இன்னொரு கேள்வி, மன்மோகனின் அனுமதியுடன், சோனியாவின் ஆசியுடன் நடந்த (அல்லது நடந்ததாக சொல்லப்படுகிற) ஒரு மாபெரும் ஊழலின் மொத்தச்சுமையையும் தி.மு.க. தலையில் மட்டுமே சுமத்தி, காங்கிரஸ் நல்லவன் வேடம் போடுகிறதே எப்படி? என்பதுதான்.

வெற்றி யாருக்கு..? தொடரும்.

3 comments:

  1. அன்புள்ள சாரதா அவர்களே

    அருமையாக சொல்லி உள்ளீர்கள்... தி மு க வின் நிலைமை இப்போது எப்படி உள்ளது என யாராலும் கணிக்க முடிய வில்லை...
    இலவசம் இந்த அரசை காப்பாற்றுமா ? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்... ஆனால் ஜெயா-யை பற்றி நல்லதாக எதுவுமே நினைக்க முடியவில்லை... தி மு க- வுக்கு மாற்று நிச்சயம் அதிமுக இல்லை...இது எனது கருத்து..

    பார்க்கலாம்

    நன்றி
    பலே பலே

    ReplyDelete
  2. Good post.. happenned to visit your blog by accident.. :) I have bookmarked it and would read your old posts too.. happy blogging

    ReplyDelete
  3. Dear Saradaji,

    My best wishes and I appreciate your efforts in opening a political subject.At the same time I wish to inform you that the problem this state is facing from both the Kazhakams is enormous.They have corrupted our value system and we are fast becoming like Bihar of olden days.Mr.M.K is the most corrupt politician who has mastered the art of making money in all possible illegal means.He is supported ably by Ms.Sonia from the central govt and the situation is precarious.I suggest you pl.read blogs like Idlyvadai,Unmaithamizhan,kavirimainthan,savukku to get the real picture.If you had read today's Hindu,it is reported that in TN cash is being paid to buy votes.The going rate is abt Rs 5ooo/vote.Very sorry state.Unless we get CMs like M/s Modi or Nitish Kumar,our dooms day is certain

    Kindly incorporate such studies also in your forthcoming parts

    Thanks and regards,

    ReplyDelete