Tuesday, April 5, 2011

பாட்டும் பரதமும் (கூடுதல் விவரங்கள்)

'பாட்டும் பரதமும்' பற்றி நண்பர்களின் பின்னூட்டங்கள், அப்படம் வெளியான காலகட்டத்தின் நிகழ்வுகளை விவரிப்பதால், அவை இங்கு தனிப்பதிவாக இடப்பட்டுள்ளன. முதலில் நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர், அன்புச்சகோதரர் திரு. ராகவேந்தர் அவர்களின் பதிலுரை.....

அன்புச் சகோதரி சாரதா,என் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற உன்னத திரைக்காவியமான பாட்டும் பரதமும் படத்தைப் பற்றிய தங்கள் பதிவு நெஞ்சைத் தொடுகிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய My Song is For You என்ற பாடலே நீங்கள் குறிப்பிட்ட ஸ்ரீப்ரியாவுடனான பாடலாகும். பல காட்சிகள் இப்படத்தில் மிக மிக சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக கற்பனைக்கு மேனி தந்து பாடல் அப்போதைய மெல்லிசை மேடைகளில் மிகவும் பிரசித்தம். பல டி.எம்.எஸ். ரசிகர்கள் இப்பாடலை மேடை தவறாமல் பாடியதுண்டு.
அரசியலால் பாதிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் படங்களில் இதுவும் ஒன்று. திரையரங்கில் இப்படம் பார்க்க விடாமல் பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றதுண்டு. இப்படம் வெளியான நேரத்தில் தான் ஒரு விநியோகஸ்தர் நடிகர் திலகத்தை விமர்சித்து சுவரொட்டி வெளியிட்டு பரபரப்பூட்டினார். அது மட்டுமின்றி சாந்தி திரையரங்கிலேயே ரசிகர்களிடையே புகுந்து நடிகர் திலகத்தை தாறுமாறாக விமர்சித்தவர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சிகளெல்லாம் உள்ளத்தின் அடித்தளத்தில் அப்படியே தங்கி விட்டன. அப்போதும் நான் நடிகர் திலகத்தின் பால் உள்ள பாசமும் பற்றும் மாறாமல் அவரை விட்டுக் கொடு்க்காமல் பேசுவேன். அது மட்டுமன்றி அவர்களிடம் சவாலும் விட்டிருக்கிறேன். உங்களுடைய அரசியலை நம்பி நடிகர் திலகம் இல்லை. அவருடைய படங்களை உங்கள் கட்சியினர் பார்த்துக் கூட இருக்க மாட்டார்கள். சொல்லப் போனால் இனிமேல் தான் அவர் பல சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்று கூறியிருக்கிறேன் (இவையெல்லாம் உண்மையில் நடந்தது, வெறும் வார்த்தைக்காக கூறியதில்லை.) அதே சாந்தி திரையரங்கில் இன்றும் நாம் கூடுகிறோம். அதே சாந்தியில் இன்றும் நடிகர் திலகத்தின் படம் வெற்றி நடை போட்டிருக்கிறது. ஆனால் அன்று அவரை இழித்தோரும் பழித்தோரும் காணாமல் போயினர். பாட்டும் பரதமும் படம் மட்டுமன்றி அதைத் தொடர்ந்து வந்த உனக்காக நான் படமும் பாதிக்கப் பட்டது. ஆனால் உத்தமன் படம் பெற்ற வெற்றி ஓரளவு மன சாந்தி தந்தது. 1977ல் தீபம் அடைந்த மகத்தான வெற்றி, அதைத் தொடர்ந்து அண்ணன் ஒரு கோயில் மகளிரிடம் பெற்ற அபிமானம், இவையெல்லாம் தாண்டி திரிசூலம் அடைந்த இமாலய வெற்றி என்னுடை கணிப்பை சரியானதாக்கி இன்றளவும் உள்ளத்துள் அந்த சோதனையான நாட்களை எண்ணிப் பார்க்க வைக்கின்றது.

(இதற்கு நான் அளித்த பதிலுரை)

சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கு....

'பாட்டும் பரதமும்' ஆய்வுக்கட்டுரைக்கு நீங்கள் அளித்துள்ள பதிலுரையில் பல நிகழ்வுகளைச்சுட்டிக்காட்டி, பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுள்ளீர்கள். அவை என்றென்றும் ரசிகர்கள் நெஞ்சில் மாறாத நினைவுகள் என்பதைவிட ஆறாத வடுக்கள் என்பதே பொருத்தம். குறிப்பாக இந்தப்படத்துக்கு எதிராக நடந்த சதிகள் நிறைய. டாக்டர் சிவாவும், வைர நெஞ்சமும் அவர் முடிவெடுக்கும் முன் வெளிவந்து பல நாட்களைக் கடந்து விட்டன. அதுபோல 'உனக்காக நான்' வந்தபோது சூடு சற்று ஆறிப்போய் விட்டிருந்தது. ஆனால் 'பாட்டும் பரதமும்'தான் மிகவும் சிக்கலான தருணத்தில் வெளிவந்து, தாக்குதலில் மாட்டியது. அப்போது அண்ணனுக்கு உறுதுணையாக நின்றது அவரது ரசிகர் கூட்டம்தான். ஆனால் அதிலும் கூட பிளவு ஏற்பட்டிருந்தது.

தமிழகம் முழுக்க இப்படி சிக்கல் என்றால், திருச்சி - தஞ்சாவூர் விநியோக ஏரியாவில் கூடுதலாக இன்னொரு பிரச்சினை. பிரச்சினை என்பதைவிட சதி, வியாபாரக் காழ்ப்புணர்ச்சி என்பவையே சரியான பதங்களாயிருக்கும்.

ஏ.வி.எம்.நிறுவனத்தின் பல கிளைகளில் ஒன்று, திருச்சியில் இயங்கி வரும் 'ஏ.வி.எம்.லிமிடட்' என்ற விநியோக நிறுவனம். 'பாட்டும் பரதமும்' பாதித் தயாரிப்பில் இருக்கும்போதே விநியோகஸ்தர்களுக்கான காட்சியைப்பார்த்து விட்டு, அப்படத்தை திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஏரியா உரிமையை வாங்க முயற்சித்தனர். ஆனால் அதைவிட கூடுதல் தொகைக்குக்கேட்ட வேறொரு விநியோகஸ்தருக்கு படம் வழங்கப்பட்டுவிட்டது. இதற்காகவே படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து, நடிகர்திலகத்தின் 'தில்லானா மோகனாம்பாள்' படத்திற்கு அந்த ஏரியா உரிமையை A.V.M.Ltd (Trichy) வாங்கி, சுமார் ஏழெட்டு புதிய பிரிண்ட்கள் எடுத்து 'பாட்டும் பரதமும்' படத்தைத் தோற்கடிப்பதற்காக, அதே 1975 டிசம்பர் 6 அன்று திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களில் 'நாட்டியமும் நாதசுரமும்' என்ற தலைப்பை பெரிதாகப்போட்டு அடைப்புக் குறிக்குள் சிறியதாக (தில்லானா மோகனாம்பாள்) என்ற தலைப்பிட்டு பெரிய பெரிய போஸ்ட்டர்கள் அடித்து வெளியிட்டனர். அதுமட்டுமல்லாது திருச்சி 'தினத்தந்தி' பதிப்பிலும், கடைசி பக்கத்தில் முழுப்பக்க 'பாட்டும் பரதமும்' விளம்பரம் வெளியிடப்பட, அதே இதழில் முதற்பக்கத்தில் கால் பக்க விளம்பர மாக, நடிகர்திலகம் நாதசுரம் வாசிக்க, பத்மினி நாட்டியமாடும் போஸுடன், இன்றுமுதல் 'நாட்டியமும் நாதசுரமும்' என்ற தலைப்பிட்டு விளம்பரம் செய்திருந்தனர். அதாவது, புதியபடத்தின் விநியோக உரிமை கிடைக்கவில்லை என்பதற்காக, நடிகர்திலகத்தின் கையை எடுத்தே அவர் கண்ணைக் குத்தினார்கள். அதிலும் பெரிய கொடுமை, பட்டுக்கோட்டையில் 'தில்லானா' படம் திரையிடப்பட்ட 'நீலா' திரையரங்கின் உரிமையாளர் ஒரு காங்கிரஸ் காரராம். (பாட்டும் பரதமும் 'முருகையா' என்ற தியேட்டரில் வெளியானதாம்).

அதுபோக தமிழகம் முழுவதும் இப்படம் ஓடிய அரங்கின் முன் பா.ராமச்சந்திரன் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸார் கூடி நின்று, 'படம் டப்பா, போகாதீர்கள்' என்று படம் பார்க்க வந்த பொதுமக்களை திசை திருப்பிவிட்டனர். காங்கிரஸ் இணைப்பு மாநாட்டுக்கு முன் எமர்ஜென்ஸியில் தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி கலைக்கப் பட்டிருந்ததால், அவர்களின் எதிர்ப்பும் நடிகர் திலகத்துக்கு எதிராக அமைந்தது. எதிர்வாதத்தில் ஈடுபட்ட நடிகர் திலகத்தின் ரசிகர்களை அடித்து விரட்டினர். எந்தவித சப்போர்ட்டும் இல்லாத ரசிகர்கள் அடிதாங்க முடியாமல் விரண்டோடினர். சென்னையில் மட்டுமல்ல, மதுரை சினிப்ரியா அரங்கின் முன்னும் தினமும் இதே கலாட்டா நீடித்ததாம். (முரளியண்ணா விவரிப்பார் என்று நம்புகிறேன்). ஆனால் மதுரையில் ரசிகர்படை சற்று பலமானது என்பதால் எதிர்ப்பு அவ்வளவாக எடுபடவில்லை. இருப்பினும் கலாட்டாவுக்குப் பயந்த மக்கள் இப்படம் ஓடிய தியேட்டர்களுக்கு வருவதைத் தவிர்க்கத்துவங்கினர். எதிர்ப்பாளர்களின் எண்ணம் பெருமளவு நிறைவேறியது.

அந்த நேரத்தில் இப்பட வெளியீட்டைத் தவிர்த்திருந்தால் படம் நிச்சயம் பெரிய வெற்றியடைந்திருக்கும். அதற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் உள்ளன. இப்படத்துக்காக நடன மேதை கோபிகிருஷ்ணாவிடம் நடிகர்திலகம் குறுகிய காலம் பிரத்தியேகமாக நடனம் கற்றுக்கொண்டார் என்பது கூடுதல் தகவல்.

நடிகர்திலகத்தின் மற்றொரு தீவிர ரசிகரும் நம் அன்புச் சகோதரருமான மதுரை திரு. முரளி சீனிவாஸ் அவர்கள் அளித்த பதிலுரையில் காணக்கிடக்கும் மேற்கொண்ட தகவல்கள்....

சாரதா,
பாட்டும் பரதமும் படத்தை அழகாக எழுதியிருகிறீர்கள். அது உங்களுக்கு கை வந்த கலை. முதல் நாட்டியத்தை பார்க்க வரும் நடிகர் திலகம் அருகில் அமர்ந்திருக்கும் விஜயகுமாரிடம் சொல்லும் வசனம் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று. அண்மையில் கூட அந்த வசனத்தை ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
பாடல்கள் தேனாறு என்றால் மிகையாகாது. எங்கள் வீட்டில் இந்த படத்தின் எல்.பி. ரெகார்ட் வாங்கி போட்டுக் கேட்டுக் கொண்டே இருந்த நினைவுகள் எல்லாம் இன்றும் பசுமையாக இருக்கின்றன. மாந்தோரண வீதியில் பாடல் கவியரசு கொஞ்சம் இலக்கியமாகவே எழுதியிருப்பார். அதாவது அவரது எளிய நடையை விட்டு விட்டு,உறவு நிலையை கவிஞர் விளக்கும் இரண்டாவது சரணம் இலக்கியம் பேசும்.
ஆதித்யன் மேனியை மேகங்கள் மூட
ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட
வசந்தத்தில் பாற்குடம் ஊர்வலம் போக
வந்து விட்டேன் கண்ணா மணமகளாக
  
தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு பாடல் டி.எம்.எஸ் அற்புதம் காட்டியிருப்பார். அதிலும் அவர் ஹை பிட்சில் போகும்
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவள் இல்லையென்றால் நான் வெறும் கூடு
பாவைக்கு போட்டு வைத்தேன் நான் ஒரு கோடு
பாடி பறந்ததம்மா இளங்குயில் பேடு
அப்படியே சிலிர்க்க வைக்கும். கவியரசுவின் தமிழ் விளையாட்டையும் ["மாமழை மேகமொன்று கண்களில் இருப்பு"] இந்த பாடலில் தரிசிக்கலாம்.
இனி அரசியல் உள்ளே புகுந்த கதை. நீங்கள் சொன்ன நாட்டியமும் நாதஸ்வரமும் எனக்கு புதிய செய்தி. ஆக, தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களே படத்திற்கு எதிராக செயல்பட்டிருக்கின்றனர்.
பெருந்தலைவர் மறைந்து இரண்டு மாதங்களே ஆன சூழ்நிலையில் படம் வெளி வந்தது என்றாலும் கூட அந்நேரத்தில் நடிகர் திலகம் தன் அரசியல் முடிவை அறிவிக்கவில்லை. நடிகர் திலகம் இந்திரா காங்கிரஸில் சேரப் போகிறார் என்றும் இல்லையென்றும் செய்திகள் வந்து கொண்டிருந்த நேரம். [அதற்குள் சென்னையில் போஸ்டர் அடித்த செய்திகள் ஆச்சரியமளிக்கின்றன].
பெரும்பான்மையான ரசிகர்களுக்கு நடிகர் திலகம் ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே அவா. இந்த நேரத்தில் அன்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பா.ரா. மற்றும் குமரி அனந்தன், தண்டாயுதபாணி போன்றார் ஸ்தாபன காங்கிரஸ் தன் நிலையில் தொடர வேண்டும் என்று நினைத்த போது, நெடுமாறன், தஞ்சை ராமமூர்த்தி, குடந்தை ராமலிங்கம் போன்றவர்கள் இந்திரா காங்கிரஸில் சேர வேண்டும் என்று பிரசாரம் செய்துக் கொண்டிருந்தனர். தங்களுக்கு சாதகமாக இருப்பதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த மகாதேவன் பிள்ளையை தலைவர் போலக் கொண்டு வந்தனர் [இணைப்பு நடந்த பிறகு இவர் கழட்டி விடப்பட்டது வேறு விஷயம்].
இந்நிலையில் வேறு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நெடுமாறன் அந்த காலக்கட்டத்தில் தினசரி என்று ஒரு நாளிதழ் நடத்திக் கொண்டிருந்தார். ஏனோ தெரியவில்லை நெடுமாறனுக்கு நடிகர் திலகத்தின் மீதும் அவரது ரசிகர் மன்றத்தின் மீதும் கோவம். அவர்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் அது கூடாது என்றும் கட்டுரைகள் எழுதினார். இவருக்கு ஒத்து ஊதினார் தஞ்சை ராமமூர்த்தி. இது நடப்பது 1975-ம் ஆண்டு ஜனவரியில். அந்நேரம் நடிகர் திலகம் மொரிஷியஸ் தீவுகளுக்கு சென்றிருந்தார். ரசிகர்கள் கொந்தளித்து பதில் அறிக்கை கொடுக்க காங்கிரசிலும் ஒரு 1972 புரட்சி ஏற்படுமோ என்று யூகங்கள்கிடையில் நடிகர் திலகம் திரும்பி வந்தவுடன் பெருந்தலைவரை சந்திக்க சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி விழுந்தது. [இன்னும் சொல்லப் போனால் 1972 -ம் ஆண்டு அக்டோபரில் மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கூட நடிகர் திலகமும் ரசிகர்களும் ஓரம் கட்டப்பட்டது நெடுமாறனால்தான் என்ற குற்றசாட்டு கூட உண்டு].
இப்போது மீண்டும் 1975 நவம்பர், டிசம்பருக்கு வருவோம். நடிகர் திலகத்தை தாக்கி எழுதிய நெடுமாறன் தன் செய்தி தினசரியில் அவரை உயர்த்தி எழுத ஆரம்பித்தனர். பல இடங்களிலும் நடிகர் திலகத்தின் மன்றங்கள் இந்திரா காங்கிரஸில் சேருவதாக தீர்மானங்கள் நிறைவேற்றுவதாகவும் இவர்களே செய்திகள் வெளியிட ஆரம்பித்தார்கள். இதற்கும் ஒரு படி மேலே போய் கேள்வி பதில் பகுதியில் ஒரு ரசிகர் கேள்வி கேட்டதை வெளியிட்டார்கள். எப்படி என்றால்
கேள்வி: நடிகர் திலகம் இந்திரா காங்கிரஸில் சேர விரும்புகிறாரா?
பதில்: சேர விரும்புவது மட்டுமல்ல, அதுதான் நாட்டிற்கு நன்மை பயக்கும் என உளமார நம்புகிறார்.
எந்த நெடுமாறன் நடிகர் திலகத்தை வசை பாடினாரோ அந்த நெடுமாறன் பேச்சை கேட்டு நடிகர் திலகம் நடக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. நடிகர் திலகமும் வாயே திறக்கவில்லை. பேசிய ஒரு கூட்டத்தில் [அன்று அவசர நிலை அமலில் இருந்ததால் பொதுக் கூட்டங்கள் கிடையாது. ஏதோ கல்யாணம் அல்லது ஊழியர் கூட்டம் என நினைவு] ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து நீடிக்க போவது போல பேசினார்.
இந்த நேரத்தில் சபரி மலை செல்வதற்காக மாலை போட்டிருந்த அவர் கொல்லம் எக்ஸ்ப்ரஸில் மதுரை வழியாக வந்த போது வெள்ளமென ரசிகர் கூட்டம் அவரை ரயில்வே நிலையத்தில் சந்தித்து தங்கள் உள்ளக்குமுறலை சொன்ன போது உங்கள் விருப்பத்திற்கு மாறாக எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்று உறுதி கூறினார். கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடமும் இதையே சொன்னார். அந்த நேரத்தில் ரசிகர்களில் ஒரு பிரிவினர் நடிகர் திலகம் எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அவர் வழி நடப்பதாக ரத்தக் கையெழுத்து இட்டு மனுக் கொடுத்தனர்.
இவையெல்லாம் பாட்டும் பரதமும் வருவதற்கு ஒரு பத்து நாட்கள் முன்பு நடந்தது. ஆனால் சபரி மலை சென்று விட்டு வந்த பிறகு அவர் எதுவுமே சொல்லவில்லை என்பதுடன் செய்தி நாளிதழில் வெளியான செய்திகளுக்கு மறுப்பும் கொடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை கொடுத்தது. அதுவே படம் வெளியான போது அதற்கு வினையாக மாறியது. படம் வெளியான 15 நாட்களில் படப்பிடிப்பில் அவருக்கு காலில் அடிப்பட்டு விட்டது. வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அந்நேரம் [டிசம்பர் கடைசி] டெல்லியிலிருந்து இந்திராவின் சிறப்பு தூதுவராக வந்த மரகதம் சந்திரசேகர் அவர்கள் அன்னை இல்லத்திற்கு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் விஜயம் செய்து நடிகர் திலகத்தையும், வி.சி.சண்முகம் அவர்களையும் மூளை சலவை செய்து சம்மதிக்க வைத்தார். இவர் வந்ததும் பேசியதும் வெளியில் வராமல் பாதுகாக்கப்பட்டன.[எமர்ஜென்சி வேறு]. தன்னோடு நடிகர் திலகத்தையும் டெல்லி அழைத்து சென்ற மரகதம்மாள் ஜனவரி 1 அன்று இந்திராவிடம் அழைத்து செல்கிறார். அந்த சந்திப்பும் புகைப் படமும் வெளி வரும் போதுதான் அனைவருக்கும் நிலவரம் புரிகிறது. ஏற்கனவே நொண்டிக் கொண்டிருந்த பாட்டும் பரதமும் படம் ரசிகர்களால் அடியோடு கைவிடப் படுகிறது

ஆனால் பெருந்தலைவரின் மீதும் ஸ்தாபன காங்கிரஸ் மீதும் பெறும் பற்றுக் கொண்ட ரசிகர்கள் தங்களுக்கு படத்தை விட கொள்கையே முக்கியம் என்று முடிவெடுக்க படம் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஒரு ஒன்பது வாரப் படமாக மாறிப் போனது. 

(முரளியண்ணாவின் பதிவுக்கு நான் (சாரதா) அளித்த பதிலுரை)

தாங்கள் சொல்லும் வரலாற்று நிகழ்வுகள் அசர வைக்கின்றன. மதுரையில் நெடுமாறன் எப்போதுமே நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு எதிராக செயல் பட்டவர். இந்த விஷயத்தில் மட்டும் அவர் தன் நிலையை நியாயப்படுத்திக் கொள்ள நடிகர்திலகத்தை பகடையாக உபயோகப்படுத்தியிருக்கிறார். (அதே நேரம்தான் மதுரை முத்து, தி.மு.கவில் இருந்து அ.தி.மு.க.வுக்கு மாறினார்). மதுரையில் பெரிய அளவில் கலாட்டாக்கள் நடைபெறவில்லை என்ற போதிலும் வரிசையில் நின்ற ரசிகர்கள் மத்தியிலேயே, படம் பார்க்க வந்தவர்கள் போல பேச்சை ஆரம்பித்து, நடிகர்திலகத்தின் மீது வசை பாடத் துவங்கி, அவை கலாட்டாக்களில் முடிந்துள்ளன. போதாக்குறைக்கு, ஸ்தாபன காங்கிரஸின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான நெல்லை ஜெபமணி மதுரையில் பேசும்போது, 'இன்னும் அந்தப்படம் (பாட்டும் பரதமும்) தியேட்டரில் ஓடிக்கொண்டிருப்பது ஸ்தாபன காங்கிரஸ்காரர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது" என்று பேசி வன்முறையைத் தூண்டி விட்டுள்ளார். (அதே ஸ்தாபன காங்கிரஸின் வளர்ச்சிக்காகத்தான் நடிகர்திலகம் காலமெல்லாம் பாடுபட்டார் என்ற நன்றியை மறந்தனர்).

1 comment:

  1. அன்புள்ள சாரூ,

    இன்று அமரரான நடிகை சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு write-up போட முடியுமா?
    நன்றி
    Regards,

    ReplyDelete