Sunday, February 6, 2011

திருவள்ளுவர் சிலை

1968-ல் தமிழ்நாட்டில் திரு அண்ணாதுரை அவர்களை முதலவராகக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்தபோது, சென்னையில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆயத்தங்கள் மும்முரமாயின. (முதல் மாநாடு மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் நடந்திருந்தது). இதையொட்டி நடத்தப்படவிருந்த பிரம்மாண்டமான ஊர்வலத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பு, திரைப்படத்தயாரிப்பாளர் ஜெமினி அதிபர் திரு எஸ்.எஸ்.வாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்காக வாசன் அமைத்த குழுவில் ஏ.வி.மெய்யப்பச்செட்டியார், ஏ.எல்.சீனிவாசன், சாண்டோ சின்னப்பாதேவர் போன்றோர் இடம் பெற்றனர்.

உலகத்தமிழ் மாநாட்டின் இன்னொரு முக்கிய அம்சமாக, சென்னையில் தமிழறிஞர்கள் மற்றும் சான்றோர்களுக்கு சிலை அமைத்து பெருமைப் படுத்துவது என்ற தீர்மானத்தின் படி திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், பாரதியார், பாரதிதாசன், அவ்வையார், ஜி.யு.போப், வீரமாமுனிவர், கண்ணகி, வ.உ.சிதம்பரனார் இவர்களின் சிலைகளை அமைப்பதோடு முதலமைச்சர் அண்ணாவின் சிலையையும் நிறுவுவது என்று முடிவு செய்யப்பட்டது. கம்பர் சிலையை அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் கருத்திருமன் முன்னின்று செய்து தருவதாக ஒப்புக்கொண்டார். கண்ணகி சிலையை தமிழ்நாட்டு மாணவர்கள் நிதியளித்து நிறுவ முற்பட்டனர். திரு எம்.ஜி.ஆர். தங்கள் தலைவர் அண்ணாவின் சிலையை செய்து தர ஒப்புக்கொண்டார் (தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் அண்ணாசிலை அதுதான்). இளங்கோவடிகள் சிலை அமைக்கும் பொறுப்பை பூம்புகார் படத்தயாரிப்பாளர் முரசொலி மாறன் ஏற்றுக்கொண்டார்.

இந்த வரிசையில் திருவள்ளுவரின் முழு உருவச்சிலையை செய்து தரும் பொறுப்பை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ஏற்றுக்கொண்டார். அதுவும் மற்ற சிலைகளெல்லாம் வெண்கலப்பூச்சு கொண்ட சிலைகளாக அமைந்திருக்க, திருவள்ளுவர் சிலை மட்டும் முழுக்க முழுக்க கருங்கல்லினால் செதுக்கப்பட்டு நிறுவப்பட்டது. ஏற்கெனவே சென்னை மயிலையில் ஒரு திருவள்ளுவர் இருந்தபோதிலும் உலகத்தமிழ் மாநாட்டின்போது மீண்டும் நிறுவக்காரணம், மயிலையில் உள்ள சிலையில் நெற்றியில் விபூதிப்பட்டை மற்றும் மார்பில் பூணூல் போன்றவை அணிந்திருப்பது போல அமைந்திருப்பதால் ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் வள்ளுவரை அடக்கிவிட்டது போன்ற தோற்றம் தந்தது. மேலும் எல்லோருடைய சிலைகளும் சென்னை மெரீனா கடற்கரையில் வரிசையாக அமைக்கப்பட்டதால் திருவள்ளுவர் சிலையும் அங்கு நிறுவப்பட்டது.


திருவள்ளுவர் சிலையை முழுக்க முழுக்க தன் செலவில் செய்து தந்ததோடல்லாமல், அச்சிலை அமைக்க தானே வள்ளுவராக வேடம் தரித்து அதற்கு மாடலாக நின்றார் நடிகர்திலகம். சிலைவடிக்கும் வேலை நடந்துகொண்டிருத சமயம் தமிழறிஞர் ஒருவரை நடிகர்திலகம் ஆலோசனை கேட்டபோது, வள்ளுவரின் பக்கத்தில் முழங்கால் உயர பேழையொன்றை அமைத்து அதன்மீது ஓலைச்சுவடிகள் வைக்கப் பட்டிருப்பது போல அமைக்குமாறு அவ்வறிஞர் சொல்ல, நடிகர்திலகம் அந்த யோசனையை ஏற்று அவ்வாறே செய்யுமாறு ஸ்தபதியைக் கேட்டுக்கொள்ள அப்படியே அமைக்கப்பட்டது

சென்னை மெரீனா கடற்கரையில், விவேகாநந்தர் இல்லம் எதிரே கம்பீரமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை, வள்ளுவரின் புகழையும், இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின் நினைவையும், சிலை வழங்கிய நடிகர்திலகத்தின் பெருமையையும் என்றென்றும் பறைசாற்றிக்கொண்டு நிற்கிறது.

No comments:

Post a Comment