Sunday, February 13, 2011

கக்கன்ஜி’யுடன் சிவாஜி

தமிழக அரசியல் வரலாற்றில் இன்றுவரை அரசியலில் நேரமையும் எளிமையும் என்பதற்கு ஒரு பெருந்தலைவர் காமராஜ் அவர்களையும், ஒரு கக்கன் அவர்களையுமே அடையாளம் காண்பிக்க முடிகிறது. அந்த அளவுக்கு பெரும் பதவிகளில் இருந்தும் சுத்தமான கைகளுடன் வாழ்ந்தவர்கள். ஒன்பதாண்டுகள் முதலமைச்சராகவும், இறக்கும் வரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் இருந்த பெருந்தலைவர் காமராஜ் மறைந்தபோது அவர் வீட்டு பீரோவில் 126 ரூபாயும், அவரது வங்கிக்கணக்கில் 4,200 ரூபாயும் இருந்ததாகச் சொன்னார்கள் (கவனிக்கவும், 4,200 கோடி அல்ல).

அவர் அடியொற்றி பொதுவாழ்வில் நேர்மையோடு, எளிமையையும் கடைபிடித்தவர்தான், பெருந்தலைவர் அமைச்சரவையிலும், பெரியவர் பக்தவத்சலம் அமைச்சரவையிலும் காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன். (இன்றைய அரசியல்வாதிகளின் அகராதிப்படி 'பிழைக்கத்தெரியாதவர்'). 1978-ல் மதுரை பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த தன் கட்சிப்பிரமுகர் ஒருவரை நலம் விசாரிக்கச்சென்ற அன்றைய முதலமைச்சர் 'மக்கள் திலகம்' திரு எம்.ஜி.ஆர்., அந்த மருத்துமனையின் பொது வார்டில் கூட இடமின்றி, வராண்டாவின் தரையில் பாயில் படுத்தவாறு கடைநிலை சிகிச்சையளிக்கப்பட்டு வந்த கக்கன் அவர்களைக் கண்டு அதிர்ச்சியுற்று, மருத்துவமனை அதிகாரிகளை அழைத்து, கக்கனைப்பற்றி எடுத்துச்சொல்லி, ஸ்பெஷல் வார்டில் முதல்தர சிகிச்சையளிக்க உத்தரவிட்டாராம்.

இதற்கு சில ஆண்டுகளுக்கு முன், எழுபதுகளின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய நடிகர்திலகம் சிவாஜி, அதற்காக, தான் அப்போது நடத்திவந்த 'தங்கப்பதக்கம்' நாடகத்தினை சென்னைக்கு வெளியே பெரிய நகரமொன்றில் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார். தான் சார்ந்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவருமான கக்கன் அவர்களுக்காக நடத்தப்படும் நாடகத்துக்கு பெருந்தலைவர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை அணுக, சாதாரணமாக இதுபோன்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளும் பழக்கமில்லாத பெருந்தலைவர், கக்கன் அவர்களுக்காகவும் நடிகர்திலகத்துக்காகவும் வேண்டுகோளை ஏற்றார். நாடகம் கோவையில் நடந்ததாக நினைவு.

நாடகக்கலைஞர்களை சென்னையிலிருந்து அழைத்துச்சென்று திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது, அவர்களின் சம்பளம், அரங்க வாடகை, நாடக செட்களுக்கான லாரிவாடகை, விளம்பரச்செலவு என அனைத்துச் செலவுகளையும் நடிகர்திலகமே ஏற்றுக்கொண்டார். அபூர்வமாக தங்கள் நகரில் நடிகர்திலகம் பங்கேற்று நடிக்கும் நாடகம், அதுவும் பெருந்தலைவர் தலைமையில் நடக்க இருப்பதையறிந்த ரசிகர்களும் பொதுமக்களும், இந்த அரிய வாய்ப்பைத்தவற விடக்கூடாதென்று பெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர். வசூல் குவிந்தது.


(தங்கப்பதக்கம் நாடக இடைவேளையில், நாடகம் பார்க்க வந்திருந்த கானக்குயில் 'பாரதரத்னா' லதா மங்கேஷ்கருடன் நடிகர்திலகம்)

நாடகத்துக்கான மொத்தச்செலவையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்காக, மேடையிலேயே தலைவர் கரங்களால் வழங்கப்பட்டது. நடிகர்திலகத்தின் இந்த சீரிய சேவையைப்பாராட்டி அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். தலைவர் அளித்த அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் விழாவில் ஏலம் விட்டார். அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். (அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் எழுநூறு ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் நடிகர்திலகம்.

நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.

No comments:

Post a Comment