Wednesday, April 27, 2011

எத்தனை கோணம் எத்தனை பார்வை

ஜெயகாந்தனின் 'எத்தனை கோணம் எத்தனை பார்வை' வண்ணத்திரைப்படம், அழகான ஒரு படைப்பு. மிக மிக யதார்த்தமான ஒரு படம். எந்த ஒரு கட்டத்திலும் செயற்கைக்கோணம் தட்டாது. நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்ததாலும், ஒரே ஒருமுறை மட்டுமே பார்த்திருந்ததாலும் கதையமைப்பு கோர்வையாக நினைவில் இல்லை. ஆனால் மிக நல்ல படம் என்பது மட்டும் மனதில் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது.

சாருஹாசன், வடிவுக்கரசி, ஸ்ரீபிரியா, சுரேஷ், நளினி, தியாகராஜன், வி.கோபால கிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், ஒருவிரல் கிருஷ்ணாராவ் என நிறைய பழையமுகங்களே நடித்திருந்தபோதிலும், உருவாக்கத்தில் புதுமையிருந்தது. தி.க.தலைவர் வீரமணி போல கருப்புச்சட்டையில் வரும் பத்திரிகை ஆசிரியர் வி.கோபாலகிருஷ்ணன் மட்டும் படம் முழுக்க செந்தமிழில் பேசுவது மிக நன்றாக இருக்கும். மனைவியை விட்டுப்பிரிந்து, இசைக்காக தன்னை அர்ப்பணித்து தன் தோழர்களுடன் தனியாக வாழும் சாருஹாசன்தான் படத்தின் முதுகெலும்பு. மது அருந்துவதை ஒரு தவறாக எண்ணாமல் அன்றாட சடங்காக கருதும் கூட்டம் அது.   

தியாகராஜனுக்கும், ஸ்ரீபிரியாவுக்கும் நடக்கும் சுயமரியாதை திருமணம் எல்லாம் ரொம்ப இயற்கையாக, தெருமுனையில் பந்தல்போட்டு நடத்தப் படுவது போன்ற பல காட்சிகள் மனதுக்கு இதமாக அமைந்தவை. பாடல்களும் ஜெயகாந்தன் எழுதியதாக நினைவு. 'எத்தனை கோணம் எத்தனை பார்வை' என்ற பாடல் படமாக்கப்பட்ட விதமும் அருமை. ஆனால் அப்பாடலின் நடுவே, துறைமுகத்தில் பெரிய பெரிய இரும்பு பிளேட்கள் இறக்கப்படுவதை ஏன் காண்பித்தனர் என்பது தெரியவில்லை. இதுபோக தேங்காயும், கிருஷ்ணாராவும் பாடும் 'என்ன வித்தியாசம' என்ற பாடலும், சாருஹாசன் பாடும் 'அலைபாயுதே கண்ணா' பாடலும் உண்டு.

அதிர்ஷ்டவசமாக இப்படம் பார்க்கநேர்ந்தது ஒரு கதை.  

எங்கள் குடும்ப நண்பரொருவர் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தபோது அவரைப்பார்க்க நானும் என் கணவர் பிரகாஷும் சென்ற இடத்தில், 'ஏதாவது திரைப்பட வீடியோ கேஸட் இருந்தால் கொடுங்கள் (அப்போது சி.டி.வரவில்லை) பார்த்துவிட்டு தருகிறோம்' என்று கேட்டபோது, மூன்று பட கேஸட்டுகளைக் கொடுத்தார். அவற்றில் இந்த 'எத்தனை கோணம் எத்தனை பார்வை' படமும் ஒன்று. கேள்விப்படாத படமாக இருக்கிறதே என்று நினைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்று படத்தைப்பார்த்தபோது படம் அருமையாக இருந்தது.

ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து, டிசம்பர் 31 தினத்தந்தி செய்தித்தாளில், அந்த ஆண்டு வெளியான படங்களைப்பற்றிய விவரமான கட்டுரை வெளியாகியிருந்தது. (வருடா வருடம் தினத்தந்தியில் வருடக்கடைசியில் இப்படி ஒரு கட்டுரை போடுவார்கள்). அதில் 'சென்ஸார் ஆகியும் இன்னும் வெளிவராத திரைப்படங்கள்' என்ற தலைப்பில் மூன்று படங்களின் பெயர்கள் இருந்தன. அவற்றில் ஒன்றாக 'எத்தனை கோணம் எத்தனை பார்வை' பெயரும் இருந்தது. மை காட். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாம் பார்த்துவிட்ட படம் இன்னும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகவே இல்லையா?. என்ன காரணம்?. இவ்வளவு நல்ல படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயாராக இல்லையா?. தயாரிப்பாளரே வெளியிடத்தயக்கமா?. இப்படியிருந்தால் நல்ல் படங்கள் எப்படி நம் பார்வைக்கு வரும்?. இன்றுவரை அப்படம் வெளியானதா இல்லையா என்பது தெரியவில்லை. வெளியாகியிருந்தால் எப்படி ஓடியது?. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

3 comments:

  1. padam parkka avalaga ullen. engeyavathu kidapathu pol thonrinal avasiyam thakaval tharavum. allathu pathividavum. thodarnthu thangal ezuthukalai padikka thondrukirathu. vazthukal

    ReplyDelete
  2. PRINCENRSAMA,
    தளத்துக்கு வருகை தந்ததோடு, பின்னூட்டமும் இட்டதற்கு நன்றி.
    இப்படத்தை மீண்டும் பார்க்கவேன்டும் என்று எனக்கும் ஆவலுண்டு. எங்காவது தென்பட்டால் நிச்சயம் இங்கே தெரிவிக்கிறேன்.
    சாரூ...

    ReplyDelete
  3. அந்தப்பாடல் விதைத்தவிதையைத் தேடி வந்தேன்..உங்கள் பதிவு கிடைத்தது.. அந்தப்பாடல் பார்க்ககிடைக்கவில்லை எங்கும்..

    ReplyDelete