Wednesday, May 11, 2011

அந்த நாள்

அந்த நாளில், அதாவது அந்த நாட்களில் (1950) படம் துவங்கும்போது கர்நாடக இசையுடன் அல்லது கர்நாடக இசைப்பாடலுடன் படத்தின் டைட்டில்கள் ஓடும். முடிந்ததும் ஒரு அரசவையில் அரசவை நர்த்தகியின் நடனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து பாத்திரங்கள் பேசத்துவங்க படம் நகர ஆரம்பிக்கும். இதுதான் அன்றைய நடைமுறை.

ஆனால் "அந்த நாள்" படத்தின் துவக்கத்தைப்பாருங்கள். படம் துவங்கும்போது ஜாவர் சீதாராமனின் குரலில்

"இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கிக்கொண்டிருந்தன. எந்த நேரம் என்ன நடைபெறுமோ வென்று எல்லோர் மனதிலும் ஒரு அச்சம் குடிகொண்டிருந்தது. அப்போது ஒருநாள் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில்..."

இதைப்பேசி முடிக்கும் முன்பாகவே, திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சப்தம், அதைதொடர்ந்து சிவாஜி நெஞ்சைப் பிடித்துக்கொண்டே கேமராவிலிருந்து பின்னோக்கிச்சென்று கீழே விழுவார். கால்களை உதைத்தவாறே உயிரை விடுவார். (ஆம். முதல் காட்சியிலேயே கதாநாயகன் அவுட். அந்த நாளில் நினைத்துப்பார்க்க முடியாத புதுமை). சிவாஜி இறந்ததும், மாடியிலிருந்து கதவொன்று திறக்கும். ஒரு வழுக்கைத்தலை பெரியவர் தட தட வென மாடிப்படிகளில் ஓடி வந்து கேமரா அருகில் வந்ததும் கீழுதட்டை கைகளல் பிடித்தவாரே அங்குமிங்கும் பார்ப்பார். பின்னர் ஓடத்துவங்குவார். டைட்டில்கள் ஓடத்துவங்கும். (ஆம் 'அந்த நாள்'.. அந்த நாளேதான்).

கொலை எப்படி நடந்தது என்று விசாரிக்க வரும் சி.ஐ.டி.ஜாவர் சீதாராமனிடம், கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும், கொலை எப்படி நடந்திருக்கக் கூடும் என்று அவரவருக்கு தெரிந்த விஷயங்களைக்கொண்டு விவரிக்க, ஒவ்வொன்றும் ஒரு ஃப்ளாஷ்பேக்காக விரியும். ஒவ்வொருவர் சொல்லி முடிக்கும்போதும் சிவாஜி சுடப்பட்டு விழுவார். (படம் முழுவதையும் ஃப்ளாஷ் பேக்கிலேயே சொல்லும் பாணியில் பின்னாளில் வந்த பல புதுமைப்படங்களுக்கு வித்திட்டு வழிகாட்டிய படம் 'அந்த நாள்').

பெரியவர் பி.டி.சம்பந்தம், சிவாஜியின் தம்பி டி.கே.பாலச்சந்திரன், பாலச்சந்திரனின் மனைவி, நாடோடிப்பாடலை சுவாரஸ்யமாகப்பாடும் சோடாக்கடைக்காரன், குதிரை வண்டிக்காரன்... ஒவ்வொருவரும் எவ்வளவு ஜீவனுள்ள பாத்திரங்கள்..!!. நாட்டுப்பற்று மிகுந்த பண்டரிபாய், கல்லூரி விழாவில் புரட்சிக்கருத்துக்களை சொல்லும் சிவாஜியைக் கண்டு காதல் வசப்படுவது ஒரு அருமையான கவிதை நயம். தன்னுடைய திறமையை தன்னுடைய சொந்த நாட்டு அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்று விரக்தியின் எல்லைக்குப் போய் ஜப்பான் நாட்டு அரசுடன் உறவு வைத்து தன் சொந்த நாட்டுக்கே விரோதியாக மாறும் துடிப்புள்ள எஞ்சினீயர் கதாபாத்திரத்தில் சிவாஜி தூள் கிளப்பியிருப்பார்.

கேமரா வழியாக கதை சொல்லும் பாணி முதலில் இந்தப்படத்தில்தான் பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கும் என்பது பலரின் எண்ணம். நான் முன்பு சொன்னது போல அறையைப்பூட்டிக்கொண்டு சிவாஜி போகும்போது அவரோடேயே கேமராவும் போகும். கையிலிருக்கும் சாவிக்கொத்தை மேலும் கீழும் தூக்கிப்போட்டுப் பிடித்தபடி அவர் செல்லும்போது, கேமராவும் சாவியோடு மேலும் கீழும் போகும்.

அதே போல இறுதிக்காட்சியில், தான் சுடப்படுவதற்கு முன்பாக, சுழல் நாற்காலியில் அமர்ந்த படி மனைவி பணடரிபாயுடன் பேசும்போது கேமரா இவரிடத்தில் அமர்ந்து கொண்டு இவர் பார்வை போகும் திசையெல்லாம் போகும். அறை முழுக்க சுற்றி சுற்றி அலையும்.

( 'இருகோடுகள்'  படத்தில் கலெக்டர் சௌகார், முதலமைச்சர் அண்ணாவை பேட்டியெடுக்கும் காட்சியில், அண்ணாவின் இருக்கையில் கேமரா அமர்ந்து, அவர் பார்வை போகும் திசைகளில் போவதைக்கண்டுவியந்தேன். அதன் பின்னரே 'அந்தநாள்'  பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த உத்தி ஏற்கெனவே (15 ஆண்டுகளுக்கு முன்பே) அந்த நாளில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டு வியப்பின் எல்லையை அடைந்தேன். (பாலச்சந்தர் என்று பெயர் வைத்தாலே புதுமைகள் செய்யதோன்றுமோ)

எஸ். பாலச்சந்தர், தானே ஒரு நடிகராக இருந்தும் கூட, சில காட்சிகளில் தானே நடித்துப் போட்டுப் பார்த்தபின், சரிவரவில்லையென்றதும் தூக்கிப்போட்டுவிட்டு ஏ.வி.எம். செட்டியாரின் ஆலோசனையின்படி நடிகர்திலகத்தை கதாநாயகனாகப் போட்டு படத்தை எடுத்தார்.

படத்தில் பாடல்களே இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில் 'பிண்ணனி இசை : ஏ.வி.எம்.இசைக்குழு' என்று மட்டும் காண்பிக்கப்படும்.

'ஆகா..ஓகோ என்று கொண்டாடும் அளவுக்கு இப்படம் வெற்றியடையவில்லை யென்றாலும், தமிழ்த்திரையுலக வரலாற்றில் எந்நாளும் பேசப்படும் படமாக சிறந்த தொழில் நுட்பம், மற்றும் புதிய சிந்தனை அமைந்த படம்தான் "அந்த நாள்".

13 comments:

  1. அன்புள்ள சாரூ,

    நான் மிக ஆவலுடன் எதிர்பார்த்த பட விமரிசனம்.மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.நன்றிகள் கோடி

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பரே நண்பரே,நண்பரே!!
    இந்தநாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே
    அது ஏன்,ஏன்,ஏன்??.... நண்பரே!!

    அகிரா குரசவா இயக்கிய ரோஷோமன் படத்தின் பாதிப்புடன் எடுக்கப்பட்ட உன்னத சித்திரம் அந்த நாள்.இதற்கு திரு.ஏ.வி.எம் அவர்களுக்கும் திரு வீணை பாலசந்தர் அவர்களுக்கும் ,திரு ஜாவர் சீதாராமன் அவர்களுக்கும் தமிழ் ரசிகர்கள் என்றும் கடமை பட்டவர்கள்.

    அடுத்து நம் தலைவர்..

    இருங்க கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டுக்கிறேன்!!

    1960 களில் சொல்லப்பட்ட "கொன்னுட்டான்யா!"

    1970 களில் சொல்லப்பட்ட "அசத்திட்டான்யா!"

    1980 களில் சொல்லப்பட்ட "தூள் கிளப்பிட்டான்யா!"

    1990 களில் சொல்லப்பட்ட "டாப் டக்கர் !"

    2000 களில் சொல்லப்பட்ட "பின்னிப்பெடல் எடுத்துட்டான்யா!"

    இவை அனைத்தையும் 1954 லிலேயே சொல்ல வைத்தவர் நடிகர் திலகம்

    இந்த படத்தில் அவரின் fluency is amazing!

    split personality ஐ ஒரு இழை காண்பிப்பார் பாருங்கள்!!(climax scene with Pandaribai)

    ஆஹா
    ஆஹா

    இந்தப்படத்தில் அவர் தனது குரலையும் கண்களையும் அப்படி பயன்படுத்தியிருப்பார்!

    Romance வேணுமா, வாங்கிக்கோ!

    துவேஷம்? இது போறுமா,இன்னும் வேணுமா?

    அலட்சியம்..இதோ அதற்கு இலக்கணம்!

    கபடம்..இதற்கு மேல் காண்பித்தால் பயந்து விடுவீர்கள்

    என்று சொல்லி சொல்லி பட்டை கிளப்புவார்!

    சத்தியமாக சொல்கிறேன் இது ஆங்கிலப் படமாக இருந்திருந்தால் குறைந்தது நன்கு ஆஸ்கர் விருது பெற்றிருக்கும்!

    பின்னால் விஸ்வரூபம் எடுக்கப்போகும் தலைவர்
    தன் திறனை வெளிபடுத்தத் தொடங்கியது இந்தப்படத்தில்தான்

    பார்க்காதவர்கள் உ ட னே பார்த்துவிடுங்கள்!!

    உத்தம புத்திரனுக்காக காத்திருக்கும்

    அன்பன்,

    Ganpat

    ReplyDelete
  2. ஜாவர் சீதாராமனின் அந்த நாள் படமே அந்த காலத்தில் ரொம்ப வித்தியாசமான படம்தான். சொல்லப்போனால், விருமாண்டி, பொல்லாதவன் படம் மாதிரி ஒவ்வொருத்தவங்க கோணத்திலேயும் அந்த கொலை எப்படி நடந்திருக்கும்னு சொல்ற மாதிரி காட்டி இருப்பாங்க. அதில் டிடெக்டிவா ஜாவர் சீதாராமன் தான் நடிச்சிருப்பார்.

    அந்த நாள் படத்தில் சிவாஜி செய்திருக்கும் நெகடிவ் ரோல் என்னை ஆச்சரியப்படுத்தியது. இமேஜ் எல்லாம் பார்க்காமல் அனாயாசமாக நடித்திருந்தார்.

    இந்தப் படத்தில் சி.ஐ.டி. ஜாவர் குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடியாமல் திணறும்போது, ‘தூக்குத் தூக்கி’ நாடக நோட்டிஸில் வரும் ‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்ற வரியைப் பார்த்து, குற்றவாளி யாராயிருக்கும் என்று கெஸ் பண்ணுவார்.

    ReplyDelete
  3. 'அந்த நாள்' படத்துக்கு யோசிப்பவரின் விமர்சனம்...

    http://bookimpact.blogspot.com/2007/08/blog-post.html

    ReplyDelete
  4. 'அந்த நாள்' படத்துக்கு பிரகாஷின் விமர்சனம்...

    http://icarusprakash.wordpress.com/2005/05/09/

    ReplyDelete
  5. அந்த நாளில் ஒரு கதாநாயகன் நெகட்டிவ் ரோலில் நடிக்கத் துணிந்ததும் நடிகர் திலகம் மட்டுமே செய்த சாதனை. எம் ஜி ஆரும் சிவாஜியும் இணைந்த கூண்டுக் கிளி படத்தில் கூட துணிந்து வில்லன் வேடம். ஸ்டைலுக்கு யார் யாரையோ சொல்வார்கள். நடை மன்னன்..நடிப்புச் சக்கரவர்த்தி நடிகர் திலகத்தின் ஸ்டைலை உணராதவர்கள். .

    ReplyDelete
  6. பதிவைப்படித்து, தங்கள் மேலான பதில்களைப்பதித்த கன்பத், ஸ்ரீராம் ஆகியோருக்கு நன்றி.

    ReplyDelete
  7. மிக அருமையான படம் போன வாரம் மீண்டும் பார்த்தேன்,படம் ஓடியிருந்தால் தான் நல்ல படம் அல்ல 60 வருடம் கழிந்தபின்னும் நம் மனதில் தங்குகின்றதே அது தான்,அந்த பாதிப்பு தான் எஸ் .பாலசந்தருக்கு கிடைத்த வெற்றி,அந்நாளிலேயே மிகவும் டீடேய்ல்டான ஒளிப்பதிவு,இத்தனை தொழில்நுட்ப யுத்திகளுடன் அந்நாளில் வந்த இன்னோரு படம் சந்திரலேகாவாக தான் இருக்கும்.
    இப்படத்தின் நான் லீனியர் யுத்தி இன்றளவிலும் தமிழ் திரைப்பட உலகில் யாருமே கையாளத்தயங்கும் யுத்தியாகும்.மிகப்புகழ் பெற்ற உலகசினிமாக்கள் கொண்டுள்ள யுத்தி.நான் லீனியர் கதை சொல்லல்,பொம்மை என்றொரு படமும் இவர் இயக்கினார் என்று நினைக்கிறேன்,அதுவும் புதுமையான படைப்பே,எஸ் பாலசந்தர் அதன் பின்னர் என்ன படங்கள் படைத்தார் என்று தெரிந்தால் பகிருங்கள் ஆர்வமாக இருக்கிறேன்.

    ReplyDelete
  8. 1.
    Nadu Iravil 1966
    2.
    Bommai 1963
    3.
    Avana Evan 1962
    4.
    Avan Amaran 1958
    5.
    Yedhu Nijam 1956
    6.
    Edi Nijam 1956
    7.
    Antha Naal 1954
    8.
    Kaithi 1951
    9.
    Ithu Nijama 1948
    எஸ் பாலசந்தரின் படைப்புகள் இவை ஏனைய படங்கள் பற்றி தெரிந்திருந்தால் பகிரவும்,மிக்க நன்றி

    ReplyDelete
  9. இவர் பற்றி படித்ததில் இன்னொரு செய்தி ,
    எஸ். பாலசந்தர் பல்துறை விற்பன்னர். யாருக்கும் பயப்படமாட்டார். திரைப்படத்துறையிலும் அந்தநாள் (பாடலில்லாத படம்) பொம்மை, நடு இரவில் போன்ற படங்களை எடுத்தவர்.

    வீணைக் கச்சேரி ஆரம்பித்தது. தனியாக வீணை மட்டும் சுருதிக்கு தம்பூரா. இரண்டு மணிநேரம். ஆரம்பத்திலிருந்து இரண்டு மணி நேரம் முழுவதும் ராகங்களாகவே வாசித்தார். சுமார் 20, 25 ராகம். ரசிகர்கள் அசையவேயில்லை. ஒவ்வொரு ராகமும் முடிந்து அடுத்த ராகம் ஆரம்பிக்குமுன் பலத்த கரகோஷம். கடைசி ராகமாக மத்திய மாவதி ராகத்தை வாசித்து முடித்தபின் மைக்கில் பாலசந்தர் பேசினார்.

    “யாரோ ஒரு மிருதங்க வித்வான் மிருதங்கம் இன்றி கர்நாடக இசைக்கச்சேரி நடைபெறுது எனக் கூறினாராம் “அதைப் பொய் ஆக்குவதற்காகவே” இன்று மிருதங்கம் இன்றி வாசித்தேன்” எனப் பேசினார். விஷயம் புரிந்த பலருக்கு வித்வான்களின் மோதல் ருசிகரமானதாக இருந்தது.

    ReplyDelete
  10. கீதப்ரியன், கலக்கிட்டீங்க..

    அந்தநாள் பற்றிய மேலதிக விவரங்கள்...
    எஸ். பாலச்சந்தர் இயக்கிய படங்களின் பட்டியல்...
    அவரது வீணைக்கச்சேரியில் நடந்த சுவையான நிகழ்வு...

    என பல்வேறு விவரங்களைத் தந்து அசத்தி விட்டீர்கள்.

    மிக்க நன்றி
    சாரூ.......

    ReplyDelete
  11. அன்புள்ள சீனிவாஸ்,

    பின்னூட்டத்துக்கும், கூடுதல் இணைப்புகளை வழங்கியமைக்கும் நன்றிகள்.
    சாரூ....

    ReplyDelete
  12. I never knew that "Andha Naal" was produced by Veena S. Balachander. I thought that he produced and directed only "Bommai". I remember the movie "Penn" in which SB acted and sang a song (Chandra Babu was the playback singer) - "Kalyanam....Ha Ha Kalyanam..." I think Penn was produced by AVM - Anjali Devi heroine? Fund of nostalgic information from your posts. Thanks.

    ReplyDelete
  13. அந்த நாள் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்...

    அந்த நாள் அகிரா குரசோவாவின் ரோஷமான் படத்தின் பாதிப்பில் உருவாக்கபட்டிருக்கிறது,

    ரோஷமோன் போல ஒரு நிகழ்வின் மாறுபட்ட சாத்தியங்களைச் சொல்ல முயன்ற இயக்குனர் அதற்குப் பின்புலமாக யுத்த காலத்தை எடுத்துக் கொண்டது பாராட்டிற்கு உரியது,

    இந்தியாவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காத ரேடியோ இன்ஜினியர் ராஜன் ( சிவாஜி) ஆத்திரத்தில், அந்நிய நாட்டுக்கு உதவி செய்து, தேசத்துரோகி ஆகின்றான். அவனை அவனது மனைவியே ( பண்டரிபாய்) சுட்டுக் கொல்கிறாள் என்ற கதையை ரோஷமானின் கதைக்கு இணையாகத் தேர்வு செய்து படமாக்கியிருக்கிறார்கள், கதை முன்பின்னாக சென்று அவிழும் முறையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது

    குறிப்பாக இந்த படத்தில் வரும் சிவாஜியின் எதிர்மறை கதாபாத்திரமான ரேடியோ என்ஜினியர் யாரும் நடிக்காத கதாபாத்திரம், அதன் இருண்ட மனநிலையும் கோபமும் மனக்கொதிப்பும் நன்றாக காட்சிப்படுத்தபட்டிருக்கிறது, அது போன்ற கதாபாத்திரம் எதையும் பின்னாளில் சிவாஜி நடிக்கவேயில்லை,

    படத்தில் பாடல்களே இல்லை, ரோஷமானின் படத்தொகுப்பை போலவே இதிலும் படத்தொகுப்பு மேற்கொள்ளப்பட்டருக்கிறது, இப்படத்தை இயக்கும் போது எஸ் பாலச்சந்தருக்கு வயது 27, சம்பிரதாயமாக நம்பிக் கொண்டிருந்த திரைப்படத்தின் விதிகளை தூற எறிந்துவிட்டு மாறுபட்ட அழகியலோடு படத்தை உருவாக்கியிருக்கிறார் பாலச்சந்தர்.

    ReplyDelete