Tuesday, December 21, 2010

ராஜபார்ட் ரங்கதுரை

நேற்றிரவு நானும் "ராஜபார்ட் ரங்கதுரை" திரைக்காவியத்தை, கண்கொட்டாமல் கண்டு ரசித்தேன். (எத்தனையாவது முறை என்று தெரியவில்லை... நாற்பதாவது அல்லது நாற்பத்தைந்தாவதாக இருக்கலாம்). இன்னொரு விசேஷம், இப்படத்தை என்னோடு அம்ர்ந்துபார்க்க என் தந்தையை அழைத்திருந்தேன். அவரும் மயிலையில் இருந்து அண்ணா நகர் வந்திருதார். காரணம் இத்திரைப்படம் வெளியானபோது நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளுக்கு சாட்சியாக இருந்தவர் அவர். அதை அவர் விளக்க நானும் என் கணவரும் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தோம். நடிகர்திலகத்தின் மற்ற படங்களைப்போல் அல்ல இது. பெருந்தலைவரின் தீவிர தொண்டனாக இருந்த நேரம், பல்வேறு அரசியல் சுவாரஸ்யங்களைப்போர்த்தி வந்த படம் 'ராஜபார்ட் ரங்கதுரை'.

இங்கே முரளி அண்ணா குறிப்பிட்டதைபோல, 'இங்குலாப் ஜிந்தாபாத்' பாடல் காட்சியிலும், கொடிகாத்த குமரன் காட்சியில் இடம் பெற்ற வசனங்களிலும் அன்றைய அரசியல் சூழ்நிலைக்குத் தக்கவாறு பாடல் வரிகளும், வசனங்களும் கையாளப்பட்டிருந்தன. ஸ்தாபன காங்கிரஸின் சார்புப் பத்திரிகைகளாக விளங்கிய 'நவசக்தி', 'அலை ஓசை' பத்திரிக்கைகளும் பாடலில் நுழைக்கப் பட்டிருந்தன. இதற்கு முன் வந்திருந்த 'எங்கள்தங்கராஜா' வும் 'கௌரவமும்' நடிகர்திலகத்தின் நடிப்பை பொதுப்படையாக விரும்புவோர்க்கு விருந்தாக அமைந்திருந்தன என்றால், 'ராஜபார்ட் ரங்கதுரை' சிவாஜி மன்றத்தோடும், காங்கிரஸ் பேரியக்கத்தோடும் ஒன்றியிருந்த ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாட்டமாக  அமைந்தது.

வழக்கமாக திரைத்துறையினருக்கு மட்டுமே ஸ்பெஷல் காட்சிகள் காண்பிக்கப்படும் என்ற நிலையில் இருந்து மாறுபட்டு, ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களுக்காக ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பெருந்தலைவர் காமராஜ், குமரி அனந்தன், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, மணிவர்மா, எம்.பி.சுப்பிரமணியம், இளையபெருமாள், சிவாஜி மன்ற தலைவர் சின்ன அண்ணாமலை, எழுத்தாளர் சாவி, ஜெயகாந்தன், தமிழ்வாணன், சோ, கண்ணதாசன், ஜி.உமாபதி போன்றவர்கள் கலந்துகொண்டு படத்தைப்பார்த்து பாராட்டினராம். அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தியவாறு நடிகர்திலகம் இறக்கும் காட்சியைப்பார்த்து பெருந்தலைவர் கண்கலங்கினாராம்.

இந்த விவரங்கள் படம் வெளியாகும் முன்பே ரசிகர்களுக்கு எட்டப்போக, அவர்கள் உற்சாகத்துடன் படத்தை வரவேற்க சென்னை 'பைலட்' தியேட்டரில் கூடினராம். 'ஹேம்லெட்' நாடகத்தில் நடிகர்திலகம் கையில் வாள் பிடித்து நிற்கும் காட்சி பெரிய கட்-அவுட்டாக வைக்கப்பட்டிருந்ததாம்.  

இன்குலாப் ஜிந்தாபாத் பாடல் முடிவில், நடிகர்திலகம் தூக்கில் தொங்கும் காட்சியைக்கண்டு அவரது மனைவி உஷா நந்தினி அலற... அதைத்தொடர்ந்து நாடகம் பார்க்கும் ரசிகர்களும் 'இன்குலாப்' கோஷம் போட அதோடு நாடகத்தில் திரை விழும். உடனே பைலட் தியேட்டரில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று 'இன்குலாப் ஜிந்தாபாத்.. இந்துஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிட, திரையரங்கமே அதிர்ந்ததாம். இப்படி பல்வேறு உணர்ச்சிமயமான நிகழ்ச்சிகளை அப்பா சொல்லிக்கொண்டே இருந்தார்.


கடைசியில் இயற்கை எய்தும் காட்சியில் நடிகர்திலகம் பேசும் வசனம் "யாரும் அழக்கூடாது. இந்த மேடையில் இந்த கொடியோடு சாகும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்". (மேடை என்று குறிப்பிட்டது அவரது உயிர்மூச்சான நடிப்புக்கலையும், கொடி என்று குறிப்பிட்டது அவர் கண்ணாக மதித்த காங்கிரஸ் பேரியக்கமும் தான்).

படம் முழுக்க பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத ஒரு சோகம் இழையோடிக்கொண்டிருக்கும். அதனால் இடையிடையே நமது பரிதாபத்தை கிளறிவிடும் காட்சிகளும் வந்துபோகும். அதில் ஒன்று, தன் நாடகத்துக்கு எதிராக தன் மாமனாரே திரைப்படக் கொட்டகைபோட்டு தன் தொழிலை நலிவடைய செய்ய, நாடகம் பார்க்க வந்திருக்கும் மிக சொற்பமானவர்களுக்காக, தன்னுடைய 'அரிச்சந்திரா' வசனத்தை பேச ஆரம்பிக்க, கூட்டத்தின்ர் சினிமா பாடல் பாடும்படி வற்புறுத்த, "ஐயா எனக்கு அந்தப்பாட்டெல்லாம் தெரியாது" என்று அவர் பரிதாபமாக கூறிநிற்கும் இடமும், அதைத்தொடர்ந்து, ரசிகர்கள் நாற்காலிகளை உடைத்துப்போட்டு விட்டுப்போக, அவர் மௌனமாக அவற்றின் நடுவே நடந்து வரும் இடமும் கண்களில் நீரை வரவழைக்கும் பல கட்டங்களில் ஒன்று.

இன்னொரு விசேஷம், 'மிகை நடிப்பு' என்று யாரும் சொல்ல இடம் கொடுக்காத படம் இது.

6 comments:

  1. சகோதரி சாரதா,

    தங்களது வலைப்பூவிற்கு எனது மனமார்ந்த பல கோடி நல்வாழ்த்துக்கள் !

    இப்பூ, தங்களின் கைவண்ணத்தில் தகவல் பொக்கிஷமாகத் திகழப் போவது திண்ணம் !

    அன்புடன்,
    பம்மலார்.

    ReplyDelete
  2. சகோதரி சாரதா அவர்களுக்கு,

    வணக்கம்.

    தங்கள் blog நல்லபடி முன்னேற வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    நாகராஜன்

    ReplyDelete
  3. சிறு வயதில் இந்தப் படம் வெளிவந்த வேளையிலேயே பார்த்திருக்கிறேன். சேலத்தில் ஓரியண்டல் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் வெளிவந்த போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும் என நினைக்கிறேன். அந்தக்காலத்தில், ரேடியோவில் பாட்டுக் கேட்பதுதான் ஓரே பொழுது போக்கு! அடிக்கடி ரேடியோவில் இந்தப் படத்தின் 'அம்மம்மா தம்பி உன்னை நம்பி' என்ற பாடலைப் போடுவார்கள். அப்பொதெல்லாம் ஒரே அழுகாச்சிதான்!.

    ReplyDelete
  4. பதிவைப்படித்து வாழ்த்துக்கூறிய பம்மலார், நாகராஜன், நல்லதந்தி ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
    சாரூ...

    ReplyDelete
  5. ராத்திரியெல்லாம் ராஜா வேஷம் போட்டாலும் என்று ஆரம்பிக்கும் வசனம் இதில் ஹிட். பணக்காரனாக தம்பி மாமனாரிடம் நடிக்கும் இடங்களும் மறக்க முடியாதவை.

    ReplyDelete
  6. உங்களின் பல பின்னூட்டங்களைப் படித்திருக்கிறேன். வலைப்பூவை இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அனைத்து இடுகைகளையும் வாசித்துவிட்டு பிறகு வருகிறேன். படித்ததில் பிடித்ததை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வாழ்த்துகள்.
    பி.கு. பின்னூட்டத்தில் வார்த்தை உறுதிசெய்தலை (word verification) நீக்கினால் நன்றாக இருக்கும். :-)

    ReplyDelete