Saturday, December 25, 2010

மாநிலங்களவையில் நடிகர்திலகம்

1982 ல் ஒரு ராஜ்யசபா எம்.பி.சீட்டுக்கு கலைத்துறையைச்செர்ந்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்தபோது, அன்றைய பிரதமர் இந்திரா அம்மையார், நடிகர் திலகத்தின் பெயரை தேர்வுக்கமிட்டியின் முன் வைத்தார். (ஒரு சம்பிரதாயத்துக்குத்தான். இந்திரா யாரைச்சொல்கிறாரோ அவரைத்தான் நியமிப்பார்கள்). அவர் நடிகர் திலகத்தை முன்மொழியக் காரணம், நடிகர்திலகம் காங்கிரஸ் கட்சியின் நீண்ட காலத்தொண்டர் என்பதும், தேர்தல் நேரங்களில் தன்னுடைய படப்பிடிப்புகளை ஒத்திவைத்து விட்டு, முழு நேர பிரச்சாரங்களில் ஈடுபட்டவர் என்பதும், தன்னுடைய படங்களில் முடிந்தவரை காங்கிரஸின் கொளகைகளை மறைமுகமாக பிரச்சாரம் செய்து வருபவர் என்பதும்... இப்படி பல காரணங்கள். தேர்தல் நேரத்தில் இந்திராவும் சிவாஜியும் பல மேடைகளில் ஒன்றாக பேசி யிருக்கிறார்கள். பாண்டிச்சேரி தேர்தலில் ஒரே மேடையில் இந்திராவுக்கும் காமராஜருக்கும் நடுவில் நடிகர்திலகம் நிற்கும் புகைப்படம் ரொம்ப பாப்புலர். தேர்தல் நேரங்களில் சுவரொட்டிகளில் இப்படம் இடம் பெறும்.

1977 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அ,தி,மு,க கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது, பிரச்சாரத்துக்காக இந்திரா அம்மையார் தமிழ்நாடு வந்திருந்தார். அப்போது மதுரை மேடையில் எம்.ஜி.ஆரும், திருச்சி மேடையில் சிவாஜியும் இந்திராவுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.

1980 தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது, சென்னை மெரீனா கடற்கரை கூட்டத்தில் இந்திரா, கருணாநிதி ஆகியோருடன் நடிகர் திலகமும் மேடையில் பேசினார்.

எனவே யாருக்கு ராஜ்யசபா பதவி என்ற நிலை வந்தபோது, இந்திராவின் நினைவில் இந்த விவரங்கள் நிழலாட, நடிகர் திலகத்தை தேர்வு செய்தார்.

இதனிடையே ராஜீவ்காந்தி தனது நண்பரான இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு அந்த எம்.பி.பதவியைக் கொடுக்க வேண்டுமென்று முயற்சித்தார். ராஜீவ் காந்தி அமிதாப்பை சிபாரிசு செய்யக்காரணம், அவர் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்பதற்காகவே தவிர வேறொன்றுமில்லை. அதுவரை காங்கிரஸுக்கு அமிதாப்பின் பங்களிப்பு பூஜ்யமே. (இப்போதும் கூட அதைத்தாண்டி வந்திருக்கிறதா என்பது தெரியாது).

தவிர அப்போது ராஜீவுக்கு சிவாஜியைப்பற்றியும், கட்சியில் அவரது பங்களிப்பு பற்றியும் எதுவும் தெரியாது. (சஞ்சய் காந்தி இறக்கும் வரை, காங்கிரஸின் தலைவர் யார் என்பது கூட ராஜீவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது அவர் விமானம் ஓட்டிக்கொண்டு இருந்தார்).

எனவே இந்திராவின் நியாயமான முடிவின்படி நடிகர் திலகம், ராஜ்ய சபா எம்.பி.ஆனார். (சிவாஜி ராஜ்யசபாவில் பேசிய பல விஷயங்களை பற்றி பத்திரிகையாளர் குஷ்வந்த்சிங் எழுதிய ஒரு கட்டுரை முன்பு பார்த்தேன். அது கிடைத்தால் பின்னர் இங்கே தருகிறேன்).

இந்திரா அம்மையார் மறைந்தபிறகு நடந்த 1984 தேர்தலில், சிவாஜி மன்றத்தினர் தேர்தலில் சீட் கொடுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டதற்கு காரணமே, நடிகர் திலகத்துக்கும் காங்கிரஸுக்கும் இருந்த நீண்டகால உறவை பற்றி ராஜீவுக்கு தெரியாததே.

தமிழ்நாட்டில் காங்கிரஸின் மிகப்பெரிய தொண்டர் படையாக விளங்கிய சிவாஜி மன்றத்தினர், 1984 தேர்தலில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டனர். சிவாஜிமன்றத்தினர் பற்றி தெரிந்திருந்த பெருந்தலைவரும், இந்திரா அம்மையாரும் இயற்கை எய்தியதால் அவர்களின் அருமை ராஜீவுக்கு தெரியவில்லை. வெகுண்டெழுந்த சிவாஜி மன்றத்தினர், தலைவர் தளபதி சண்முகம் தலைமையில் கூடி முடிவெடுத்து தமிழ்நாடு முழுக்க 99 போட்டி வேட்பாளர்களை அறிவித்தனர். சிலர் வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டனர். புரசை குமரன், அப்பன்ராஜ், செங்காளியப்பன், ராஜசேகரன், அடைக்கலராஜ், மாரிசாமி, பொன்.தங்கராஜ், சந்திரசேகரன், புவனேஸ்வரி ஆனந்த் போன்றோர் அதில் அடக்கம்.

 பதறிப்போன மூப்பனார், டெல்லியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி சொல்ல, சிவாஜி மன்றத்தினருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ராஜசேகரன், திருச்சி எம்.பி.தொகுதிக்கு அடைக்கலராஜ் உள்பட சிவாஜி மன்றத்தினர் பலர் காங்கிரஸ் கட்சியால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றனர். சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் சிவாஜிமன்ற வேட்பாளராகப் போட்டியிட்ட (இன்றைய காங்கிரஸ் பிரமுகர்) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெருவாரியான வாக்குகளில் வெற்றியடைந்தார்.