Friday, December 24, 2010

தொலைந்துபோன 'திரில்'

தொலைக்காட்சிகளில் மெகா சீரியல்கள் த்விர்த்து பிற் நிகழ்ச்சிகள் தொன்னூறு விழுக்காடு திரைப்படங்களையே சார்ந்திருப்பதால், திரைப்படங்களையும், திரைப்பட நட்சத்திரங்களையும் வைத்து என்ன நிகழ்ச்சிகள் பண்ணலாம் என்று யோசித்து, யோசித்து தொலைக்காட்சி சேனல்கள் போட்டிபோட்டு செய்ல்படத்துவங்கியதன் விளைவு, திரைப்படங்கள்மீதும், அதன் நட்சத்திரங்கள்மீதும் இருந்த அபரிமிதமான கவர்ச்சி, அபிமானம் அடியோடு காணாமல் போய்விட்டது.

சற்று யோசித்துப்பார்ப்போம். தொலைக்காட்சிகள் புற்றீசல்கள் போல பெருகும் முன்னர், ஏன் தொலைக்காட்சியே வராத காலத்தில் திரைப்பட நட்சத்திரங்களைக் காண வேண்டுமென்றால், திரைப்படக் கொட்டகைகளுக்கு போவதைத்தவிர வேறு வழியில்லையென்ற நிலையிருந்தது. நியூஸ் ரீல் ஓடும்போதே நம்மை பரவசம் தொற்றிக்கொள்ளும். இதோ படம் துவங்கப் போகிறது, நம் அபிமான நட்சத்திரம் வரப்போகிறார் என்ற உற்சாகம் உடம்புக்குள் ஊடுறுவும்.

ஆனால் இன்று..?. படம் வருவதற்கு முன்பே ட்ரைலர் என்ற பெயரில் அதில் இடம்பெறும் முக்கியக் காட்சிகள், வசனங்கள் எல்லாம் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகின்றன. போதாக்குறைக்கு எந்தக்காட்சிகளை எப்படி எடுத்தோம் என்று இயக்குனர்களும் கலைஞர்களும் விளக்கி விடுகின்றனர். படத்தில் நாயகன் இண்ட்ரொடக்ஷன் காட்சியெல்லாம் படம் பார்க்கும் முன்பே ரசிகர்களுக்கு தெரிந்துபோகிறது. ஒவ்வொரு முக்கிய சீனிலும் நாயகன் எப்படி வசனம் பேசுவார் என்பது ட்ரெய்லரிலேயே காட்டப்படுகிறது. திரையரங்கில் படம் பார்க்கச்செல்லும் ரசிகனுக்கு, அங்கு எந்த திரில்லும் கிடைப்பதில்லை. படத்தை இரண்டாம் முறை பார்ப்பது போன்ற உணர்வே ஆட்கொள்ளுகிறது. 

தவிர, படம் வெளியானதுதான் தாமதம், அதில் வரும் பாடல் காட்சிகளூம், நகைச்சுவைக்காட்சிகளும் தொலைக்காட்சிகளில் திகட்ட திகட்ட ஒளிபரப்பப்பட்டு. படத்தின் சுவாரஸ்யம் சுத்தமாகத் துடைத்தெறியப்படுகிறது.

இது ஒரு பக்கமென்றால், சில சேனல்களில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் என்ற நடைமுறையைக்கொண்டு வந்து, மாறி மாறி பழைய படங்கள் தொடர்ந்து திரையிடப்படுகின்றன. கூடவே பழைய பாடல்களுக்கென்றே சில நிகழ்ச்சித்தொகுப்புகள் உருவாக்கப்பட்டு, பழைய பாடல் விரும்பிகளின் ஆர்வத்தைப்பூர்த்தி செய்தவண்ணம் உள்ளதால், ரிமோட் கண்ட்ரோலில் எந்த பட்டனை அழுத்தினாலும் புதுசு பழசு என்று திரைப்படங்களும், திரைப்பட நிகழ்ச்சிகளும், திரைப்ப்பட நட்சத்திரங்களும் நம் வீட்டுக்கூடத்தில் உலா வந்துகொண்டேயிருக்கின்றனர். தவிர ரியாலிட்டி ஷோக்களில் நடுவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகவும் நட்சத்திரங்கள் வர ஆரம்பித்து விட்டதால், அவர்களை சுவாரஸ்யமாகப் பார்க்கும் நிலைமாறி, பத்தோடு பதினொன்றாக ஆகிப்போனார்கள். 

இதுபோக வீடியோ கேஸட்டில் ஆரம்பித்து வி.சி.டி. பின்னர் டி.வி.டி என்ற வடிவங்களில் முழு திரைப்படங்களும் கிடைக்கத்துவங்கியபின், ஒரே படத்தை கொஞ்சம் கொஞ்சமாக தவணைமுறையில் பார்த்துமுடிக்கும் நடைமுறையும் புழக்கத்தில் வந்தது. இவையெல்லாம் ஒட்டுமொத்தமாகச்சேர்ந்து திரைப்படங்களின் மீதும் அதன் நட்சத்திரங்களின் மீதும் இருந்த சுவாரஸ்யத்தைக் காணாமல் அடித்துவிட்டனர்.

இந்தக்களேபரங்கள் துவங்குவதற்கு முன்னிருந்த காலத்தை சற்று நினைத்துப்பார்ப்போம், படம் பார்க்கப்போவதற்கே பெரிய திட்டம் போட்டு, காசு தேற்றி, சிறு குழுவாகச்சேர்ந்து, தியேட்டருக்குச்சென்று, அடித்துப்பிடித்து டிக்கட் வாங்கி, படம் ஆரம்பிக்கும்போதே பரவசப்பட்டு, மூன்றுமணி நேரங்கள் தங்களையே மறந்து படத்துடன் ஒன்றிப்போய், படம் முடிந்ததும் நிறைந்த மனதுடன் வீடு திரும்பி, பின்னர் அந்தப்படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் பல நாட்கள் விவரித்துப்பேசி, பார்க்காதவர்களை ஏக்கம் கொள்ளச்செய்து... இப்படி அணு அணுவாக ஒரு திரைப்படத்தை அனுபவித்த அந்த சுவாரஸ்யம், அந்த உணர்வு, அந்த 'திரில்' எல்லாம் காணாமல் போச்சு.

2 comments:

  1. Very true. Thanks for the Good post

    ReplyDelete
  2. மிகவும் உண்மை அம்மா,உங்கள் வேர்ட் வெரிஃபிகேஷனை நீங்கள் நீக்கிவிட்டால் நிறைய பேர் கருத்திடுவார்கள்.தவிர ஒவ்வொருமுறையும் capcha வராது,

    ReplyDelete