Wednesday, December 22, 2010

நடந்தாய் வாழி காவேரி

சென்னை தி.நகர் 'வாசகர் வட்டம்' குழுமத்தைச்சேர்ந்த திருவாளர்கள் சிட்டி, மற்றும் தி.ஜானகிராமன் இணைந்து எழுதிய நடந்தாய் வாழி காவேரி என்ற அற்புத நூலுக்கு மதிப்புரை எழுதும் தகுதியெல்லாம் எனக்கு இல்லையாதலால், இதை மதிப்புரை எனக்கொள்ள வேண்டாம். நூலைப்படித்து வியந்த (வியக்கும்) ஒரு வாசகி/ரசிகையின் எண்ணத்தில் உருவான சில வரிகள் எனக்கொள்ளலாம். இந்நூல் என்னை வந்தடைந்ததே ஒரு சுவையான கதையென்றாலும், அதை பின்னூட்டத்தில் வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் நேரடியாக உள்ளே.

முன்பு வெளிநாட்டு பயணக்கட்டுரைகள் என்றாலே விரும்பிப் படிக்கும் ஆர்வம் கொண்ட எனக்கு சிறிது காலத்திலேயே அவை கிட்டத்தட்ட ஒரே நோக்கில் (தமிழில்: ஸ்டீரியோ டைப்) பயணித்து சலிப்பைத் தருகின்றனவோ என்று தோன்றத்துவங்கி விட்டது. பிரமாண்டமான விமான நிலையங்கள், உயரமான கட்டிடங்கள், கட்டுரையாளர் உணவகங்களில் சைவம் கிடைக்காமல் அவதிப் பட்டது, அங்குள்ள தமிழ்க்குடும்பங்களின் ஆதரவு, உபசாரம் மற்றும் உதவிகள், அவற்றுக்கு நன்றிக்கடனாக அவர்களைப்பற்றி சில வரிகள் அல்லது சில பக்கங்கள் (உதவியின் அளவைப்பொறுத்து).... இப்படியாக சலிப்பைத்தந்த வேளையில், தமிழ்நாட்டுக்குள்ளேயே (மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளில்) பயணித்து எழுதப்பட்ட, வழக்கமான வரைமுறைகளை மீறி, சரியாகச் சொன்னால் அவற்றுக்கு அப்பாற்பட்டு,  கையில் எடுத்தால் கீழே வைக்க மனமில்லாத அளவுக்கு ஒரு தேர்ந்த நாவலையும் தோற்கடிக்கும் சுவாரஸ்யத்துடன் எழுதப்பட்ட 'நடந்தாய் வாழி காவேரி' எனும் இந்நூலின் துவக்கமே அருமை....

சில இடங்களின் வர்ணனைகள் நூல் எழுதப்பட்ட காலத்தில் இருந்த நிலைமை சார்ந்தது, இப்போது மாறியிருக்கலாம். 'மாயவரத்தின் பிரதான சாலையிலிருந்து கிழக்கு நோக்கிப்பிரியும் ஒரு மண் சாலையில் ஒரு கைகாட்டி 'காவேரிப்பட்டினம்' என்று காட்டிக்கொண்டிருக்க அது சோழர்களின் துறைமுகமான 'காவிரி புகும் பட்டினம்' செல்லும் சாலையெனத் தெரிகிறது. ஒரு காலத்தில் துறைமுகத்திலிருந்து தலைநகர் உறையூர் செல்ல அமைக்கப்பட்ட நேர் சாலை இப்போது மணல் சாலையாக, இருபக்கமும் கருவேலமரங்கள் தோரணம் கட்டி நிற்க, சிள்வண்டுகளை இரைய விட்டிருக்கிறது' என்ற துவக்கமே நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. காவிரியை, தலைமுதல் கால்வரை நேரில் கண்டு ரசிக்கும் ஒரு பயணம் மேற்கொண்டால் என்ன என்று தோன்றியதாகச்சொல்லும் நூலாசிரியர்கள், 'செயற்கைக்கோள்கள் சந்திரனையும் சுக்கிரனையும் வலம் வந்துகொண்டிருக்கும் இந்த விஞ்ஞான யுகத்தில் இதென்ன விபரீத எண்ணம்?' என்று தோன்றியதையும் ஒப்புக் கொள்கிறார்கள். சென்னையிலிருந்து தனி வாகனத்தில் நண்பர்கள் சிலருடன் புறப்படும் அவர்கள் நேராகச்செல்வது சீரங்கப்பட்டணத்துக்கு. அதிலிருந்து காவிரிக்கரையூடாகவே செல்லும் அவர்கள் குடகுமலையை அடைந்து, மெர்க்காராவில் தலைக் காவிரியிலிருந்து, பயணித்து வருவதாக சம்பவம். 

 
ஆனால் அதை அவர்கள் வரிவரியாக விளக்கும் முறையில், நாம் நூலைப்படிப்பதாகத் தெரியாது. அந்த வாகனத்தின் முன்வரிசையில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பார்த்து ரசித்துக்கொண்டே வருவதான உணர்வு நம்மை ஆட்கொள்ளும். அங்கங்கே வரம்புமீறாத இயல்பான நகைச்சுவை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும். தலைக்காவிரியை நோக்கிப் போகும்போது, 'சித்தாப்பூர் என்னும்  ஊரில் வர்ணா பாம்புகள் அதிகம் என்று ஒரு புத்தகத்தில் படித்துவிட்டு பயந்துகொண்டே அந்த ஊருக்குள் நுழைய, வர்ணாவும் இல்லை பாம்பும் இல்லை. வர்ணம் அடித்த வீடுகளும் கடைகளும் தென்பட. காருக்கு தீனி வாங்கும் இடத்தில் அங்கிருந்தவனிடம் வர்ணா பாம்பு எங்கே என்று கேட்க, அவன் பேந்த பேந்த விழித்துவிட்டு, தான் பிறந்ததிலிருந்து ஒரு பாம்பைக்கூட அங்கு பார்த்ததில்லை என்றும், பாம்பாட்டியின்  கூடையில்தான் பார்த்திருப்பதாகவும் விளக்கும் இடம் ஒரு உதாரணம். அதைப்படித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். மெர்க்காராவில் மேகமூட்டங்களுக்கு மத்தியில் நுழைந்து பயணம் செய்யும்போதும், திடீரென பிடித்துக்கொள்ளும் மழையில் நனைந்துகொண்டே பொருட்களை இறக்கும்போதும், நாமும் நனைகிறோம். ஆடுதாண்டு காவிரியைக் காணும்போதும், பன்னாரிகட்டா பண்னையில் தங்கும்போதும் அப்படியே. ஒகேனக்கலில் ஒரு மன்னார்குடி மாமியின் குடிசை உணவகத்தில் மிளகாய் வத்தல்குழம்பு சாப்பிடும்போதும் நாமும் அதை அனுபவிக்கிறோம். நூலாசிரியர்களின் எழுத்தாற்றல் அத்தகையது. அவற்றின் சுவையை பாமரத்தியான எனக்கு சொல்லத் தெரியவில்லை. காவிரித்தாயின் இதயமான மேட்டூர் அணை பற்றி மட்டுமல்ல, அங்கங்கே உள்ள தடுப்பணைகள் பற்றியும் கூட சுவையான தகவல்கள். வழியில் அமைந்துள்ள திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடிலில் பெறும் சுவையான அனுபவங்கள். எதைச்சொல்வது, எதை விடுவது. காவிரியோடு கொள்ளிடம் கண்ட அனுபவங்களைச் சொல்லும்போது, அருகே அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் ஒரு கிளைப்பயணம் ('விஸிட்' என்று சொன்னால் சட்டென விளங்கும் அளவுக்கு ஆங்கிலம் நம் மீது அமர்ந்துவிட்டது). அந்த அத்தியாயம் துவங்குவதே ஒரு அழகு....

'தொலைவில் நரைநிறத்தில் கோபுரம் தெரியும்போதே மனம் நெகிழத் துவங்கிவிடும். அங்கே செல்லும் ஒவ்வொருமுறையும் ஏற்படும் அனுபவம். ராஜேந்திர சோழன் ஏன் இதைக்கட்டினான்?. தஞ்சையில் ராஜராஜேச்சுரத்தை தந்த த்ந்தையை மிஞ்சவா?. அப்படியானால் அபாரமாகத் திட்டமிட்ட கோபுரத்தை ஏன் பாதியில் மழித்துக் குட்டையாக்கினான்?. எந்த தோல்வி, அல்லது உணர்வு அவனைத்தடுத்தது?. வளமான காவிரிக்கரையை விட்டு வறண்ட இப்பகுதியில் ஏன் இதைக்கட்டினான்?. இப்பகுதி மக்களுக்கும் ஒரு அக வாழ்வைத்தரவா?'.... இப்படி நீண்டு செல்லும் நூலாசிரியர்களின் விளக்கம், பின்னர் கொள்ளிடத்தில் 'கீழணை' கட்ட கற்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம், இக்கோயிலின் ராஜ மதிலைத் தகர்த்து கருங்கற்களை எடுத்துச்சென்ற சோகத்தைச் சொல்லும்போது நம் மனமும் அழும். (இன்றைக்கும் ராஜ மதிலின்றி, திறந்த கோயிலாகத்தான் நிற்கிறது கங்கை கொண்ட சோழீச்சுரம்).

கல்லணையில் துவங்கி பிரியத்துவங்கிய காவிரியின் கிளையாறுகள், தண்ணீரைப்பிரித்து எடுத்துச்செல்ல, கும்பகோணம் வரும்போதே காவிரி சிறுத்துவிடுகிறது. எனவே, கும்பகோணத்துக்கு கிழக்கே வீரசோழன் கிளைக்கும்போது, 'காவிரி தந்து, தந்து மெலிந்துகொண்டே போவதைப் பார்க்கும்போது நம் மனதில் சோகம் தலைதூக்குகிறது' என்று நூலாசிரியர்கள் எழுதும்போது நம் மனதையும் அந்த உணர்வு அழுத்துகிறது. காவிரிக்கரையில் வளர்ந்த கலாச்சாரம்தான் எத்தகையது, பண்பாடுதான் எவ்வளவு உன்னதமானது..!. குழாயிலும்தான் தண்ணீர் வருகிறது. அதுவே ஆற்றில் ஓடும்போது இப்படியா பாட்டாகக் கேட்கும், இசையாக மலரும், பண்பாடாக வளரும், கோயிலாக உயரும்...!!!.

ஆயிரம் தடுப்புக்களில் இன்று காவிரி சிறைப்பட்டிருக்கலாம். ஆனால் அன்றைக்கு கல்லணைகூட கட்டப்படாத நிலையில் கரைபுரண்டு ஓடிய காவிரியைப்பார்த்து இளங்கோவடிகள் ஆர்ப்பரித்தது போல இந்நூலைப்படித்தபின் நமக்கும் ஆர்ப்பரிக்கத்தோன்றுகிறது...
'காவிரி போற்றுதும்.... காவிரி போற்றுதும்...'    

இந்நூல் என்னை வந்தடைந்த கதை (போரடிக்காவிட்டால் படியுங்கள்)...

நான் திருமணத்துக்கு முன் லார்ஸன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, சென்னை அண்ணாசாலையிலுள்ள 'தேவநேயப்பாவாணர் அரசு மத்திய நூலக'த்தில் உறுப்பினர் அட்டை மூலம் நூல்கள் எடுத்துச்சென்று படிப்பது வழக்கம். அப்படி ஒருமுறை பார்த்துக்கொண்டு வந்தபோது, இடையிடையே புகைப்படங்களுடன் கூடிய 'நடந்தாய் வாழி காவேரி' என்ற தலைப்பிட்ட தடிமனான புத்தகம் கண்ணைக் கவர, எடுத்து சிலவரிகளைப் படித்தபோது மனதைக்கவரவே,  உறுப்பினர் அட்டை மூலம் வீட்டுக்கு எடுத்துச்சென்று படிக்கத்துவங்கியதும் அதில் கரைந்து மூழ்கிப்போனேன். திருப்பிக்கொடுக்க வேண்டிய ஒருவாரத்துக்குள் மூன்றுமுறை படித்துவிட்ட எனக்கு, இது என்னிடம் இருக்க வேண்டிய புத்தகம் என்று தோன்றவே, பதிப்பகத்தின் பெயரைக் குறித்துக்கொண்டு திருப்பியளித்து விட்டேன். அன்றிலிருந்து தினமும் மாலை பெரிய  புத்தகக்கடைகளில் ஏறி இறங்கினேன். பூங்காநகரிலுள்ள சி.எல்.எஸ்.புத்தகக்கடை, அண்ணாசாலை ஹிக்கின்பாதம்ஸ் உள்பட பெரிய புத்தகக்கடைகள் எதையும் விடவில்லை. ஆனால் இந்த புத்தகம் கிடைக்கவில்லை (அதில் ஒரு சின்ன லாபம். நான் பலநாள் தேடிக்கொண்டிருந்த வேறு சில புத்தகங்கள் கிடைத்தன).

அலுவலகத்தில் என்னோடு பணியாற்றிய நண்பர் வில்லியம்ஸிடம் சொன்னபோது, நேரடியாக பதிப்பகத்துக்கே போய்க்கேட்டுப்பாரேன் என்றார். தி.நகர் தணிகாச்சலம் செட்டி சாலையிலுள்ளது என்றதும் அவருக்கு உற்சாகம். அதன் அருகிலுள்ள ராஜா தெருவில்தான் அவர் வீடு. நானும் வருகிறேன் என்று வந்தார். கதவிலக்கம் தெரியாததால் நடந்துபோய்க்கொண்டிருந்தோம். வழியில் தமிழ்வாணன் அவர்களின் மணிமேகலைப்பிரசுரம் தென்பட்டது. 'இவங்களும் பதிப்பாளர்களாதலால் இவங்க கிட்டே கேட்டுப்பார்' என்று உள்ளே அனுப்பினார். அலுவலகத்தில் ஒருவர் மட்டும் இருந்தார். சுற்றிலும் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 'வாங்கம்மா என்ன புத்தகம் வேணும்?' என்றார், கனிவோடு. 'இல்லீங்க சார், நான் இங்கே புத்தகம் வாங்க வரலை. புக்வெஞ்ச்சர் பப்ளிகேஷன்ஸ் எங்கே இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?' என்று நான் கேட்டதும், அவர் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை சட்டென்று எழுந்து வாசலுக்கு வந்தவர், 'இப்படியே நேரா போனீங்கன்னா இந்தி பிரச்சார் சபா வரும். அதுக்கு எதிரில் 'வாசகர் வட்டம்' அப்படீன்னு ஒரு போர்டு போட்டிருக்கும். அதுதாம்மா'  என்று தெளிவாக பதிலளித்தார். ஆகா என்ன கனிவு, என்னஅக்கறை.. தமிழ்வாணன் இந்த விற்பனையாளரை எங்கே பிடித்தார்?. இவருடைய கனிவுக்காகவே அடுத்தமுறை மணிமேகலைப்பிரசுரம் வந்து எதாவது புத்தகம் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே நண்பருடன் நடந்தேன். (அதன்பின் இன்னொரு நாள் அங்கு சென்று இரண்டு புத்தகங்கள் வாங்கியது வேறு கதை).


அவர் சொன்ன போர்டு தென்பட்டது வாசலில் காம்பவுண்ட்டுக்குள் மரங்கள் நிறைந்த அழகான வீடு. கண்ணாடியணிந்த, பார்த்தாலே மதிக்கத்தக்க ஒரு அம்மா வந்து விசாரிக்க, 'நடந்தாய் வாழி காவிரி' புத்தகம் வேண்டும் என்றோம். 'உட்காருங்க' என்று சொன்னதோடு வாசகர் வட்டம் வெளியிட்ட நூல்களடங்கிய லிஸ்ட் ஒன்றையும் தந்துவிட்டு உள்ளே சென்றார். எங்கள் இருவரையும் தவிர இன்னொரு நடுத்தர வயதைக்கடந்த ஆள் மட்டும் இருந்தார். 'எவ்வளவு கனிவா பேசுறாங்க' என்று நண்பர் வில்லியம்ஸிடம் சொன்னபோது, அந்த இன்னொரு ஆள், எங்களைப்பார்த்து 'இவங்கதான் தியாகி சத்தியமூர்த்தியோட மகள் லட்சுமியம்மா' என்றார். இதைக்கேட்டதும் ஆச்சரியத்தில் மூழ்கினேன். எவ்வளவு சிம்பிளா இருக்காங்க..!!. அவங்க புத்தகத்தோடு அறையிலிருந்து வெளியில் வந்தபோது என்னையறியாமல் எழுந்து நின்று கைகூப்பினேன் 'நீங்க யாருன்னு எனக்கு இப்போதான் தெரியும்' என்று சொன்னதும் அழகான சிறிய புன்னகையோடு 'உட்காருங்க' என்று சொல்லிவிட்டு பில் போட ஆரம்பித்தார். இப்போது நினைத்தாலும், லட்சுமியம்மா அவர்களை அன்று பார்த்த தோற்றம் மனதில் நிழலாடுகிறது.

1 comment: